தற்காப்புக்கு மட்டும் சுடுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ள உக்ரேன் வீரர்கள், விமானத்தளத்தில் உள்ள பில்டிங்குக்குள் புகுந்து கொண்டு, கதவுகளை மூடிக்கொண்டனர். இதையடுத்து பொதுமக்கள் விமானப்படை தளத்தின் கண்ணாடி ஜன்னல்களை அடித்து உடைக்க தொடங்கினர்.
இவர்களை உள்ளே விட்டுவிட்டு, விமானப்படை தளத்துக்கு வெளியே ரஷ்ய ராணுவத்தினர் நின்றிருந்தனர். பில்டிங்குக்குள் இருந்து உக்ரேன் வீரர்கள் புகை குண்டுகளை (smoke bombs) பொதுமக்களை நோக்கி வீச தொடங்கினர்.
அவற்றில் சில குண்டுகளை எடுத்து பில்டிங்குக்குள் இருந்த விமானப்படையினரை நோக்கி வீசினர் பொதுமக்கள்! இந்த நிலையில், ராணுவத்தள பிலிடிங்கின் கூரையின் மேல் ஏறிய அந்த விமானப்படை தளத்தின் தளபதி, வெளியே நின்றிருந்த ரஷ்ய ராணுவ அதிகாரிகளை நோக்கி உரத்த குரலில், “இது என்னுடைய தலைமையில் உள்ள ராணுவத்தளம்.
இதை காப்பாற்ற வேண்டியது எனது கடமை. அதற்கு என்ன விலை கொடுக்கவும் தயாராக உள்ளேன்” என்றார் கையில் எந்திரத் துப்பாக்கியுடன்.
இதையடுத்து, ‘பொதுமக்களை’ அமைதிப்படுத்திய ரஷ்ய ராணுவ அதிகாரிகள், விமானப்படை தளத்துக்கு உள்ளே சென்று உக்ரேன் ராணுவ தளபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தினர் (மேலே போட்டோ பார்க்கவும்). அதையடுத்து ரஷ்ய ராணுவ அதிகாரிகள் அங்கிருந்த பொதுமக்களை ராணுவதளத்தை விட்டு வெளியேறுமாறு கூறியதையடுத்து, பொதுமக்கள் வெளியேறினர்.
அடுத்த சில நிமிடங்களில், தளத்தில் இருந்த உக்ரேன் விமானப்படை வீரர்கள் அனைவரும், தளத்தை காலி செய்துவிட்டு தமது ஆயுதங்களுடன் அங்கிருந்த வாகனங்களில் வெளியேறினர்.
இதையடுத்து மீண்டும் உள்ளே வந்த பொதுமக்கள், விமானப்படை தளத்தில் இருந்த உக்ரேன் நாட்டு கொடியை இறக்கிவிட்டு, தாம் கொண்டு வந்திருந்த வெள்ளையும், நீலமும் கலந்த கொடியை ஏற்றினர்.
அந்தக் கொடி, ரஷ்ய கடற்படையின் கொடி! இந்த சம்பவம் பற்றி கருத்து தெரிவித்துள்ள உக்ரேன் பாதுகாப்பு அமைச்சின் தகவல் தொடர்பாளர், “விமானப்படை தளத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதாக கூறுகிறார்கள்.
அங்கு வந்த சுமார் 200 பேரும் அந்த நகரத்தை சேர்ந்தவர்கள் அல்ல. அவர்களுக்கு பாதுகாப்பாக ரஷ்ய ராணுவ அதிகாரிகளும் வந்து, விமானப்படை தளத்துக்கு வெளியே நின்றிருந்தனர். தேவையற்ற மோதலை தவிர்ப்பதற்காக நாம் விமானப்படை தளத்தை மூடிவிட்டு வெளியேறியுள்ளோம்” என்றார்.