பதவியாவை அண்மித்த காட்டு பகுதியில் இராணுவத்தினருடன் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்த கோபி, அப்பன் மற்றும் தேவியன் ஆகியோரின் சடலங்கள் இன்று முற்பகல் அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.
இந்த சடலங்களை நீதிமன்ற உத்தரவிற்கமைய அநுராதபுரத்தில் அடக்கம் செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு புத்துயிரளிப்பதற்கு தலைமைத்துவம் வழங்கிய செல்வாநாயகம் கஜீபன் எனப்படும் கோபி, சுந்தரலிங்கம் கஜீபன் எனப்படும் தேவியன் மற்றும் நவரத்னம் நவனீதன் எனப்படும் அப்பன் ஆகியோர் பதவியாவை அண்மித்த காட்டு பகுதியில் இராணுவத்தினருடன் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்ததாக நேற்று அறிவிக்ககப்பட்டிருந்தது.
உயிரிழந்த கோபி, அப்பன் மற்றும் தேவியன் ஆகியோரின் சடலங்கள் பூர்வாங்க பரிசோதனைகளுக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு இன்று கொண்டுசெல்லப்பட்டன.
உயிரிழந்தவர்களின் உறவினர்கள் சிலரும் வைத்தியசாலையில் பிரசன்னமாகியிருந்ததுடன், பொலிஸார் அவர்களிடம் வாக்குமூலம் பதிவுசெய்துகொண்டனர்.
இதுதொடர்பாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண குறிப்பிடுகையில்
“இந்த சம்பவம் குறித்து இராணுவத்தினாரால் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதன் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கெப்பித்திகொல்லாவ நீதவானினால் நேற்று மரண விசாரணை நடத்தப்பட்டது.
இதனையடுத்து நீதவானின் உத்தரவின் பேரில் பிரேத பரிசோதனைக்காக இந்த சடலங்கள் அனுராதபுரம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.
அங்கு விசேட சட்ட வைத்திய அதிகாரியினால் இன்று பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. அதன் பின்னர் நீதிமன்ற உத்தரவின்படி இந்த சடலங்களை அடக்கம் செய்யப்பட்டுள்ளன.”
இலங்கையின் வடக்கே நெடுங்கேணி பிரசேத்தில் சுற்றிவளைப்பு நடவடிக்கையொன்றின்போது சுட்டுக்கொல்லப்பட்ட கோபி என்று இலங்கை இராணுவத்தினரால் அழைக்கப்படுகின்ற செல்வநாயகம் கஜீபனின் உடலை, பூஸா தடுப்பு முகாமில் வைக்கப்பட்டுள்ள அவருடைய தாயார் செல்வநாயகம் இராசமலர், அவருடைய மனைவி கஜீவன் சர்மிளா ஆகியோருடன், அவருடைய மாமனாராகிய செகராசசிங்கம் பாலகுருபரன் ஆகியோர் அடையாளம் காட்டியிருக்கின்றனர்.
நெடுங்கேணி வெடிவைத்தகல் பகுதியில் இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லபட்ட கோபி, தேவியன், அப்பன் ஆகிய மூன்று பேருடைய சடலங்களும் நேற்று வியாழக்கிழமை மாலை அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மருத்துவ பரிசோதனை மற்றும் விசாரணைகளுக்காகக் கொண்டு செல்லப்பட்டிருந்தன.
‘புலிகள்’ அமைப்பின் கோபி உட்பட மூவர் சுட்டுக்கொலை–ராணுவம்
13-04-2014
இந்தச் சம்பவம் பற்றி கேள்விப்பட்டதும், அனுராதபுரம் வைத்தியசாலைக்குச் சென்று பயங்கரவாதப் புலனாய்வு பொலிசாரின் அனுமதி பெற்று செல்வநாயகம் கஜீபன் என்ற தனது மருமகனுடைய உடலைப் பார்வையிட்டதாக திருகோணமலை பாலைக்குழியில் உள்ள செகராசசிங்கம் பாலகுருபரன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
கஜீபனின் உடலில் இடது கை, நெஞ்சுக்குக் கீழ்ப்பகுதி மற்றும் அடிவயிறு ஆகிய இடங்களில் துப்பாக்கிச் சூட்டுக்காயங்கள் காணப்பட்டதாகவும், தான் சென்று பார்ப்பதற்கு முன்பாக, பூஸா முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தனது மகள் சர்மிளா மற்றும், கஜீபனின் தாயார் ஆகியோர் அழைத்து வரப்பட்டு,
அவர்களால் சடலம் அடையாளம் காணப்பட்டிருந்தாகவும் பாலகுருபரன் கூறினார்.
“கோபி” எனப்படும் செல்வநாயகம் கஜீபன்
இயக்கச்சியைச் சொந்த இடமாகக் கொண்ட கஜீபன் தனது மகள் சர்மிளாவை அவர் திருகோணமலைக்கு வந்திருந்தபோது விரும்பி திருமணம் முடித்திருந்ததாகவும், திருமணத்தின் பின்னர் அவர் மூன்று ஆண்டுகள் சவூதி அரேபியாவில் தொழில் செய்ததாகவும், பின்னர் கடந்த ஜனவரி மாதத்தின் பின்னர் அவருடன் தங்களுக்குத் தொடர்பில்லாமல் இருந்து இப்போது அவரை சடலமாகக் கண்டதாகவும் பாலகுருபரன் பிபிசியிடம் கூறினார்.
புயங்கரவாத சம்பவத்துடன் சம்பந்தப்பட்டிருப்பதனால், கஜீபனின் சடலம் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய அரச செலவிலேயே அடக்கம் செய்யப்படும் என்று காவல்துறையினர் தமக்குத் தெரிவித்ததாகவும், தமது மகளும், கஜீபனின் தாயாரும் மீண்டும் பூஸா முகாமுக்கே கொண்டு செல்லப்பட்டிருப்பதாகவும் கஜீபனின் மாமனாராகிய பாலகுருபரன் தெரிவித்தார்.
அனுராதபுரம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள தேவியன் மற்றும் அப்பன் ஆகியோருடைய சடலங்கள், அவர்களுடைய உறவினர்களினால் அடையாளம் காணப்பட்டதா இல்லையா, என்பது பற்றிய தகவல்கள் எதுவும் உடனடியாகக் கிடைக்கவில்லை.
-பிபிசி-