நியூயோர்க்கிலிருந்து செயல்படும் இடைக்கால (நாடு கடந்த) தமிழீழ அரசாங்கம், கத்தோலிக்க குரு. அருட்தந்தை. இமானுவேலின் அகில உலக தமிழ் முன்னணி, நெடியவனின் விடுதலைப் புலிகள் அமைப்பு, விநாயகத்தின் புலிகள் ஆதரவு இயக்கம் என இலங்கை அரசினால் தடை செய்யப்பட்ட அமைப்புக்கள் மற்றும் தொடர்புடைய நபர்கள் பற்றிய விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
இவ் வர்த்தமானியில் 16 புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய புலம்பெயர் நாடுகளில் வாழ்பவர்கள் 424 பேரின் பெயர் விபரங்கள் மார்ச் 21ஆம் திகதியிட்ட விசேட வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. (வர்த்தமானி இந்த செய்தியுடன் இணைக்கப்பட்டுள்ளது)
இந்த வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக புலிகளின் பினாமி அமைப்புக்கள் உட்பட பல புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் தடை செய்யப்பட்ட அமைப்புக்களாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
இதன்மூலம் புலம்பெயர் நாடுகளில் எஞ்சியுள்ள புலிகளின் நடவடிக்கைகளையும் புலிகளுக்கு ஆதரவான செயற்பாடுகளையும் கட்டுப்படுத்த அரசாங்கம் முனைவதோடு, இவ் அமைப்புக்களின் உதவிகளைப் பெற்று வடக்கு கிழக்கில் இயங்குகின்ற தமிழ் அரசியல் அமைப்புக்கள் மற்றும் தனிநபர்களின் செயற்பாடுகளையும் அரசாங்கம் முடக்க விரும்புகின்றது.
இத் தடைமூலம் புலிகளின் எஞ்சியுள்ள சொத்துக்களை முடக்குவதற்கும் வாய்ப்புக்கள் இருக்கின்றது. அரசாங்க வர்த்தகமானியலில் அறிவிக்கப்பட்டிருக்கும் பெயர்ப் பட்டியலிலுள்ள பலர் சர்வதேச (இன்டர்போல்) பொலீசாரின் பிடிவிறாந்துக்கு உட்பட்டவர்கள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இவர்கள்மூலம் இஙகு உதவிகள் பெற்று வந்த அப்பாவி ஏழைக் குடும்பங்கள் பலவற்றின் வாழ்வாதாரங்களும் இதனால் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இலங்கையில் பல தமிழ் அரசியல்வாதிகள் (புலிகளின்) புலம்பெயர் அமைப்புக்களின் உதவிகளைக் கொண்டே தமது செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாக பரவலாக நம்பப்படுகின்றது.
இவ்வாறானவர்களின் எதிர்கால நடவடிக்கைகளும் கேள்விக்குறியாகும் நிலை உள்ளது. இவ்வாறானவர்களின் உறவினர்கள்கூட எதிர்காலத்தில் தமது தாய்நாட்டிற்கு சென்று வருவதில் பல்வேறு நெருக்கடிகளை எதிர்நோக்கும் அபாயமும் தோன்றியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது