பூந்தோட்டம் முகாமிலிருந்து ஆளும் தரப்பு அரசாங்க தமிழ் அங்கத்தவ ஒருவரின் உதவியுடன் வெளிவந்த கோபி, பின்னர் கட்டாருக்குச் சென்றதாக சந்தேகிக்கப்படுகிறது. அந்த நட்டில் சிலகாலம் வேலை செய்தபின் கோபி ஐரோப்பாவுக்குச் சென்றார்.
ஐரோப்பாவின் பல பகுதிகளுக்கும் பரவலாக பயணம் செய்த அவர் நோர்வேக்கும் சென்றார். இப்பொழுது சந்தேகிக்கப்படுவது என்னவென்றால், ஐரோப்பாவின் முன்னணி எல்.ரீ.ரீ.ஈ செயற்பாட்டாளரும் தற்பொழுது தன்னைப்பற்றிய குறைந்தளவு சுயவிபரங்களுடன் உள்ள உயர்மட்ட தலைவருமான நெடியவன் மற்றும் அவரது சிரேட்ட உதவியாளர்களான இரும்பொறை மற்றும் நந்தகோபன் ஆகியோரை கோபி தனது சொற்ப கால ஐரோப்பிய வாசத்தின்போது சந்தித்திருக்கலாம் என்று.
அவர் பின்னர் ஸ்ரீலங்காவுக்கு திரும்பி ஒரு கனரக வாகன ஓட்டுனராக தொழில் புரிய ஆரம்பித்தார். அவர் அடிக்கடி கொழும்புக்கு பயணம் செய்வதுடன் முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய நகரங்களுக்கும் சென்று வந்தார்.
பாதுகாப்பு வட்டாரங்கள், வடக்கில் எல்.ரீ.ரீ.ஈக்கு புத்துயிர் ஊட்டும் ஒரு பணி கோபியிடம் ஒப்படைக்கப் பட்டிருந்தது என ஊகிக்கின்றன. வெளிப்படையாக அப்படியான ஒரு புத்துயிர்ப்பு முயற்சி வெற்றி பெற்றதோ அல்லது இல்லையோ அதைப்பற்றிக் கவலை இல்லை.
புலம்பெயர் பகுதியிலுள்ள புலிகளின் உயர்மட்டத்துக்கு முக்கியமானது என்னவென்றால், ஒரு சம்பவம் அல்லது தொடர்ச்சியான சம்பவங்கள் தமிழ் ஈழ மண்ணில் எல்.ரீ.ரீ.ஈ மீண்டும் செயல்படுவதற்கான முன்னறிவிப்பாக இருக்கவேண்டும் என்பதுதான்.
அதன்பின் வெளிநாட்டு எல்.ரீ.ரீ.ஈ பிரமாண்டமான பிரச்சாரத்தை மேற்கொள்வதுடன், நாங்கள் திரும்பவும் வந்துவிட்டோம் எனக்கூறி மிகப்பெரிய நிதி திரட்டலை மீண்டும் ஆரம்பிக்கும்.
இந்த மோசமான நடவடிக்கைக்கு எற்ற சிறந்த புலிகளின் கைப்பொம்மையாக கோபி புலிகளினால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்று தோன்றுகிறது. பாதுகாப்பு படைகள் இப்போது கோபியை பற்றியும் அவரது பணிகள் பற்றியும் அறிந்து கொண்டதினால் அவரைத் தேடத் தொடங்கியது.
அவர்கள் கோபியின் வீட்டுக்குச் சென்றபோது கோபியின் மனைவி தனது கணவர் இப்போது தன்னுடன் வசிப்பதில்லை என்றும் அவர் எங்கே இருக்கிறார் என்பது தனக்குத் தெரியாது என்றும் தெரிவித்துள்ளார். பின்னர் தேடப்படும் நபராக ஊடகங்களில் கோபி பற்றிய விளம்பரங்கள் பிரசன்னமாகத் தொடங்கின.
கோபி பற்றிய தேடல் நடந்து கொண்டிருந்த வேளையில் வேறு பல முன்னேற்றங்களும் இடம்பெற்றன. புலிகளின் மீள் செயற்பாடுகள் குறித்து கவலையடைந்திருந்த தமிழ் பொதுமக்களை சேர்ந்த அங்கத்தவர்கள் சிலரும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் துப்புகளை வழங்கத் தொடங்கினர். இவைகள் யாவும் ஸ்ரீலங்கா காவல்துறையின் பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் ஆராயப்பட்டு அதற்கேற்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
பதுக்கப்பட்டிருந்த ஆயுதங்கள்
அத்தகைய ஒரு துப்பு விஸ்வமடுவில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில் பதுக்கி வைக்கப் பட்டிருந்த ஒரு தொகை ஆயுதங்களை கண்டுபிடிக்க வழிகோலியது. அதில் மோர்ட்டார், ராக்கட் மூலம் இயக்கப்படும் கிரனைட்டுகள், கையெறி கிரனைட்டுகள், ஒரு கண்ணிவெடி, ரி-56 ஆயுதத்துக்கு பவிக்கப்படும் வெடிபொருட்கள் என்பன அடங்கியிருந்தன.
அந்த வீட்டின் குடியிருப்பாளர்களான 27 வயதுடைய நிதர்சனா என்கிற பெண், அவளுடைய தாய், மற்றும் சகோதரன் ஆகியோர் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். தாயும் சகோதரனும் விடுவிக்கப்பட்டு விட்டனர், ஆனால் நிதர்சனா மேலதிக விசாரணைகளுக்காக இன்னும் தடுத்து வைக்கப்பட்டுள்ளாள்.
பாதுகாப்பு அதிகாரிகள் தங்கள் விசாரணையை தொடக்கியபோது தாங்கள் ஒரு இக்கட்டான சூழ்நிலைக்குள் அகப்பட்டிருப்பதைக் கண்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
சேகரிக்கப்பட்ட தகவல்களின்படி, காணாமல் போனவர்கள், அல்லது காணாமற் போனவர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளவர்கள் பற்றிய பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள், போன்றவற்றில் தீவிரமாக ஈடுபட்டிருந்த சில நபர்கள் இதில் தொடர்பு பட்டிருப்பது வெளிப்படையாகத் தெரிய வந்தது.
இவர்கள் தவறவிடப்பட்டவர்கள் மற்றும் காணாமற் போனவர்களின் குடும்ப அங்கத்தவர்கள் அல்லது இறந்துவிட்ட எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்களின் உறவினர்களாக இருந்தார்கள்.
எல்.ரீ.ரீ.ஈ செயற்பாடுகளுடன் இவர்களுக்கு உள்ள தொடர்பு பற்றி ஆராய்வதற்காக பாதுகாப்பு அதிகாரிகள் இவர்களது நடத்தையை அல்லது நகர்வை கண்காணிக்க முயற்சித்தால் அது யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களை துன்புறுத்துவதாக அல்லது அரச இயந்திரங்களை பயன்படுத்தி மனித உரிமை பாதுகாவலர்களை கொடுமைப்படுத்துவதாக குற்றச்சாட்டுகள் எழக்கூடும்.
இது கணிசமான அளவு சர்வதேச அழுத்தங்களை ஜெனிவாவில் உள்ள ஐநா மனித உரிமைகள் சபையில் எதிர்நோக்கும் அரசாங்கத்துக்கு தீவிர சங்கடத்தை ஏற்படுத்தும்.
எனினும் பாதுகாப்பு துறை உயர்மட்டத்தினர் திடமான உறுதியுடன் இருந்தார்கள். புலிகளைப் பற்றி அறிவதற்கான புலனாய்வுகளை எந்தவித தடைகளும் இன்றி மேற்கொண்டு தொடரும்படி கட்டளைகள் வழங்கப்பட்டன.
சாத்தியமான எல்.ரீ.ரீ.ஈயின் புத்துயிர்ப்பு நாடு மற்றும் அதன் மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என சுட்டிக்காட்டப்பட்டது. எனவே விசாரணைகளை தொடர்ந்து மேற்கொண்டு நடவடிக்கைகளை எடுக்கவேண்டியது தலையாய கட்டாயமாக கருதப்பட்டது. இது தொடர்பாக ஜெனிவாவில் ஏற்படக்கூடிய வீழ்ச்சியை தனியாக கையாள முடியும் என்று வலியுறுத்தப்பட்டது.
பாதுகாப்பு சம்பந்தமான புலனாய்வு விசாரணைகளை தொடர்ந்து மேற்கொள்ளத் தடைகள் எதுவும் இல்லை என பச்சை விளக்கு காட்டப்பட்டது. தகவல் வழங்கும் வட்டாரங்களிடமிருந்து மார்ச் 13 ந்திகதி வியாழக்கிழமை காவல்துறை பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினருக்கு பெறுமதியான துப்பு ஒன்று கிடைத்தது.
அந்தப் பகுதியில் உள்ள தகவல் வட்டாரம் ஒன்றிலிருந்து கிடைத்த தகவல், கோபி என்கிற கஜீபனின் அடையாளத்தை ஒத்த ஒரு மனிதர் திருமதி ஜெயகுமாரி பாலேந்திராவின் வீட்டுக்குள் நுழைவதை கண்டதாக தெரிவித்தது.
ஜெயகுமாரி பாலேந்திரா
(ஜெயகுமாரி பாலேந்தரா,அவரது மூன்றாவது மகன் இறுதிக்கட்ட போரின்போது புலிகளினால் கட்டாய ஆட்சேர்ப்பு செய்யப்பட்டதனால் ஸ்ரீலங்கா பாதுகாப்பு படையினரிடம் சரணடைந்தார் அதன் பின் அவர் காணாமற் போனவராகி விட்டார். அவருடைய மற்ற இரண்டு மகன்களும் யுத்தத்தில் கொல்லப்பட்டு விட்டார்கள்.)
51 வயதான திருமதி. ஜெயகுமாரி பாலேந்திரா தனது மகளான 13 வயது நிரம்பிய விபுஷிகாவுடன் தர்மபுரம் பிரதேச புளியம்பொக்கணை பகுதியில் உள்ள முசலம்பிட்டி இந்திய வீட்டுத்திட்டத்தில் உள்ள 5ம் இலக்க வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.
இந்த தாயும் மகளும் ஊடகங்கள் மற்றும் மனித உரிமைகள் ஆர்வலர்கள் வட்டாரங்களில் மிகவும் நன்கு அறியப்பட்டவர்கள், இவர்கள் இருவரும் காணாமற் போக்கடிக்கப்பட்டவர்கள் மற்றும் காணாமற்போனவர்கள் தொடர்பாக நடத்தப்படும் பாரிய வெகுஜன ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பேரணிகளில் தவறாது பங்கெடுப்பவர்கள்.
இத்தகைய செயற்பாடுகளில் இந்த தாயும் மகளும் பங்கேற்பதுக்கு மிகவும் நல்ல காரணம் இருந்தது. ஒரு குடும்பம் என்ற வகையில் இவர்கள் இருவரும் இந்த கொடிய போரினால் பாதிக்கப்பட்டவர்களில அடங்குகிறார்கள், இவர்களின் நிலை மிகவும் பரிதாபகரமானது. ஜெயகுமாரியின் கணவர் இப்போது இல்லை.
சிலர் சொல்கிறார்கள் அடையாளம் தெரியாத நபர்கள் சிலரினால் கடத்தப்பட்டு அவர் காணாமற் போக்கடிக்கப் பட்டார் என்று, அதேவேளை யுத்தத்தின்போது ஷெல் தாக்குதலில் அவர் உயிரிழந்ததாக வேறுசிலர் சொல்கிறார்கள். ஜெயகுமாரி பாலேந்திராவின் மூத்த மகன் எல்.ரீ.ரீ.ஈயில் சோந்து திருகோணமலை மாவட்டத்தில் நடந்த மாவிலாறு போரில் கொல்லப்பட்டார். இரண்டாவது மகனும் தானாகவே எல்.ரீ.ரீ.ஈயில் சேர்ந்து முல்லைத்தீவு மாவட்டம் ஆனந்தபுரியில் நடைபெற்ற சமரில் கொல்லப்பட்டார்.
15 வயதாக இருந்த மூன்றாவது மகன் இறுதிக்கட்ட போரின்போது, முல்லைத்தீவு மாவட்டம் காரைத்துறைப்பற்றில் வைத்து மேஜர் எழிலன் என்கிற சின்னத்துரை சசிதரனால் கட்டாயமாக எல்.ரீ.ரீ.ஈ இராணுவத்தில் சேர்க்கப்பட்டார்.
மே 2009ல் நடந்த போரின் இறுதி வாரத்தில் எல்.ரீ.ரீ.ஈயின் பிடியில் இருந்து தப்பிய அவர் தனது தாயிடம் வந்து சேர்ந்தார். சரணடைந்த புலிகளில் ஒருவராக தாயார் அவரை பாதுகாப்பு படைகளிடம் ஒப்படைத்தார். ஒரு உத்தியோக பூர்வ தடுப்பு முகாம் ஒன்றில் புனர்வாழ்வு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக அவரது மகன் உடற்பயிற்சி செய்யும் புகைப்படம் வெளிவந்த பிரசுரம் ஒன்றையும் அவர் தன்வசம் வைத்திருக்கிறார்.
சில காலத்துக்குப் பின் அவரது மகனது இருப்பிடம் தொடர்பான தகவல்கள் எதுவும் தெரியவில்லை. அவர் காணாமற்போனதாக அறிவிக்கப்பட்டுள்ளார். இதன்படி ஜெயகுமாரி மற்றும் விபுஷிகா ஆகியோர் தமது மகன் மற்றும் சகோதரன் பற்றி ஆர்ப்பாட்டங்களில் தொடர்ந்து குரல் கொடுப்பதைக் காணக்கூடியதாக உள்ளது. அவர்களது கதறலும் கண்ணீரும் பெரும்பாலான ஊடகங்களின் கவனத்தை ஈர்த்து வந்தன. பாதிக்கப்பட்ட இருவரும் தங்கள் இழப்பை தைரியமாக ஊடகங்களிடம் தெரிவித்து வந்தனர்.
இந்தப் பின்னணயில்தான் ஒரு ரி.ஐ.டி குழு சாதாரண உடையில் ஜெயகுமாரியின் வீட்டில் காணப்பட்டதாக கூறப்படும் கோபியை தேடும் சாக்கில் தர்மபுரம் சென்றார்கள். காவல்துறையினர் கூறுவதன்படி அவர்கள் தங்கள் வாகனத்தை அந்த வீட்டுக்கு சற்று தூரத்தில் நிறுத்திவிட்டு கால்நடையாக மெதுவாக வீட்டுக்குள் நுழைந்தார்களாம். அவர்ள் வீட்டுக்குள் நுழைந்தபோது திருமதி ஜெயகுமாரி பாலேந்திராவும் மகளும் அதிர்ச்சி அடைந்தார்களாம். கோபியை பற்றி அவர்களிடம் வினாவியபோது, ஜெயகுமாரி தனது குரலை உயர்த்தி அப்படியான எவரும் வீட்டில் இல்லை எனத் தெரிவித்தாராம்.
பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு(ரி.ஐ.டி) அதிகாரி
ரி.ஐ.டி அதிகாரிகள் பின்னர் வீட்டின் உட்புறம் சென்றார்கள். ஒரு ரி.ஐ.டி அதிகாரி ஒரு கட்டில் இருந்த அறைக்குள் சென்று சுற்றிப் பார்த்தபோது, எதிர்பாராத சம்பவம் ஒன்று இடம்பெற்றது.
கடடிலின் கீழ் மறைந்திருந்த ஒரு மனிதன் நிலத்திலிருந்தபடியே ரி.ஐ.டி அதிகாரி ரட்னகுமாரவை நோக்கி இருமுறை துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டானாம், அது அவரது தொடை மற்றும் இடுப்பு பகுதிகளில் காயங்களை ஏற்படுத்தியது.
இதை எதிர்பார்க்காத ஏனைய காவல்துறை அதிகாரிகள் அச்சமடைந்து அதிர்ச்சியில் உறைந்துபோய் நின்றுவிட்டார்கள். பின்னர் அந்த மனிதன் வெளியே பாய்ந்து மீண்டும் ஒருமுறை காற்றில் சுட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டானாம்.
அந்த அதிகாரிகள் வீட்டின் பின்புறம் உள்ள கொல்லைப்புறத்தை நோக்கி ஓடியபோதும் அவனைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. காவல்துறையினர் தெரிவிப்பதின்படி, ஆயுத எதிர்ப்பை அவர்கள் எதிர்பார்க்கவில்லை, அதனால் அதை எதிர்த்து தாக்குவதற்கு போதிய சுடுகலன்கள் அந்த நேரம் அவர்கள் வசம் இல்லாமல் போய்விட்டதாம்.
ரி.ஐ.டி அதிகாரிகள், நிற்காது இரத்தம் வழியும் தங்கள் சகா பற்றிக் கவலையடைந்து விரைவாக ஒரு மருத்துவ ஊர்தி வரவழைத்தனர். காயமடைந்த காவலதிகாரி முதலில் கிளிநொச்சி மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் ரி.ஐ.டி அதிகாரிகள் தொடர்ச்சியாக அந்த வீட்டில் தங்கியிருந்து தாயையம் மகளையும் விசாரிக்கத் தொடங்கினார்கள்.
அங்கிருந்த கணணி மற்றும் அதன் பாகங்கள் பரிசோதிக்கப் பட்டன. மேலதிக காவல்துறையினர் மற்றும் 300க்கும் மேற்பட்ட இராணுவ நபர்கள் அந்த இடத்தில் கூடினார்கள். அங்கிருந்து காணமற்போன எதிரி இப்போது கோபி என அடையாளம் காணப்பட்டு அவரைத் தேடி அந்த இடம் முழுவதும் தீவிர தேடுதல் நடத்தப்பட்டது.
பல மணி நேரம் அம்மாவையும் மற்றும் மகளையும் துளைத்து எடுத்த பின்னர் அவர்களை கிளிநொச்சி காவல் நிலையத்துக்கு கூட்டிச் சென்றனர். அப்போதுதான் மகள் விபுஷிகா கடந்த 10 நாட்களுக்கு முன்பு மார்ச் 3ம் திகதிதான் பருவமடைந்துள்ள விபரம் தெரியவந்தது.
அந்த சுற்றாடலில் உள்ள அயலவர் அல்லது உறவினர் வீட்டில் அவளை நிறுத்துவதற்கு காவல்துறையினர் விரும்பினார்கள். எனினும் அயலவர்கள் இடத்தில் அவளை விடுவதற்கு பொருத்தமான எவரும் இல்லை எனத் தெரிவித்த தாய், தனது மகளும் தனக்கு துணையாக வரவேண்டும் என்றே கேட்டுக்கொண்டார்.
அது தாயாரின் விருப்பமாக இருந்தபடியால்; அந்த இளம்பெண்ணையும் அவருடன் கூட்டிச் சென்றதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
கிளிநொச்சியில் மேலதிக விசாரணைகளை தாயிடம் மேற்கொண்ட பின்னர், கிளிநொச்சியில் அன்று சட்ட வைத்திய அதிகாரி இல்லாதபடியால் அவர்கள் இருவரும் வவுனியாவுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்த சட்ட வைத்திய அதிகாரியிடம் உடல் பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டனர்.
தாயும் மகளும் உடல் ரீதியாக எந்தவித பாதிப்பையும் அடையவில்லை என்று தெளிவான மருத்துவ சான்றிதழை சட்ட வைத்திய அதிகாரியிடமிருந்து பெற்றுக் கொண்டதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
அந்த இருவரையும் பின்னிரவான மார்ச் 14ல்திரும்பவும் கிளிநொச்சிக்கு கூட்டிவந்த பின்னர், கிளிநொச்சி நீதவானாக பதில் கடமையாற்றும் திரு. எஸ். சிவபாலசுப்பிரமணியத்தின் முன்பாக ஆஜர் படுத்தப்பட்டார்கள்.
அதைத்தொடர்ந்து திருமதி. ஜெயகுமாரி பாலேந்திரா பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின்கீழ் (பி.ரி.ஏ) மேலதிக விசாரணைக்காக ஏப்ரல் முதலாம் திகதிவரை 18 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார்.
நீதிபதி அந்த 13 வயது நிரம்பிய மகளான விபுஷிகாவை மருத்தவ பரிசோதனைக்காக கிளிநொச்சி மருத்துவமனையில் அனுமதித்த பின்னர் கிளிநாச்சி நன்னடத்தை அதிகாரி வசம் ஒப்படைத்து ஒரு பாதுகாப்பான உறைவிடம் ஒன்றில் தங்க வைக்கவேண்டும் என உத்தரவிட்டார்.
விபுஷிகா அந்த வார இறுதிவரை கிளிநொச்சி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு நல்ல உடல்நிலையில் இருப்பதாக அறிவிக்கப்பட்டார். கிளிநொச்சி நன்னடத்தை அதிகாரி திரு.வி.முத்துக்குமாரு பின்னர் அந்த சிறுமியை கிளிநொச்சியிலுள்ள மகாதேவ ஆச்சிரம சைவச் சிறுவர் இல்லத்தில் தங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்தார்.
அந்த சிறுவர் இல்லம் முன்னாள் கிளிநொச்சி அரசாங்க அதிபர் திரு.ரி.இராசநாயகம் அவர்களால் நிருவகிக்கப்பட்டு வருகிறது. அதன் தங்குமிட மேலாளராக இராசநாயகம் உள்ளார்.
அவளை வவுனியாவில் கத்தோலிக்க அருட் சகோதரிகள் நடத்தும் அன்பகத்தில் தங்கவைப்பதற்கு முதலில் முயற்சித்த போதும் அது சாத்தியமாகவில்லை மற்றும் மார்ச் 17ம் திகதி விபுஷிகாவை மகாதேவா சிறுவர் இல்லத்தில் அனுமதிப்பதற்கு நீதிபதி ஒப்புதலளித்தார்.
இதற்கிடையில் திருமதி. ஜெயகுமாரி பாலேந்திரா பூசா தடுப்பு முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டு விட்டார். சர்வதேச செஞ்சிலுவை சங்க அதிகாரிகள்(ஐசிஆர்சி) அந்த முகாமுக்கு விஜயம் செய்து திருமதி.
ஜெயகுமாரி பாலேந்திராவை சந்தித்து அங்கு அவரது வாழ்க்கை நிலமைகள் பற்றி ஆராய்ந்துள்ளனர். ரி.ஐ.டி அதிகாரிகளினால் அவர் மேலும் விசாரணை செய்யப்பட்டு வருகிறார்.
இது காவல்துறை வட்டாரங்கள் மற்றும் பாதுகாப்பு துறையுடன் இணைந்துள்ள தகவல்தரும் வட்டாரங்கள் என்பன தெரிவித்ததின் படியான நிகழ்வுகளின் பதிப்பாகும். எனினும் உத்தியோக பூர்வ வர்ணனைக்கு எதிரான மற்றொரு எதிர் வர்ணனையும் இங்கு உள்ளது.
தர்மபுரம் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடனும் மற்றும் திருமதி. ஜெயகுமாரி பாலேந்திராவின் தடுப்புக் காவலுடனும் தொடர்புள்ள வேறு நிகழ்வுகளும் உள்ளன. இந்த நிகழ்வுகள் மற்றும் எதிர் வர்ணனைகள் என்பனவற்றை இனி வரவுள்ள கட்டுரைகளில் விரிவாக ஆராயப்படும்.
– டி.பி.எஸ்.ஜெயராஜ்