Site icon ilakkiyainfo

சி.ஐ.ஏ. எப்படி ஏவுகணைகளை சிரியாவுக்கு உள்ளே கடத்தி சென்று கொடுத்தார்கள் தெரியுமா?

சிரியாவில் நடக்கும் உள்நாட்டு யுத்தத்தில், அரசு ராணுவத்துக்கு எதிராக போர் புரியும் போராளி அமைப்பினருக்கு, அமெரிக்க உளவுத்துறை சி.ஐ.ஏ.வால் செய்யப்பட்ட ரகசிய ஆயுத சப்ளை பற்றி News ஒன்று வெளிவந்துள்ளது.

சிரியாவில் யுத்தம் புரியும் போராளி இயக்கங்களின் கைகளுக்கு, இந்த புதிய அமெரிக்க ஆயுதங்கள் போய் சேர்ந்துள்ளன.

சிரியாவில், ராணுவத்துக்கு எதிராக யுத்தம் புரியும் சுமார் ஒரு டஜன் இயக்கங்கள் உள்ளன. இவற்றில் சில நேரடியாக அல்-காய்தா மற்றும் அதுபோன்ற இயக்கங்களுடன் தொடர்புடையவை. வேறு சில இயக்கங்களுக்கு, மறைமுகமாக தொடர்புகள் உள்ளன.

இதனால், அனைத்து இயக்கத்தினரின் கைகளுக்கும் போய் சேராமல், குறிப்பிட்ட சில (எமக்கு கிடைத்த தகவலின்படி இரண்டு) இயக்கங்களை சி.ஐ.ஏ. தேர்ந்தெடுத்து ஆயுத சப்ளை செய்துள்ளது.

சமீபகாலமான போராளி இயக்கங்கள் ராணுவத்துக்கு எதிராக தாக்குப்பிடிக்க முடியாமல் தடுமாறுவதே, இந்த ரகசிய ஆயுத சப்ளைக்கு காரணம்.

இந்த இயக்கங்கள் எவை? இவர்களுக்கு எப்படி இந்த ஆயுதங்கள் போய் சேர்ந்தன? என்ன ரகத்திலானா ஆயுதங்கள் இவை? எமக்கு கிடைத்த சில சுவாரசியமான தகவல்களை, ராணுவ வட்டாரங்களில் உறுதி செய்துள்ளோம்.

இதோ அந்த விபரங்கள்..
சிரியாவில் நடக்கும் உள்நாட்டு யுத்தத்தில் அமெரிக்க நவீன ஆயுதங்கள் போய் இறங்கியிருப்பது, இதுதான் முதல் தடவை. அமெரிக்காவால் கொடுக்கப்பட்டவை, கனரக டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகள் (heavy anti-tank missiles) என்றே தெரிகிறது.

அமெரிக்கா சொந்தமாக தயாரிக்கும் ஏவுகணை இது (வழமையாக வெளிநாட்டு இயக்கங்களுக்கு சி.ஐ.ஏ. மூலமாக ஆயுத சப்ளை செய்யும்போது, தமது சொந்த தயாரிப்பு ஆயுதங்களை அமெரிக்கா கொடுப்பதில்லை. வெளிச் சந்தையில் (ஆயுத கருப்பு சந்தை) வாங்கப்படும் ஆயுதங்களையே கொடுப்பார்கள். அவை பெரும்பாலும், ரஷ்ய, சீன அல்லது வட கொரிய தயாரிப்பு ஆயுதங்களாக இருக்கும்)

BGM-71 TOW’ ரக ஏவுகணைகள்

கிடைத்த தகவல்களின்படி கொடுக்கப்பட்டவை, ‘BGM-71 TOW’ ரக ஏவுகணைகள். இதிலுள்ள TOW என்பது எதைக் குறிக்கிறது தெரியுமா? “Tube-launched, Optically-tracked, Wire-guided”!

நிஜமாகவே உள்நாட்டு தரை யுத்தத்தில் அட்டகாசமாக வேலை செய்யக்கூடிய சூப்பர் ஏவுகணைகள்  (அருகேயுள்ள போட்டோ பார்க்கவும்)

அதுவும், சிரியா ராணுவத்தின் டாங்கிகள் (பெரும்பாலும் ரஷ்ய தயாரிப்பு டாங்கிகள்) எந்த ரகமானவை என்பதை பார்த்து, அதை அடிக்கக்கூடிய வகையான ஏவுகணைகளை கொடுத்திருக்கிறது அமெரிக்கா.

சிரியா ராணுவம் தற்போது உபயோகிக்கும் டாங்கிகளின், கவசப் பகுதிகள் 500mm தடிப்புள்ளவை. போராளி இயக்கத்தினர் தம்மிடமுள்ள ராக்கெட் லோஞ்சர்கள் மூலம் இவற்றை தாக்கும்போது, டாங்கிகள் பெரிதும் சேதமடைவதில்லை.

இதனால் அவை தொடர்ந்து நகர்ந்து வந்து தாக்குவதாலேயே, போராளி படையினர் பெரும் அழிவுகளை சந்திக்க நேரிடுகிறது.

போராளி இயக்கத்தினர் கைப்பற்றி வைத்திருந்த பகுதிகள்மீது, சிரியா ராணுவத்தினர் டாங்கிகள் கொண்டு தாக்குதல் நடத்துவதால், அந்த பகுதிகளை போராளி இயக்கத்தினர் இழந்து பின்வாங்க வேண்டிய நிலை உள்ளது.

தற்போது அமெரிக்கா கொடுத்துள்ள ‘BGM-71 TOW’ ரக ஏவுகணைகள் எப்படியானவை தெரியுமா? 500mm தடிப்புள்ள கவசப் பகுதிகள் உள்ள டாங்கிகளை 4 கி.மீ. தொலைவில் இருந்து அடிக்கலாம்!

சரி. சுமார் ஒரு டஜன் போராளி இயக்கங்கள் உள்ள நிலையில், எந்த இரு போராளி இயக்கங்களுக்கு இந்த ஏவுகணைகளை சி.ஐ.ஏ. மூலம் கொடுத்துள்ளது அமெரிக்கா?

‘ஃபிரீ சிரியன் ஆர்மி’ இயக்கத்தின் ஒரு பிரிவு, அப்துல்-ஹிலா அல் பஷீர் தலைமையில், கனெய்ட்ரா நகரை தளமாக வைத்து இயங்குகிறது. அந்தப் பிரிவுக்கு இந்த ஆயுதங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

இந்த ஏவுகணைகள் கொடுக்கப்பட்ட மற்ற இயக்கம், எஸ்.ஆர்.எஃப். எனப்படும் ‘சிரிய புரட்சி முன்னணி’. இவர்கள் பெரும்பாலும் சிரியாவின் வட பகுதியில் யுத்தம் புரிகின்றனர். ஜமால் மரூஃப் என்பவர், இந்த இயக்கத்தின் தலைவர்.

இந்த இரு இயக்கத்தினரும், தற்போது அமெரிக்க ஏவுகணைகளை உபயோகித்து சிரியா ராணுவத்தை தாக்க தொடங்கியுள்ளனர். இதன் விளைவுகள் அடுத்த சில தினங்களில் தெரியவரும்.

சரி. சி.ஐ.ஏ. எப்படி இந்த ஏவுகணைகளை சிரியாவுக்குள் கொண்டுபோய், இந்த இயக்கங்களிடம் கொடுத்தது?

கடந்த சில நாட்களாக இந்த ஏவுகணைகள் கார்கோ விமானங்களில் ஏற்றப்பட்டு, இரு வெவ்வேறு விமான மார்க்கங்களில் ரகசியமாக கொண்டு செல்லப்பட்டன.

ஒரு விமானப்பாதை, ஐரோப்பாவில் (அநேகமாக ஜெர்மனியில் உள்ள அமெரிக்க விமானப்படை தளம்) இருந்து, துருக்கியின் தென்கிழக்கே தியார்பாகிர் நகரில் உள்ள சிறிய விமானத் தளத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

மற்றொரு பாதையில், ஏவுகணைகளை ஏற்றிக்கொண்டு கார்கோ விமானங்கள் ஐரோப்பாவில் இருந்து புறப்பட்டு, சவுதியின் வடக்கே கிங்-பைஸால் விமானப்படை தளத்தில் போய் இறங்கின. தாபுக் என்ற நகரில் உள்ள இந்த தளம், ஜோர்தான் எல்லையருகே உள்ளது.

இந்த இரு இடங்களிலும் இருந்து தரை மார்க்கமாக சிரியா நாட்டு எல்லையை கடந்து, ஏவுகணைகளை சப்ளை செய்துள்ளது சி.ஐ.ஏ.!

Exit mobile version