உக்ரேனுக்குள் ஊடுருவிய ரஷ்யப் படைகள் அடுத்து மொல்டோவா மீது படையெடுக்கலாம் என்ற உளவுத் தகவல் அமெரிக்காவுக்கு கிடைத்துள்ளதாக தெரிகிறது. இதையடுத்து, நேற்றிரவு (ஞாயிறு) அமெரிக்க விமானப்படை தளபதி ஜெனரல் பிலிப் ப்ரீட்லவ், மற்ற நேட்டோ நாட்டு தளபதிகளுடன் ஆலோசனை செய்ய விரைந்துள்ளார்.
உக்ரேனுக்குள் ஊடுருவி கிரிமியா பகுதியை கைப்பற்றியதுடன் ரஷ்ய படைகள் நின்றுவிடப் போவதில்லை. அந்தப் பகுதியில் உள்ள மற்ற சிறிய நாடுகளிலும் கைவைக்க போகிறது என அமெரிக்கா ஏற்கனவே எச்சரித்திருந்தது.
அந்தப் பகுதியில் உள்ள பல நாடுகள், முன்பு சோவியத் யூனியன் என்ற பெயரில் ரஷ்யாவின் பகுதியாக இருந்து, உடைந்து, தனித்தனி நாடுகளாக பிரிந்தவை.
அவற்றையெல்லாம் மீண்டும் ஒன்று சேர்த்து, பெரிய சோவியத் யூனியன் வல்லரசாக்குவதே, ரஷ்ய ஜனாதிபதி புட்டினின் நோக்கம் என்பதில் பெரிய ரகசியம் ஏதுமில்லை.
இந்த நிலையில்தான் ரஷ்யப் படைகள் அடுத்து மொல்டோவா நாட்டின்மீது படையெடுக்கலாம் என்ற உளவுத் தகவல் அமெரிக்காவுக்கு கிட்டியுள்ளதாக தெரிகிறது.
ஒருவேளை ரஷ்யாவின் அடுத்த இலக்கு இதுதான் என்றால், அடுத்த சில தினங்களில் இந்த மொல்டோவா நாடு பற்றிய செய்திகள் பரபரப்பாக அடிபடத் தொடங்கும் என்பதால், இந்த நாடு எங்கேயுள்ளது என்று கொஞ்சம் சொல்லி வைப்பது நல்லது.
மொல்டோவா குடியரசு (Republic of Moldova) என அழைக்கப்படும் இந்த நாடு, கிழக்கு ஐரோப்பாவில் நான்குபுறமும் நில எல்லைகளால் சூழப்பட்ட நாடு (landlocked country). இதன் வடக்கு, கிழக்கு, தெற்கு எல்லைகள் உக்ரேனையும், மேற்கு எல்லை ரொமேனியா நாட்டையும் பிரிக்கின்றன.
அதாவது, தற்போது ரஷ்யப் படைகள் ஊடுருவியுள்ள உக்ரேனில் இருந்து தரை மார்க்கமாக மொல்டோவா நாட்டின் மூன்று எல்லைகள் ஊடாக உள்ளே நுழைய முடியும்! மொல்டோவோவின் தலைநகர் சிஸினோ.
ஒருவேளை இங்கு ரஷ்ய ராணுவம் ஊடுருவினால், அமெரிக்கா தமது கடற்படையை வைத்து ஏதும் செய்ய முடியாது (மொல்டோவா நாட்டின் எந்த எல்லையிலும் கடல் கிடையாது) என்பதால்தான், அமெரிக்க விமானப்படை தளபதியை ஆலோசனைக்காக அனுப்பி வைத்துள்ளார்கள்.
நாம் குறிப்பிட்ட அமெரிக்க விமானப்படை தளபதி ஜெனரல் பிலிப் ப்ரீட்லவ், நேட்டோ கூட்டுப் படைகளின் சுப்ரீம் கமாண்டராகவும் உள்ளார். இந்த விவகாரம் பற்றி மற்ற நேட்டோ கூட்டுப்படை தளபதிகளுடன் ஆலோசிக்க பிலிப் ப்ரீட்லவ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதால், விவகாரம் கொஞ்சம் சீரியசானது போலத்தான் உள்ளது.
மொல்டோவா பகுதியில் என்னதான் நடக்கிறது என்பதில் ஒரு கண் வைத்திருப்பது நல்லது.