மதுரை: தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகனும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரியை, ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ இன்று சந்தித்து பேசியது தி.மு.க. தலைமையை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
மு.க.அழகிரி இல்லத்தில் இன்று காலை 9 மணிக்கு இந்த சந்திப்பு நடந்துள்ளது. அப்போது, இருவரும் நலம் விசாரித்ததோடு, அரசியல் நிலவரம் குறித்து 35 நிமிடங்கள் நேரம் பேசிக் கொண்டிருந்தனர்.
பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விருதுநகர் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுகிறார். இந்த சந்திப்பின்போது, அழகிரியின் ஆதரவை வைகோ கேட்டார். அப்போது, தனது ஆதரவாளர்களுடன் ஆலோசித்து முடிவு தெரிவிப்பதாக கூறினார்.
ஏற்கனவே, பிரதமர் மன்மோகன் சிங், பாஜக தலைவர் ராஜ்நாத் சிங், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டவர்களை அழகிரி சந்தித்து பேசியது அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ இன்று அழகிரியை சந்தித்திருப்பது தி.மு.க. தலைமையை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
தி.மு.க.வில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள அழகிரியுடன், கட்சியினர் யாரும் தொடர்பு வைத்திருக்க கூடாது என்று அண்மையில் தி.மு.க. பொதுச் செயலாளர் அன்பழகன் எச்சரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருணாநிதியை காப்பதுதான் முதல் கடமை: அழகிரி ஆவேசம் (படங்கள்)
24-03-2014
விருதுநகர்: முதலில் கட்சியையும் தலைவரையும் காக்க வேண்டும், பின்னர் யாருக்கு ஆதரவு என்பதை அறிவிப்பேன் என்றும் மு.க.அழகிரி ஆவேசத்துடன் கூறினார்.
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் இன்று நடைபெற்ற மு.க.அழகிரி இளைஞர் பாசறைத் தலைவர் தமிழ்செல்வகுமார் மகள் கலைசேனா காதுகுத்து விழாவில் மு.க.அழகிரி கலந்துகொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், யாரோ இருவரால் விருதுநகர் மாவட்டத்தில் தி.மு.க சிதைந்து வருகிறது. இப்படி ஒரு வியாபாரியை கட்சியில் கொண்டுவந்து சேர்த்தது நான் செய்த தவறுதான்.
அவர் இந்தத் தேர்தல் தோல்விக்குப் பிறகும் கட்சியில் இருப்பாரா என்பது தெரியாது. இந்த வியாபாரி ரத்தினவேல் என்பவரை விருதுநகர் மக்களவைத் தொகுதி வேட்பாளராக கொண்டு வந்துள்ளார். இந்த ரத்தினவேலுவுக்கும் கட்சிக்கும் சம்பந்தமே கிடையாது.
ஆனால், ரத்தினவேல் எனக்கு நல்ல நண்பர். அப்பாவுக்குத் தப்பாமல் பிறந்தவர் என என்னைப்பற்றி புத்தகமே வெளியிட்டவர் அவர். ஆனால், நண்பர் என்பதற்காக ஒருவரை நான் எம்.எல்.ஏ. ஆக்க முடியுமா? எம்.பி. ஆக்க முடியுமா?
கடந்த 1957ல் சுயேட்சையாகப் போட்டியிட்டு 1.20 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் இந்தத் தொகுதியில் வெற்றிபெற்றவர் முத்துராமலிங்கத்தேவர். அப்போது திமுகவில் நாமக்கலில் ஏ.வி.கே.சம்பத், திருவண்ணாமலையில் தர்மலிங்கம் ஆகியோர் வெற்றிபெற்றனர்.
முன்பெல்லாம் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் தேர்வு செய்யப்படும்போது அவர் கட்சியில் ஆற்றிய பணிகள், வகித்த பொறுப்புகள், செய்த தியாகங்கள் குறித்து கேள்விகள் கேட்கப்படும்.
ஆனால், இப்போது நடந்துள்ள வேட்பாளர் தேர்வில் தலைவர் சும்மாதான் அமர்ந்திருக்கிறார். அவருக்கு அருகில் இருப்பவர் வேட்பாளராகப் போட்டியிட விருப்பம் தெரிவித்தவரிடம் உன்னிடம் எவ்வளவு காசு இருக்கிறது எனக் கேட்கிறார்.
கட்சித் தலைவருக்குத் தெரியாமலேயே திமுகவில் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். இப்போது திருநெல்வேலி தொகுதியில் போட்டியிடுபவர் யார் என்று யாருக்காவது தெரியுமா?
அவர் பெயர்கூட நினைவில்லை. கோயிலில் அறங்காவலராக இருந்தவர் அவர். யாரோ சிலருக்கு சொந்தக்காரராம். அதனால் வேட்பாளராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஒரு பெரிய முதலை வாயில் சிக்கிக் கொண்டுவிட்டார். பாவம் அவர். கட்சியில் பல்வேறு பொறுப்புக்களை வகித்தவர் பிச்சாண்டி.
திருவண்ணாமலையில் அவரது தம்பி கருணாநிதிக்கு சீட்டு கேட்டபோது கொடுக்க மறுத்துவிட்டார்கள். அவர்களுக்குத்தான் கருணாநிதி என்றாலே பிடிக்காதே.
இரு நாள்களுக்கு முன் செய்தித்தாளில் ஒரு அறிக்கை பார்த்தேன். மதுரை வரும் திமுக தலைவர் எனது வீட்டுக்கு வந்தால் தலைவரையே கட்சியிலிருந்து நீக்கிவிடுவார்கள்போல. இன்னும் என்னவெல்லாம் செய்யக் காத்துக் கொண்டிருக்கிறார்களோ. கலைஞரையும் கட்சியையும் காப்பாற்றத்தான் நான் வந்திருக்கிறேன்.
திமுகவிலிருந்து மு.க.அழகிரி விலக்கப்பட்டதால் ஏதாவது பாதிப்பு இருக்குமா என தென்காசி தொகுதி திமுக கூட்டணி வேட்பாளரிடம் நிருபர்கள் கேட்டதற்கு, அவர் என்ன பதில் கூறியிருக்க வேண்டும்? இது உட்கட்சி பிரச்னை. இதுபற்றி நான் கருத்துக்கூற விரும்பவில்லையெனக் கூறியிருந்தால் அவர் உண்மையிலேயே மதிக்கத்தக்கவர்.
ஆனால், திமுவிலிருந்து மு.க.அழகிரியை விலக்கியதால் திமுகவுக்கும் எந்த பாதிப்பும் இல்லை, எனக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்று கூறியுள்ளார்.
எப்படி பாதிப்பில்லாமல் போய்விடும் (சிரிப்புடன்). உனது சமுதாயத்தைச் சார்ந்த பெண்ணைத்தான் நான் திருமணம் செய்துள்ளேன். தேர்தலுக்குப் பின் பார். எப்படி பாதிப்பு என்று தெரியும். நீ 3வது இடம் பெற்றாலே இது பெரிய விஷயம். எனது சொந்தங்கள் அங்கு நிறைய உள்ளனர். நிச்சயமாக உனக்கு பாடம் புகட்டுவேன்.
மதுரையில் வைகோ என்னைச் சந்தித்தார். நாங்கள் பழைய விஷயங்கள் குறித்து நீண்ட நேரம் பேசினோம். பேசி முடித்துப் புறப்படும்போது எனக்கு ஆதரவு கொடுங்கள் என வைகோ கேட்டார்.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களும் ஆதரவு கேட்டனர். ஆனால், தொண்டர்களுடன் கலந்து ஆலோசித்து கூறுவதாகத் தெரிவித்தேன். முதலில் கட்சியையும் தலைவரையும் காக்க வேண்டும். பின்னர் யாருக்கு ஆதரவு என்பதை அறிவிப்பேன் என்றார்.