நல்லூர் கந்தசுவாமி கோவில்பகுதியில் 5 கடைகள் உடைத்து சுமார் 5 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் மற்றும் பணம் திருடப்பட்டுள்ள அதேவேளை மேலும் நான்கு கடைகளில் திருட்டு முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
யாழ். நல்லூர் ஆலயச்சூழலில் நேற்று இரவு இடம்பெற்ற மேற்படி திருட்டுச்சம்பவத்தையடுத்து பெருமளவான பொலிஸார் பிரசன்னமாகியதோடு இராணுவத்தினரும் அங்கு வருகைதந்திருந்தனர்.
தீவிர விசாரணைகளை மேற்கொண்ட யாழ்ப்பாணம் பொலிஸார் தடயவியல் நிபுணர்களையும் அழைத்து தேடுதல் நடத்தினர். இதில் பொலிஸாரினால் திருடர்கள் கொண்டு வந்த தாக மதுபான டின் ஒன்று மட்டுமே மீட்கப்பட்டுள்ளது.
இதேவேளை திருமணம் முடிந்து நான்காம் நாள் சடங்கு இடம்பெற்ற வீட்டினுள் புகுந்த திருடர்கள் 15 பவுண் தாலிக்கொடியையும் 12 பவுண் தங்க நகைகளையும் திருடிச் சென்றுள்ளனர் என்று கோப்பாய் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் உரும்பிராயில் நேற்றைய தினம் இடம் பெற்றுள்ளது.
சம்பவதினத்தன்று அதிகாலை 2.30 அளவில் குறித்த வீட்டுக்குள் புகுந்த திருடர்கள் தமது கைவரிசையைக் காட்டியுள்ளனர். இதன்போது 15 பவுண் தாலிக் கொடியையும் ஏனைய 12 பவுண் நகைகளையும் திருடர்கள் திருடிக் கொண்டு மாயமகி உள்ளனர்.
மறுநாள் காலை எழுந்து பார்த்தபோதே நகைகள் திருடப்பட்டமை தெரிய வந்தது. இது தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தனர்.