இந்த இராணுவ நடவடிக்கையின் மூலம் நாற்பதுக்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஆயினும் அந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம் என்றே பலரும் நம்புகின்றார்கள்.
கைதுசெய்யப்பட்டவர்கள் பற்றிய சரியான தகவல்களும், புள்ளிவிபரங்களும் வெளியிடப்படவில்லை. கடந்த ஐந்து ஆறு வாரங்களாக இந்த நிலைமை தொடர்கின்றது.
இறுதி யுத்தத்தின்போது இடம்பெற்றதாகக் கூறப்படுகின்ற மனித உரிமை மீறல் மற்றும் மானுட நேயமற்ற செயற்பாடுகள் குறித்து, குற்றம் சுமத்தி, அவற்றுக்குப் பொறுப்புக் கூறுமாறு அரசாங்கத்திற்கு ஜெனிவா மனித உரிமை பேரவை பிரேரணை மூலம் கொடுக்கப்பட்டுள்ள சர்வதேச நெருக்கடியே இதற்கு முக்கிய காரணம் என பலரும் சுட்டிக்காட்டியிருக்கின்றார்கள்.
பொறுப்புக் கூறும் விடயமானது, சர்வதேச விசாரணையொன்றை நடத்த வேண்டும், நடத்தப்படும் என்ற அளவிற்கு தீவிரமாகியிருக்கின்றது. சர்வதேச விசாரணையொன்றுக்கு இடமளிக்க முடியாது.
உள்ளூரிலேயே நாங்கள் விசாரணைகளை நடத்துவோம் என்று அரசாங்கம் பிடிவாதமாகக் கூறியதை ஏற்று, அதற்கான சந்தர்ப்பத்தையும் ஐ.நா. மன்றமும், சர்வதேசமும் வழங்கியிருந்தன.
ஐ.நா. விசாரணைக்கும் இடமளிக்கப்போவதில்லை என்று வீறாப்புடன் பதிலளித்துள்ள அரசு, அத்த கைய விசாரணைகளில் சாட்சியமளிப்பவர்களை, அரசியல் சட்டத்தையும் நாட்டின் இறைமையையும் மீறினார்கள் என குற்றம் சுமத்தி கைது செய்யப்போவதாகவும் மிரட்டியிருக்கின்றது.அது மட்டுமல்லாமல், சர்வதேச விசாரணைகளை நடத்தவிடாமல் தடுப்பதற்காகவே, வடபகுதியில் பொதுமக்கள் மீதும், முன்னாள் போராளிகள் மீதும் இராணுவ நெருக்குவாரங்கள் பிரயோகிக்கப்பட்டிருக்கின்றன என்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் கூறியிருக்கின்றார்.
என்னதான் நடக்கின்றது?
சர்வதேச அமைப்புக்கள் மற்றும் புலம்பெயர்ந்துள்ள விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் நாட்டில் மீண்டும் விடுதலைப்புலிகளை அணிசேர்க்க முயற்சிக்கின்றார்கள் என்று கூறி வந்த அரசாங்கமும், இராணுவத்தினரும், இப்போது கோபி என்ற ஒரு நபரின் தலைமையில் இந்த மீளிணைவு முயற்சி முன்னெடுக்கப்பட்டிருப்பதாகப் பிரசாரம் செய்துவருகின்றனர்.
இந்தச் சுவரொட்டிகள் நாட்டின் தலைநகர் கொழும்பிலும் ஒட்டப்பட்டிருக்கின்றன.விடுதலைப்புலிகளை மீளிணைக்க முயல்கின்றார்கள் என்று இராணுவப் பேச்சாளர் உட்பட இராணுவ அதிகாரிகளும், அரச தரப்பு அரசியல் வாதிகளும், அரசாங்கமும் கூறிவருகின்ற போதிலும், தேடப்படுகின்றார்கள் என்று அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுவரொட்டிகள் மற்றும் பத்திரிகை அறிக்கைகளில், தேடப்படுபவர்கள் பல்வேறு குற்றச்செயல்களுடன் சம்பந் தப்பட்டிருப்பதாகவும், அதற்காகவே அவர்கள் தேடப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
தேடப்படுபவர்கள் உண்மையிலேயே விடுதலைப்புலிகளை மீண்டும் ஒன்றிணைக்க முயற்சிக்கின்றார்கள் என்றால், ஏன் அவ்வாறு இந்த அறிவித்தல்களில் குறிப்பிடப்படவில்லை என்று பொதுமக்கள் வினவுகின்றார்கள்.
தேடப்படுபவர்கள் தொடர்பில் அரசாங்கத்திற்கும், இராணுவத்திற்கும் சரியான தெளிவு இல்லையென்றும், இது புலிப்பூச்சாண்டி காட்டி, போரினால் பாதிக்கப்பட்டுள்ள தங்களை இம்சிப்பதற்காகவே இந்த நாடகத்தை அரசு அரங்கேற்றியிருப்பதாகவே மக்கள் சந்தேகம் கொண்டிருக்கின்றார்கள்.தேடப்படுகின்ற கோபி என்பவருக்கு அடைக்கலம் கொடுத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே கிளிநொச்சி விசுவமடு பகுதியில் தமது வீட்டிலிருந்த ஜெயக்குமாரியும் அவருடைய மகள் விபூசிகாவும் பெரிய இராணுவ சுற்றிவளைப்பொன்றின்போது கைது செய்யப்பட்டிருந்தார்கள்.
பயங்கரவாதம் மீண்டும் தலையெடுக்க அனுமதிக்க முடியாது. பொதுமக்கள் அதனை விரும்பவில்லை. அவர்களின் பாதுகாப்புக்காகவே இந்த இராணுவ நடவடிக்கைள் மேற்கொள்ளப்படுகின்றன என்று இராணுவ பேச்சாளர் குறிப்பிட்டிருக்கின்றார்.நெருக்குவாரங்கள்
ஆனால் இந்த இராணுவ நடவடிக்கை காரணமாக தாங்கள் அச்சமடைந்திருப்பதுடன், அன்றாட வாழ்க்கையில் அமைதியிழந்திருப்பதாகவே பொதுமக்கள் கூறுகின்றார்கள்.
தேடுதல் என்ற போர்வையில் வீடுகளுக்குள் புகுந்து அலசுவதும், புதியவர்கள் யாரேனும் வந்தார்களா?, வெளிநாடுகளில் இருந்து யாரும் பணம் அனுப் பினார்களா?,
பிறந்த இடம் எங்கே, எவ்வளவு காலம் தற்போதைய இடத்தில் இருக்கின்றீர்கள்?, அதற்கு முன்னர் எங்கிருந்தீர்கள் என்ன செய்தீர்கள் என்று கேள்விகள் கேட்டு குடைந்தெடுப்பதாகவும் சிலர் கூறுகின்றார்கள்.
கிராமப்பகுதிகளில் சில வேளைகளில் நீண்டநேரம் இராணுவத்தினரும் புலனாய்வாளர்களும் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதனால் என்ன நடக்கப்போகின்றதோ, யார் யாரைப் பிடித்துச் செல்லப்போகின்றார்களோ என்று தங்களுக்கு அச்சமாக இருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றார்கள்.
முன்னாள் போராளிகளின் நிலைமைகள் இதை விட மோசமாக இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. புனர்வாழ்வு பெற்று சமூகத்தில் இணை க்கப்பட்டுள்ள தங்களை படையினர் தொடர்ச்சியாகக் கண்காணித்து வருவதுடன், அடிக்கடி கூட்டங்கள் நிகழ்வுகள் என்று அழைத்து தமது நேரடித் தொடர்பில் வைத்திருக்கின்றபோதிலும், இப்போது புதிது புதிதாக வருபவர்கள் தங்களைத் தேடி வந்து பதிவுகளை மேற்கொள்வதாகக் கூறியிருக்கின்றனர்.
பதிவுகளுக்காக வருபவர்கள் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்தீர்களா? எவ்வளவு காலம் இருந்தீர்கள், என்ன செய்தீர்கள், இப்போது என்ன செய்கின்றீர்கள்?, வெளிநாட்டுத் தொடர்புகள் இருக்கின்றதா, வெளிநாடுகளில் இருந்து பணம் வருகின்றதா?, ஏன் வருகின்றது என்று கேள்விகளால் தங்களைத் துளைத்தெடுப்பதா கவும், இதனால் தங்களுக்குப் பெரும் அசௌகரியங்கள் ஏற்பட்டிருப்பதாக அவர்கள் கூறியிருக்கின்றனர்.
தங்களைத் தேடி வருபவர்கள், தாங்கள் வேலை க்குச் சென்றிருந்தால் அல்லது அலுவல்கள் காரணமாக வெளியில் சென்றிருந்தால் தாங்கள் வரும் வரையில் பல மணித்தியாலங்களாக பதிவுக்காக வருபவர்கள் தமது வீட்டுப் பகுதிகளில் காத்திருப்பனால், அயல் வீடுகளில் உள்ளவர்களும் அச்சமடைந்து, தங்கள் மீது வெறுப்படைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
புனர்வாழ்வு பெற்று சுயதொழிலுக்காக வங்கியில் கடன் எடுத்து தொழில் செய்பவர்களும் படையினரின் இத்தகைய நடவடிக்கைகளினால் தொழில் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், வியாபாரம் செய்யும் இடங்களில் இவர்களின் கண்காணிப்பு நடவடிக்கையினால் வாடிக்கையாளர்கள் வருவது குறைந்து செல்வதாகவும், இதனால் வங்கிக்கு கடன் செலுத்த முடியாத நிலமை ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கின்றனர்.
இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள சிலர் வங்கிகளிடம் தங்களால் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டிருப்பது குறித்து எடுத்துக் கூறியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தமிழ் மக்கள் சமூக அடிப்படையில் தலைமைத்துவம் மிக்கவர்களாக மாறிவிடக் கூடாது என்பதற்காகவே இத்தகைய இராணுவ தேடுதல் மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக சமூகவியலாளர்கள் கருதுகின்றார்கள்.
விடுதலைப்புலிகள் பலம் பெற்றிருந்த காலத் தில் சிங்களப் பேரினத்தின் அரசியல் சக் தியைப் பலவீனப்படுத்துவதற்காக ஆளுமைபெற்றிருந்த சிங்கள அரசியல் தலைவர்களை குறிவை த்து தாக்குதல்களை மேற்கொண்டிருந்தார்கள்.
பலர் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள், அல்லது அவர்களுடன் இணைந்து செயற்பட்டார்கள் என்று குறிப்பிட்டு அடையாளம் தெரியாத வகையில் சுட்டுக்கொல்லப்பட்டார்கள் என்றும் சமூகவியலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றார்கள். இப்போதைய நிலையும் அந்த நிலைமையுடன் ஒப்பு நோக்க தூண்டப்படுவதாகவும் அவர்கள் கூறுகின்றார்கள்.புலம்பெயர்ந்தவர்கள் மீதும் நெருக்குதல்கள்
களத்தில் மட்டுமல்லாமல் புலத்தில் உள்ளவர்கள் மீதும் இலங்கை அரசு தனது அதிகாரத்தையும் நெருக்குதல்களையும் பிரயோகித்திருக்கின்றது. புலம் பெயர் தமிழர்களின் 16 அமைப்புக்களைத் தடைசெய்துள்ள அரசு, அந்த அமைப்புக்களுடன் தொடர்புடையவர்கள் எனக் குறிப்பிட்டு, நானூறுக்கும் மேற்பட்டவர்களை நாட்டுக்குள் பிரவேசிக்க முடியாது எனக் கூறி தடை விதித்திருக்கின்றது.
இந்தத் தடையுத்தரவை அரசாங்கம் தனது வர்த்தமானிப் பத்திரிகை மூலமாகப் பிரகடனப்படுத்தியிருக்கின்றது, பயங்கரவாதம் மீண்டும் தலையெடுக்கக் கூடாது என்பதற்காக, ஐ.நா. மன்றத்தின் சட்ட விதியொன்றைத் துணையாகக் கொண்டு தடைசெய்யப்பட்டுள்ள தமிழர் நிறுவனங்களினதும், ஆட்களினதும் பெயர்ப் பட்டியல்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன.
ஐ.நா. சபையின் பிரகடனங்களை ஏற்று, அவற்றுக்கமைவாக செயற்படுவதாக உறுதியளித்து, ஐ.நா. மன்றத்தில் இலங்கை உறுப்புரிமை பெற்றிருக்கின்றது.
இந்த நிலையில் ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இந்த வருடத்துடன் மூன்று பிரேரணகைள் அமெரிக்காவினால் கொண்டு வரப்பட்டிருக்கின்றன. ஆயினும் மூன்று பிரேரணைகளையும் இலங்கை அரசாங்கம் நிராகரித்திருக்கின்றது.
ஐ.நா. மன்றப் பிரகடனங்களை ஏற்றுக’கொண்டுள்ள அதேநேரம், ஐ.நா. மனித உரிமைப் பேரவை பிரேரணைகளின் மூலமாக வலியுறுத்தப்பட்டுள்ள பொறுப்பு கூறல் கடமையைச் செய்ய மாட்டேன் என்று அரசு அடம் பிடித்துக்கொண்டிருக்கின்றது.
மறுபுறத்தில், ஐ.நா. மன்றத்தின் விதிமுறையொன்றை கையில் எடுத்துக்கொண்டு, நானூறுக்கும் மேற்பட்ட தமிழர்களையும், 16 தமிழர் அமைப்புக்களையும் தனக்கு வசதியாக இந்த அரசு தடை செய்திருக்கின்றது. முரண்பாடான இந்த செய்கை என்பது இல ங்கை அரசாங்கத்தின் தனி முத்திரையென்றே சொல்ல வேண்டும்.
இறுதி யுத்தத்தின்போது, இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், மானுடத்திற்கு எதிரான காரியங்கள் என்பன குறித்து பொறுப்பு கூறுவதற்கு மறுப்பு தெரிவிக்கின்ற அரசாங்கம், அத்தகைய மீறல் நடவடிக்கைகளில் விடுதலைப்புலிகளே ஈடுபட்டிருந்தார்கள் என்று பிரசாரம் செய்து வருகின்றது.
யுத்தம் முடிவடைந்து ஐந்து வருடங்களாகின்ற நிலையிலும், அரச தொலைக்காட்சிகளில் இன்றைய திகதியில் அன்று நடந்தது என்ற தலைப்பில் விடுதலைப்புலிகள் நடத்திய தாக்குதல்கள் பற்றிய விவரணக் காட்சிகள் ஒவ்வொரு நாளும் இப்போது ஒளிபரப்பப்பட்டு வருகின்றது.
இன அழிப்பை மறைமுக நிகழ்ச்சி நிரலாகக் கொண்டுதான் இந்த அரசு செயற்படுகின்றதோ என்ற சந்தேகத்தையும் இது உறுதிப்படுத்த முற்படுகின்றது.
இதனை உறுதிப்படுத்தும் வகையிலேயே, தேசிய ஐக்கியத்துக்கான மாநாட்டில் முக்கிய உரையாற்றிய ஜனாதிபதி இந்த நாட்டில் சிறுபான்மையினர் என்று எவரும் கிடையாது என்று குறிபபிட்டிருக்கின்றார்.
யுத்தம் முடிவுக்கு வந்தவுடன் இதே கருத்தை வெளியிட்ட ஜனாதிபதி நாட்டில் பெரும்பான்மையானவர்கள் என்பது அரசுக்கு ஆதரவானவர்கள் என்றும் சிறுபான்மையினர் என்பது அரசுக்கு விரோதமானவர்கள் என்றும் வியாக்கியானம் கூறியிருந்தார்.
அந்த நிலைப்பாட்டை அவர் மீண்டும் நினைவூட்டி, நிலைநிறுத்தியிருப்பதன் மூலம், இந்த நாட்டில் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்ற தேவையே கிடையாது என்பதை ஆழமாகவும் ஆணித்தரமாகவும் உணர்த் தியிருக் கின்றார்.
சிறுபான்மையினராகிய தமிழ் மக்களின் அரசி யல் அபிலாஷைகளை அடிப்படையா கக் கொண்ட இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்பது தமிழ் மக்களின் நிலைப்பாடு.
செல்வரத்தினம் சிறிதரன்-