ஐ.நா. மனிதஉரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா முன்வைத்த தீர்மானம், கடந்த வியாழக்கிழமை பரபரப்பான சூழ்நிலையில், 11 மேலதிக வாக்குகளினால் நிறைவேறியது.
இந்தத் தீர்மானத்துக்கு ஆதரவாக 23 நாடுகள் வாக்களித்த அதேவேளை, எதிராக 12 நாடுகள் வாக்களித்தன. மேலும் 12 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்காமல்- நடுநிலை வகித்தன. கடந்த வியாழக்கிழமை ஜெனீவா நேரப்படி மதியம் நடந்த விவாதமும், வாக்கெடுப்பும், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் பெரும் பரபரப்பான சூழ லை ஏற்படுத்தியிருந்தது.
இந்தத் தீர்மானத்தை அமெரிக்காவே கொண்டு வந்தது என்பதும், அதை எதிர்ப்பதில் ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் முன்னின்றதும் தான் அதற்குக் காரணம்.
இந்தநிலையில், சில நாடுகளின் நிலைப்பாடு என்னவென்ற கேள்வி கடைசிவரை, இரகசியமாகவே வைக்கப்பட்டிருந்ததால், இறுதியான முடிவு எப்படியானதாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எகிறியிருந்தது.
என்ன கூறுகிறது தீர்மானம்?
கடந்த 3ஆம் திகதி ஜெனீவாவில் ஆரம்பமான ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் முதல் நாள் கூட்டத்திலேயே உறுப்பு நாடுகளுக்கு இலங்கைக்கு எதிரான தீர்மான வரைவை விநியோகித்து அமெரிக்கா அதிர்ச்சியைக் கொடுத்திருந்தது.
இலங்கையில், “நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், மனித உரிமைகளை ஊக்குவித்தல்” என்ற தலைப்பிலான இந்த தீர்மான வரைவின் முதல் வடிவம், அமெரிக்கா, பிரித்தானியா, மசிடோனியா, மொன்ரனிக்ரோ, மொறிசியஸ் ஆகிய நாடுகளின் இணை அனுசரணையுடன் வழங்கப்பட்டிருந்தது. 2012, 2013ஆம் ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் தொடர்ச்சியாகவே அமெரிக்கா இதனை முன்வைத்தது.
2013ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு அமைய, நிறைவேற்ற வேண்டிய கடப்பாடுகளை இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்தத் தவறியதை, ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் அறிக்கை சுட்டிக்காட்டியிருந்தது.
போரின்போது இருதரப்பினராலும் நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்து இலங்கை அரசாங்கம் உள்ளக விசாரணைகளை நடத்தத் தவறியுள்ள தால், சர்வதேச சுதந்திர விசாரணை ஒன்றை முன்னெடுக்க வேண்டும் என்ற நவநீதம்பிள்ளையின் பரிந்துரையின் அடிப்படையே- இந்த தீர்மான வரைவின் முக்கியமான அம்சம்.
அதாவது, போரின்போது இழைக்கப்பட்ட குற்றங்களுக்கு சுதந்திரமான அனைத்துலக விசாரணைகளை, ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் பணியகம் மூலம் முன்னெடுக்க இது வழி செய்கிறது.
அதுதவிர, 13ஆவது திருத்தச்சட்டத்தின் அமுலாக்கம், அதிகாரப்பகிர்வு, வடக்கில் பொதுமக்களின் இயல்பு வாழ்வில் இராணுவத் தலையீடுகளை விலக்குதல், போன்றன குறித்தும் தீர்மான வரைவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் சிறுபான்மை மதத்தினர் மற்றும் வழிபாட்டு தலங்கள், ஊடகவியலாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் மீதான தாக்குதல்களை கண்டிக்கும் வகை யிலும் – இத்தகைய சம்பவங்களில் தொடர்புடையவர்களை நீதியின் முன் நிறுத்தக் கோரும் வகையிலும்- தீர்மான வரைவு வடிவமைக்கப்பட்டிருந்தது.
இதன் பின்னர், அமெரிக்கா மூன்று இணைக் கலந்துரையாடல்களை நடத்தி, உறுப்பு நாடுகளின் ஆலோசனையை பெற்று, இறுதியான வரைவை கடந்த திங்கட்கிழமை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பித்திருந்தது.
முதல் மற்றும் இரண்டாவது வரைவுகளில் பல விடயங்கள் நீக்கப்பட்டு, இன்னும் பல சேர்க்கப்பட்டு, இறுதி வரைவு தயாரிக்கப்பட்டிருந்தது. அதில், முக்கியமான மாற்றம், இந்த விசாரணைக் காலப்பகுதியை வரையறை செய்ததாகும்.
சர்வதேச விசாரணை என்பதற்குப் பதிலாக, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தினால் “சுதந்திரமான விரிவான விசாரணை” என்ற பதம் சேர்க்கப்பட்டதுடன், நல்லிணக்க ஆணைக்குழு கவனம் செலுத்திய காலப்பகுதியில் நடந்த சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று காலவரையறையும் வகுக்கப்பட்டது.
இதன் மூலம், இந்த விசாரணைகளுக் குள் இந்தியாவுடன் தொடர்புடைய விவகாரங்கள் வராமல் பார்த்துக் கொள்ளப்பட்டது. இந்தியாவினது ஆதரவை உறுதிப்படுத்திக் கொள்வதற்கே, அமெரிக்கா இந்த இரண்டு விடயங்களிலும் திருத்தம் செய்தது.
ஆனால், கடைசியில் இந்தியா காலை வாரிவிடும் என்று அமெரிக்காவோ, அல்லது தமிழர் தரப்போ கொஞ்சமும் எதிர்பார்த்திருக்கவில்லை.
விவாதத்துக்கு விடப்பட்ட தீர்மான வரைவு
கடந்த 26ஆம் திகதி ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் அறிக்கையின் மீது நடந்த விவாதத்தை அடுத்து, மறுநாள், அமெரிக்காவின் தீர்மானம் வாக்கெடுப்புக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
முதலில், தீர்மானத்தை முன்வைத்து அமெரிக்கப் பிரதிநிதி உரையாற்றினார்.
தீர்மானத்துக்கு 41 நாடுகள் இணை அனுசரணை வழங்கியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இலங்கையில் தொடர்ந்தும் இடம்பெறும் மோசமான மனித உரிமை கள் மீறல்களைச் சுட்டிக்காட்டியதுடன், தீர்மானத்தை நிறைவேற்றித் தருமாறும் உறுப்பு நாடுகளிடம் கேட்டுக்கொண்டார்.
இதையடுத்து, இணை அனுசரணை வழங்கும் நாடுகளின் சார்பில் மசிடோனியா, மொறிசியஸ், ஐரோப்பிய ஒன்றியம், மொன்ரனிக்ரோ நாடுகளின் பிரதிநிதிகளும் அதே தீர்மானத்தின் அவசியம் குறித்து உரையாற்றினர்.
இலங்கையும் நட்பு நாடுகளும் நிராகரிப்பு
தீர்மானத்தை முன்வைத்த நாடுகளின் உரையை அடுத்து, இலங்கை பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்கவுக்கு பதிலளிக்க வாய்ப்பு வழங்கப்பட்டது.
அவர், இந்த தீர்மானம் ஐ.நா. பிரகடனத்துக்கு முரணானது என்றும், உறுப்பு நாடு ஒன்றின் இறைமைக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியது என்றும் சுட்டிக்காட்டினார். தீர்மானத்தை இலங்கை நிராகரிப்பதாகவும், உறுப்பு நாடுகள் இதனை நிராகரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
இதையடுத்து, ஏனைய நாடுகளுக்கு உரையாற்றும் வாய்ப்பு அளிக்கப்பட்ட போது, பாகிஸ்தான், கியூபா, இந்தியா, வெனிசுவேலா, சீனா, ரஷ்யா, கியூபா, மாலைதீவு, இந்தோனேசியா ஆகிய நாடு கள் கருத்து தெரிவிக்க விருப்பம் வெளியிட்டன. இந்த நாடுகள் அனைத்துமே தீர்மான வரைவுக்கு எதிராகவும், தேவையற்ற தலையீடு என்றும் கடுமையாக விமர்சிக்க, பேரவை விவாதம் சூடுபிடிக் கத் தொடங்கியது.
‘கலக்கிய’ பாகிஸ்தான் பிரதிநிதி
பாகிஸ்தான் பிரதிநிதி சமீர் அக்ரம் தான், இலங்கையைக் காப்பாற்றுவதற்கு கடுமையாகப் போராடியவர். அவர், ஐ.நா. விசாரணையைத் தடுத்து நிறுத்தப் பல வழிகளிலும் முயற்சிகளை முயற்சிகளை மேற்கொண்டார்.
ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் மூலம் விசாரணை நடத்தப்படக் கோரும் தீர்மானத்தின் 10 ஆவது பந்தியை திருத்த வேண்டும் என்று முதலாவது கோரிக்கையை வைத்தார்.
அடுத்து, இந்த விசாரணைகளுக்குத் தேவைப்படும் பெருமளவு நிதியை எவ்வாறு பெறுவது என்றும் கேள்வி எழுப்பினார்.
அப்போது வழக்கமான வரவு–செலவுத்திட்ட ஒதுக்கீட்டில் இருந்து இதற்கான நிதியைப் பெறமுடியாது என்றும், எனவே இந்த தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்துவதை ஒத்திவைக்க வேண்டும் என் றும் பாகிஸ்தான் பிரதிநிதி கோரிக்கை விடுத்தார்.
எப்படியாவது இந்த தீர்மானத்தை நிறைவேற்றாமல் தடுப்பதற்கு பாகிஸ்தான் தான் உச்சக்கட்டமாக முனைந்தது. வாக்கெடுப்புக்கு விடப்பட்டால், தீர்மானம் எப்படியும் நிறைவேறிவிடும் என்பதை, பாகிஸ்தான் போன்ற நட்பு நாடு கள் நன்றாகவே அறிந்திருந்தன.
அதனால், நிதி ஒதுக்கீட்டை காரணம் காட்டி தீர்மானத்தை நிறைவேற்றாமல் தடுக்கப் பார்த்தது.
விடாப்பிடியாக நின்றது அமெரிக்கா
ரஷ்யா, சீனா, கியூபா போன்ற நாடுகள் பாகிஸ்தானின் யோசனைக்கு ஆதரவாக நின்றன. ஆனால், அமெரிக்காவும், இணை அனுசரணை நாடுகளும், எந்த முடிவாக இருந்தாலும், வாக்கெடுப்புக்கு விடப்பட்டே தீமானிக்கப்பட வேண்டும் என்று அழுத்தமாக கூறின.
வெறும் வாய்மூலத் திருத்தங்களுக்கு இடமளிக்க அனுசரணை நாடுகள் தயாராக இருக்கவில்லை. இதனால், இலங்கை தொடர்பான தீர்மானம் மீது மூன்று வாக்கெடுப்புகள் நடத்தப்பட்டன.
பாகிஸ்தானின் காப்பாற்றும் முயற்சிகள் தோல்வி
பாகிஸ்தான் முன்வைத்த தீர்மானத்தை ஒத்திவைக்கும் யோசனை மீது முதலில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போது வாக்கெடுப்பை பிற்போடுவதற்கு ஆதரவாக 16 நாடுகளும், எதிராக 25 நாடுகளும் வாக்களித்தன. 6 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.
இதனால், பாகிஸ்தானின் முதலாவது யேசனை நிராகரிக்கப்பட்டதுடன், தீர்மானம் நிறைவேற்றப்படுவதை தடுக்கும் முயற்சிக்கும் ஆப்பு வைக்கப்பட்டது. அதையடுத்து, ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் மூலம் விசாரணை நடத்த வலியுறுத்தும், 10ஆவது பந்தியை நீக்கும் யோசனை குறித்து வாக் கெடுப்பு நடத்தப்பட்டது.
ஆனால், 10 ஆவது பந்தியை நீக்குவதற்கு 23 நாடுகள் எதிர்ப்புத் தெரிவிக்க, 14 நாடுகள் மட்டும் ஆதரவு தெரிவித்தன. 10 நாடுகள் நடுநிலை வகித்தன.
இதனால், 10 ஆவது பந்தியை நீக்கும் யோசனையும் நிராகரிக்கப்பட்டது.
இணைந்து கொண்ட இந்தியாவும் பாகிஸ்தானும்
பாகிஸ்தானின் யோசனைகள் நிராகரிக்கப்பட்டதால், இலங்கைக்கு ஆதரவாக, நட்பு நாடுகள் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் முடங்கின. எப்போதும் கீரியும் பாம்புமாக அடிபடும் இந்தியாவும் பாகிஸ்தானும், இலங்கை விடயத்தில் ஒன்றுபட்டு நின் றதைப் பார்த்து பலரும் புருவத்தை உயர்த்தி ஆச்சரியப்பட்டனர். பாகிஸ்தான் முன்வைத்த இரண்டு யோசனைகளுக்குமே இந்தியாவும் ஆதரவளித்திருந்தது.
அதேவேளை, தீர்மானத்தை எதிர்த்த, பாகிஸ்தானே அதில் திருத்தங்களைச் செய்யவும் யோசனை முன்வைத்தது இன்னொரு முரண்பாடான விடயம்.
இறுதி வாக்கெடுப்பு
சுமார் ஒன்றரை மணி நேரம் நீடித்த வாதப்பிரதிவாதங்களின் முடிவில், இறுதி வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதன் போது 23 நாடுகள் ஆதரவாக வாக்களிக்க, 12 நாடுகள் எதிர்த்தன, 12 நாடுகள் வாக்களிக்கவில்லை.
முன்னரே இந்திய பிரதிநிதி வாக்கெடுப்பில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று அறிவித்ததால், இந்தியா பற்றிய சஸ்பென்ஸ் இல்லாமல் போனது.
எவ்வாறாயினும், 23 நாடுகளின் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போதும், 47 உறுப்பினர்களைக் கொண்ட சபையின் பெரும்பான்மை நாடுகளின் ஒப்புதலை அது பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பெரும்பான்மை என்பது 24 வாக்குகளாகும். அதைப் பெறுவதற்கு இந்தத் தீர்மானம் தவறிவிட்டது.
தீர்மானத்துக்கு ஆதரவு குறைந்தது ஏன்?
முன்னர், 2012இல் 24 நாடுகளும், 2013இல் 25 நாடுகளும் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரித்திருந்தன. இந்த ஆண்டு உறுப்புரிமை மாற்றத்தின் போது புதிதாக உள்ளே வந்த நாடுகள் அதிகளவில் இலங்கைக்கு ஆதரவானவை என்பதால், தீர்மானத்துக்கு ஆதரவு குறைவாகவே கிடைத்தது.
இதைவிட கடந்த இரண்டு தடவைகளும், ஆதரித்து வாக்களித்த இந்தியா, ஒதுங்கிக் கொண்டதால், தீர்மானத்துக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்காமல் போனது. அதுபோலவே, இலங்கைக்கு ஆதரவாக – தீர்மானத்தை எதிர்த்த நாடுகளின் எண்ணிக்கையும் தொடர்ச்சியாக குறைந்து வந்துள்ளதை அவதானிக்கலாம்.
2012இல் இலக்கைக்கு ஆதரவாக 15 நாடுகள் நின்றன. 2013இல் 13 நாடுகள் இலங்கையை ஆதரித்தன. இம்முறை 12 நாடுகளே தீர்மானத்தை எதிர்த்தன.
முஸ்லிம் நாடுகளின் நிலை
முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் பற்றிய அறிக்கையின் தாக்கத்தினால், குவைத் நடுநிலை வகித்தது. கடந்த ஆண்டு குவைத்தின் ஆதரவு இலங்கைக் குக் கிடைத்திருந்தது. அதேவேளை, அல்ஜீரியா, மாலைதீவு, பாகிஸ்தான், ஐக்கிய அரசு எமிரேட்ஸ், சவூதி அரேபியா ஆகிய 5 முஸ்லிம் நாடுகளே தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தன.
முஸ்லிம் காங்கிரஸின் அறிக்கையின் தாக்கம், அரசாங்கத்துக்கு குறைந்தது குவைத்தின் ஒரு வாக்கையேனும் கிடைப்பதை தடுத்து விட்டது.
இலங்கையுடன் இணையாத இலத்தீன் அமெரிக்கா
இம்முறை அரசாங்கம் இலத்தீன் அமெரிக்க நாடுகள் விடயத்தில் கடும் தோல்வியையே சந்தித்தது.
ஏனென்றால், இலத்தீன் அமெரிக்கா சார்பில் 8 நாடுகள், ஐ.நா. மனித உரிமை கள் பேரவையில் அங்கம் வகிக்கின்ற போதும், கியூபாவும், வெனிசுவேலாவும் மட்டுமே இலங்கையை ஆதரித்தன.
ஆஜென்ரீனா, கோஸ்டாரிக்கா, பிறே சில், பெரு, சிலி, மெக்ஸிகோ ஆகிய நாடு கள் தீர்மானத்தை ஆதரித்தன.
இதனால், இலத்தீன் அமெரிக்காவை நோக்கி அரசாங்கம் நகர்த்திய இராஜதந்திர முயற்சிகள் எல்லாமே வீண்போயின.
ஆபிரிக்க நாடுகளிடம் வீசிய நடுநிலைக்காற்று
ஆபிரிக்க நாடுகளைப் பொறுத்தவரை யில், 13 நாடுகள் பேரவையில் அங்கம் வகித்த போதும், அல்ஜீரியா, கொங்கோ, கென்யா ஆகிய மூன்றுமே இலங்கைக்கு ஆதரவளித்தன. பெனின், பொட்ஸ்வானா, ஐவரிகோ ஸ்ட், சியரலியோன் ஆகிய 4 நாடுகள் தீர்மானத்தை ஆதரித்தன.
ஏனைய நாடுகளான நமீபியா, எதியோப்பியா, மொேராக்கோ, புர்கினோபாசோ, காபோன், தென்னாபிரிக்கா ஆகிய 6 நாடுகளும் வாக்கெடுப்பில் பங்கெடுக்கவில்லை.
ஆசியாவில் ஒரே ஒரு நாடு தான் அமெரிக்கா பக்கம்
ஆசிய நாடுகளைப் பொறுத்தவரையில், பேரவையில் உள்ள 13 நாடுகளில் தீர்மானத்தை ஆதரித்த ஒரே நாடு தென்கொரியா மட்டும் தான். சீனா, மாலைதீவு பாகிஸ்தான், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், வியட்னாம், ஆகிய நாடுகள் தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தன. அதேவேளை, இந்தியா, இந்தோனே சியா, பிலிப்பைன்ஸ், ஜப்பான், கசக்ஸ் தான், குவைத் ஆகியன 6 நாடுகளும் நடுநிலை வகித்தன.
ஒன்றுபட்டு நின்றது ஐரோப்பா
கிழக்கு மற்றும் மேற்கு ஐரோப்பிய வலயங்களில் 13 நாடுகள் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கின்றன. இவற்றில், ரஷ்யா மட்டும் தான், இலங்கைக்கு நட்புக்கரம் நீட்டியது. ஏனைய 12 நாடுகளும் தீர்மானத்தை ஆதரித்து, வாக்களித்து ஒற்றுமையை வெளிப்படுத்தின.
தோல்வியில் முடிந்து கமரூனின் முயற்சி
அதேவேளை, தென்னாபிரிக்கா, ஜப் பான், காபோன், கஸகஸ்தான் உள்ளிட்ட நாடுகளை தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்கச் செய்வதற்கு அமெரிக்காவும் பிரித்தானியாவும் கடும் முயற்சிகளை மேற்கொண்டன.
பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் ஹேக்கில் நடந்த கூட்டத்தில் காபோன், ஜப்பான், கஸகஸ்தான் ஆகிய நாடுகளின் தலைவர்களிடம் தனிப்பட்ட ரீதியாக ஆத ரவு கோரியிருந்தார்.
ஆனால், அந்த நாடுகள் நடுநிலை வகித் ததால், அமெரிக்க பிரித்தானிய முயற்சி கள் பின்னடைவு கண்டன.
விசாரணைக்கு 1.46 மில்லியன் டொலர்
இலங்கையில் நடந்து மீறல்கள் குறித்து, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் நடத்தப் போகும் ஒரு ஆண்டு விசாரணைக்கு 1.46 மில்லியன் டொலர் தேவை என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் பேர வைச் செயலகத்தினால், இந்த மதிப்பீடு செய் யப்பட்டுள்ளது.
ஆண்டு தோறும், ஐ.நா. மனித உரிமை கள் பேரவைக்கு ஒதுக்கப்படும் நிதியைக் கொண்டே இதைச் சமாளிக்கலாம் என்று பேரவைச் செயலகம் தெரிவித்துள்ளது.
அடுத்தது என்ன?
கடும் இழுபறிக்கு மத்தில் ஜெனீவா வில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தை, இலங்கை அரசாங்கம் உடனடியாகவே நிராகரித்து விட்டது. இந்த நிலையில், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையால் விசாரணைகள் எவ்வாறு முன்னெடுக்கப்படும் என்ற எதிர் பார்ப்பு தோன்றியுள்ளது.
அதுமட்டு மன்றி இந்த விசாரணைகளின் முடிவில், அளிக்கப் படும் அறிக்கையின் அடிப்படையில், ஐ.நா. மனித உரிமைகள் பேரவை என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதும் கூட கேள்வியாகவே உள்ளது.
(என்.கண்ணன்)