தொழில் நடவடிக்கையின் பொருட்டு தெஹிவளையில் தங்கியிருந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 12 பேரை பயங்கரவாத தடுப்புப் பிரிவுப் பொலிஸார் கைது செய்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
இவர்களுடன் சேர்ந்து 27 பேர் வரையில் கடந்த இரு வாரங்களுக்குள் மாத்திரம் கைது செய்யப்பட்டுள்ளனர் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த மாத ஆரம்பத்தில் பளையில், தமிழீழத்தின் காவலர்கள் என்ற துண்டுப்பிரசுரத்தை வைத்திருந்தார்கள் என்ற குற்றச்சாட்டில் இருவர் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
அதன்பின்னர் கோபி என்கின்ற சந்தேக நபரைத் தேடுவதாகத் தெரிவித்த பயங்கரவாத தடுப்புப் பிரிவினர், அதன் தொடர்ச்சியாக பலரைக் கைது செய்து வருகின்றனர்.
கிளிநொச்சி தருமபுரத்தில் கடந்த 13 ஆம் திகதி பயங்கரவாத தடுப்புப் பிரிவு பொலிஸார் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேலும் தீவிரப்படுத்தப்பட்டிருந்தது.
யாழ்.மாவட்டத்தில் ஏழாலை, சுன்னாகம் மற்றும் வடமராட்சிப் பகுதிகளிலும், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களிலும் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் பலர் கைது செய்யப்பட்டனர்.
அத்துடன் பயங்கரவாத தடுப்புப் பிரிவு பொலிஸாரால் தேடப்பட்டு வரும் கோபியின் மனைவி திருகோணமலையில் வைத்துக் கைது செய்யப்பட்டிருந்தார். இந்த வரிசையில் தற்போது தெஹிவளையில் வர்த்தக நிலையமொன்றில் பணி புரிந்த 12 பேர் பயங்கரவாத தடுப்புப் பிரிவு பொலிஸராரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் என்பதுடன், தொழில் நிமித்தமாகவே கொழும்பில் தங்கியிருந்தனர் என்று கூறப்படுகின்றது.
கைது செய்யப்பட்ட 12 பேரில் இருவர் இரண்டாம் மாடியில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், 10 பேர் பூஸாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுடன் சேர்த்து கடந்த இருவாரங்களில் மட்டும் 27 பேர் வரையில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்ற போதும், உறுதியான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.