Site icon ilakkiyainfo

எனது பிள்ளைகள் காணாமல் போனதற்கு கருணா அம்மானே பொறுப்பு’

விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைக்கப்பட்ட பின்னர் காணாமல் போயுள்ள தனது பிள்ளைகள் தொடர்பில் கருணா அம்மான் தான் பொறுப்பு கூற வேண்டும் என ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் சாட்சியமளித்த 57 வயதான தந்தையொருவர் தெரிவித்துள்ளார்.

விடுதலைப்புலிகளின் கிழக்கு மாகாணத் தளபதிகளில் ஒருவராக விளங்கிய கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தற்போது அரசாஙகத்தில் மீள்குடியேற்ற துணை அமைச்சராக பதவி வகித்து வருகின்றார்.

வடக்கு- கிழக்கு மாகாணங்களில் காணாமல் போனவர்கள் தொடர்பாக விசாரணைகள நடத்திவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் கிழக்கு மாகாணத்திற்கான முதலாவது அமர்வு இன்று ஆரம்பமானது.

இன்று வியாழக்கிழமை தொடக்கம் நாளை மறுதினம் சனிக்கிழமை வரை மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆணைக்குழுவின் அமர்வுகள் நடைபெறுகின்றன.

இன்று முதலாவது நாள் செங்கலடி பிரதேச செயலகத்தில் நடைபெற்ற அமர்வின் போது அந்தப் பிரதேசத்திலுள்ள 54 சாட்சிகள் விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்தார்கள்.

இன்றைய விசாரணையின் போது சாட்சியளித்த களுவன்கேனியைச் சேர்ந்த 7 பிள்ளைகளின் தந்தையான கணபதிப்பிள்ளை தங்கராசா அவர்கள், கருணா அம்மானின் ”வீட்டுக்கு ஒரு பிள்ளை” என்ற திட்டத்தின் கீழ் அவரது ஆட்களினால் தனது இரு பிள்ளைகளும் பிடித்துச் செல்லப்பட்டதாகக் கூறுகின்றார்.

சிறு வயதிலே பிடித்துச் செல்லப்பட்ட தனது இரு பிள்ளைகள் தொடர்பில் அவர்தான் பதில் தர வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இன்றைய அமர்வின் போது சாட்சியமளிக்க வந்தவர்களில் பலரது சாட்சியங்கள் கிழக்கு மாகாணம் விடுவிக்கப்பட்ட பின்னர் காணாமல் போனவர்கள் தொடர்பாகவே இருந்தது.

பாவற்கொடிச்சேனையை சேர்ந்த 34 வயதான தவராசா உத்தரை அவர்கள், 2009 மார்ச் மாதம் 3 ஆம் திகதி தனது கணவர் விஷேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டு, காணாமல் போயுள்ளதாக தனது சாட்சியத்தில் கூறினார்.

இந்த ஆண்டு ஜனவரி மாதம் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்திற்கு புலனாய்வு துறையினரால் அழைக்கப்பட்டு வாக்கு மூலமொன்று பெறப்பட்டு மரணச் சான்றிதழ் மற்றும் நஷ்ட ஈடு வழங்குதல் தொடர்பாக கூறப்பட்டாலும் அதனை தான் மறுத்து விட்டதாகவும் தனது சாட்சியத்தில் அவர் குறிப்பிட்டார்.

Exit mobile version