“தமிழக மீனவர்கள் கச்சதீவு பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்களை ஆச்சரியப்படுத்தினர்” என பி.டி.ஐ. நியூஸ் ஏஜென்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களுக்கு குளிர்பானம் மற்றும் ஸ்வீட் கொடுத்து உபசரித்தனர்” என்கிறது, பி.டி.ஐ.
ராமநாதபுரம் மற்றும் ஜெகதாபட்டினத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான மீனவர்களுடன் இலங்கை கடற்படையினர் நட்புடன் பேசிக்கொண்டு இருந்தனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இலங்கையில் சிறையில் உள்ள அனைத்து தமிழக மீனவர்களையும் விடுதலை செய்யும்படி இலங்கை அரசு உத்தரவிட்டும் உள்ளது.
இதுவரை தமிழக மீனவர்கள் இலங்கையின் கடல் பகுதிக்குள் வந்து மீன் பிடித்ததாக இலங்கை அரசு குற்றம்சாட்டியிருந்தது. ஐ.நா.வில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவால் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்கவில்லை என்பதால், அதற்கு நன்றிக்கடனாக, தமிழக மீனவர்கள் இலங்கை கடல்பகுதிக்குள் மீன்பிடிக்க அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இந்த திடீர் திருப்பத்தை, தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் எப்படி ரியாக்ட் பண்ணப் போகிறார்கள் என்று தெரியவில்லை. ஐந்து சாய்ஸ்கள் உள்ளன.
1) இலங்கை அரசை ‘வழிக்கு கொண்டுவந்து விட்டோம்’ என்று சொல்லலாம் (காங்கிரஸ்)
2) விறுகொண்டெழும் தமிழர் படை கண்ட அச்சத்தில், சிங்கள ராணுவம் காலில் விழுந்து குளிர்பானம் கொடுத்து சரணாகதி (வைகோ, சீமான், நெடுமாறன்)
3) டில்லிக்கு நாம் கொடுத்த அழுத்தம் காரணமான டில்லி மிரண்டுபோய், டில்லி கொழும்புவை மிரட்டியதில், கொழும்பு மிரண்டுபோய், தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க அனுமதி வழங்கியது என்று சொல்லலாம் (அ.தி.மு.க., தி.மு.க.). ஆனால், இதில் உள்ள ஒரு சிக்கல், கிரெடிட்டில் ஒரு பகுதி டில்லிக்கும் போய்விடும்.
4) இதைப்பற்றி இப்போதைக்கு வாய் திறக்காமல் இருக்கலாம். அதுதான் உத்தமம்.
5) நடுக்கடலில் இலங்கை கடற்படையிடம் ஜிலேபி, கூல்டிரிங்க்ஸ் வாங்கி சாப்பிட்டுவிட்டு கரை திரும்பும் இந்த மீனவர்களை…. சேச்சே, வேணாங்க!