இருபது-20 உலக கிண்ண சூப்பர் 10 சுற்றில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா ; 7 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.
5ஆவது இருபது-20 உலக கிண்ணத் தொடரின் சூப்பர்-10 சுற்று எனப்படும் பிரதான சுற்று போட்டி இன்று ஆரம்பமானது. சூப்பர்-10 சுற்றின் முதல் ஆட்டத்தில் இந்தியாவும், பாகிஸ்தானும் மிர்பூர் தேசிய மைதானத்தில் இன்று பலப்பரீட்சை நடத்தின.
இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதனையடுத்து பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. பாகிஸ்தான் அணி 20 ஓவர்களுக்கு 7 விக்கெட்டை இழந்து 130 ஓட்டங்களை மாத்திரம் எடுத்து இந்தியாவிற்கு 131 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது.
பாகிஸ்தான் அணியில் இறுதியில் பிலாவல் பாத்தி ஓட்டம் எதுவும் எடுக்காமல் களத்தில் இருந்தார். அணியில் அதிகப்பட்சமாக உமர் அக்மல் 33 ஓட்டங்களை எடுத்து ஆட்டம் இழந்தார்.
கம்ரான் அக்மல் 8 ஓட்டங்களுடனும், ஹபீஸ் 15 ஓட்டங்களுடனும், அமகத் செயத் 22 ஓட்டங்களுடனும், சொயிப் மாலிக் 18 ஓட்டங்களுடனும் அப்ரிடி 8 ஓட்டங்களுடனும், சோகிப் மசூத் 21 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.
இந்திய அணியில் மிஸ்ரா 2 விக்கெட்டையும், ஜடேஜா, சமி மற்றும் புவனேஷ்வர் குமார் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.
இதனையடுத்து 131 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கோடு களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்ப வீரர்களாக ஷிகர் தவாண் மற்றும் ரோஹித் சர்மா களமிறங்கியனர். சில பவுண்டரிகள் அடித்தாலும் ஷிகர் தவாண் தடுமாற்றத்துடனே காணப்பட்டார். உமர் குல் வீசிய ஓவரில் ஒரு பவுண்டரி அடித்திருந்த தவாண் அடுத்த பந்திலேயே அஜ்மலிடம் கேட்ச் கொடுத்து 30 ஓட்டங்களுக்கு வெளியேறினார்.
முதல் சில ஓவர்களில் நிதானித்து, பின்னர் அதிரடியாக ஆடிய ரோஹித் சர்மா, தனது ஆட்டத்தில் இரண்டு சிக்ஸர்களையும் விளாசினார். ஆனால், சயீத் அஜ்மல் வீசிய சுழற்பந்தை சரியாக கணிக்காமல் 24 ஓட்டங்களுக்கு ரோஹித் சர்மா ஆட்டமிழந்தார்.
பின்னர் களமிறங்கிய யுவராஜ் சிங், ஒரு ஓட்டத்துடன் மாத்திரம் எடுத்த நிலையில் வேகப்பந்து வீச்சாளர் பிலாவல் பட்டி வீசிய பந்தில் போலல்டாகி ஏமாற்றமளித்தார்.
ஹபீஸ் வீசிய பந்தில் ரெய்னா கொடுத்த கேட்ச்சை அப்ரிடி தவறவிட்டார். பட்டி வீசிய அடுத்த ஓவரிலேயே ரெய்னா இரண்டு பவுண்டரிகள் அடித்தார். மறுமுனையில் விராட் கோலியும் மோசமான பந்துகளை பவுண்டரிக்கு விரட்ட இந்திய அணியின் ஓட்ட எண்ணிக்கை வேகமாக உயர்ந்தது.
பாரபட்சமின்றி அனைத்து பந்துவீச்சாளர்களின் ரெய்னா – கோலி இணை எளிதாக சமாளித்து ஆடியது. கடைசி இரண்டு ஓவர்களில் 7 ஓட்டங்கள் மாத்திரமே தேவை என்ற நிலையில் உமர் குல் வீசிய 19ஆவது ஓவரில் ரெய்னா ஒரு சிக்ஸர் மற்றும் 1 ஓட்டம் அடிக்க, 7 விக்கெட் விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக இந்தியா இந்தப் போட்டியை வென்றது.
விராட் கோலி 32 பந்துகளில் 36 ஓட்டங்களும், ரெய்னா 28 பந்துகளில் 35 ஓட்டங்களும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.