இந்தியாவின் எதிர்கால ஆட்சி மாற்றம் இலங்கைக்கு சாதகமாக அமையப் போவதில்லை மாறாக பாதகமானதாகவே அமையுமென எதிர்வு கூறும் அமைச்சர் விமல் வீரவன்ச தமிழ்நாட்டில் மக்களுக்கு காலைக்கடன்களை கழிப்பதற்கு மலசல கூடங்கள் இல்லை.
ஆனால் அவர்களது தேர்தல் விஞ்ஞாபனத்தில் இலங்கையில் தனித் தமிழீழத்திற்கு முதலிடம் வழங்கியுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அத்துருகிரிய குணசேகர வித்தியாலயத்தில் நடைபெற்ற மூன்று மாடிக் கட்டடத் திற்கான அடிக்கல் நாட்டும் விழா திங்கட்கிழமை இடம்பெற்றது.
இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே நிர்மாணத்துறை பொறியியல் சேவைகள் வீடமைப்பு மற்றும் பொது வசதிகள் தொடர்பான அமைச்சர் விமல் வீரவன்ச இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இங்கு அமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
வெளிநாடுகளிலிருந்து கொண்டு இலங்கையில் ஆயுதமேந்திய புலிகள் அமைப்பை மீண்டும் உருவாக்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக புலனாய்வுப் பிரிவினருக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.
ஆனால் இங்குள்ள பெரும்பாலான புலி உறுப்பினர்கள் இதனை நிராகரிக்கின்றனர். எவ்வாறெனினும் தொகையாக பணம் வழங்குவதாக நிபந்தனைகளை முன்வைத்து மீண்டும் அழிவுகளை ஏற்படுத்த இவர்களை ஊக்குவித்துள்ளனர்.
இதற்காக அரசாங்க முக்கியஸ்தர்கள் வடக்கு செல்லும் போது அவர்கள் எங்கே செல்கின்றனர்? எந்த இடத்தில் தங்கியுள்ளனர்? என்பதை தேடிப்பார்க்க ஆரம்பித்துள்ளனர்.
தாமாகவே ஆயுதமேந்த முன்வராத நிலையில் பணம் கொடுத்து ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை வெளிநாடுகளில் உள்ளோர் முன்னெடுக்கின்றனர். எனவே அர்ப்பணிப்புகளுடன் பெற்றுக்கொண்ட சமாதானம் சீர் குலையாமல் பாதுகாக்க வேண்டியது அனைவரதும் கடப்பாடாகும்.
இந்தியா
இந்தியாவில் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. இவ்வாறானதோர் நிலையில் ஜெயலலிதா மற்றும் கருணாநிதி ஆகியோர் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தாம் தேர்தலில் வென்ற பின்னர் இலங்கையில் தனி தமிழீழத்தை உருவாக்குவோம் என உறுதியளித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் மக்களுக்கு உண்பதற்கு உணவில்லை, குடிக்க தண்ணீர் இல்லை, நடு வீதிகளிலேயே மலம் கழிக்கின்றனர், மலசல கூடங்கள் இல்லை.
இவ்வாறு தமது மக்களின் பிரச்சினைக்கு தீர்வுகளை முன்வைக்கவில்லை.
ஆனால் அவர்களது தேர்தல் உறுதிமொழியில் இலங்கையில் தனி நாடு என்பதற்கே முதலிடம் வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் எதிர்வரும் தேர்தலில் நிச்சயம் ஆட்சி மாற்றம் இடம் பெறும். அந்த ஆட்சி மாற்றம் மேற்குலக நாடுகளுக்கு சாதகமானதாகவே அமையும்.
அவ்வாறான நிலை உருவானால் இலங்கைக்கு பாதகமானதாகவே அமையும். ஏனென்றால் இங்கு மீண்டும் புலிகளுக்கு உயிர் கொடுக்க மேற்குலக சக்திகள் அனைத்து முயற்சிகளையும் முன்னெடுத்து வருகின்றமையே எமக்கு ஆபத்தானதாக அமையும் என்றும் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.