தமிழகத் திரைப்படத்துறையை மட்டுமன்றி தமிழக அரசியலையும் வேற்று மாநிலத்தவர்கள் ஆக்கிரமித்துக் கொண்டு தமிழ் சினிமாத் துறையையும் தமிழக அரசியலையும் ஆட்டிப்படைத்துக் கொண்டுவருவது காலங்காலமாக நடந்து வருவபவையாகும்.
தெலுங்கு பேசும் மக்களுக்கு ஆந்திராவும் மலையாளம் பேசும் மக்களுக்கு கேரளமும் கன்னடம் பேசும் மக்களுக்கு கர்நாடகமும் மொழி வாரியாக பிரித்து வழங்கப்பட்டதைப் போன்றே தமிழர்களுக்கென்று தமிழ்நாடு அல்லது தமிழகம் பிரித்து வழங்கப்பட்டது.
மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டதையடுத்து ஆந்திரா கேரளா கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் அந்தந்த இனத்தவரே ஆட்சிப் பொறுப்பில் இருந்து வருகின்றனர்.
அந்த மாநிலங்களில் வேற்று இனத்தவர் ஆட்சி செய்யமுடியாது ஆட்சி செய்ய நினைத்துப்பார்க்கவும் முடியாது. ஆனால் இவை எல்லாவற்றுக்கும் விதிவிலக்காகவே தமிழகம் இருக்கிறது.
தமிழகத்தில் மட்டுமே தெலுங்கர், மலையாளி; கன்னடர் என வேற்று மாநிலத்தவர்கள் ஆட்சியதிகாரத்தில் இருக்கின்றனர். இருந்துவந்தனர். தமிழக ஆட்சிப்பொறுப்பில் இருந்தவர்களில் ஒரு சிலரே தமிழர்கள்.
அவர்களில் பேரரிஞர் சி.என்.அண்ணாதுரை, கர்மவீரர் காமராஜர் போன்றவர்களையே கூறலாம். ஏனையவர்கள் பிறப்பால் தெலுங்கர், மலையாளி, கன்னடர்களாகும். ஆனாலும் தமிழர்கள் என சொல்லிக் கொள்வதுடன் தமிழே உயிர்மூச்சு என்று போலியாக சூளுரைத்துக் கொண்டிருக்கின்றனர்.
தமிழகத்தை ஆட்சி செய்த + ஆட்சி செய்து வரும் நீண்ட கால முதல்வர்கள் சிலர் தமிழர் அல்லாதவர்கள் என்பது பலருக்குத் தெரிந்த விடயம். இப்போது இன்னுமொரு வேற்று இனத்தவர் தமிழக முதல்வராகும் நோக்கத்துடன் திட்டமிட்டு செயற்பட்டு வருகின்றார்.
தமிழர்களை ஏமாற்றும் பிரதான கருவியான சினிமா மூலம் நுழைந்தவர், இன்று அரசியல்கட்சி ஆரம்பித்து ஆட்சியையும் பிடிக்கப் பார்க்கிறார்.
தமிழனையே தமிழகத்தில் இருந்து விரட்டப்பார்க்கிறார் இந்த நடிகர் மற்றும் தலைவர்.
தமிழகத்தின் பெரும் கலைஞனான வைகைப்புயல் வடிவேலை இல்லாதொழிக்கும் முயற்சியிலேயே இந்தத் தலைவர் இறங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நடிகர் வடிவேலு மதுரைத்தமிழர். 54 வயதாகும் நடிகர் வடிவேலு நகைச்சுவை நடிப்பில் தனக்கென உலகத் தமிழர்கள் மத்தியில் தனியான இடத்தைப் பிடித்துக் கொண்டவர். பாடகராகவும் புகழ் பெற்றவர்.
1991 இல் கஸ்தூரி ராஜாவின் இயக்கத்தில் வெளிவந்த ‘என் ராசாவின் மனசிலே’ என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பல படங்களில் நடிக்கத் தொடங்கினார்.
பின்னர் ஒரு காலத்தில் வடிவேலுவின் நகைச்சுவை இல்லையென்றால் அந்தப் படம் ஓடாது என்ற நிலைமை ஏற்பட்டது. வடிவேலுவின் நகைச்சுவை இயற்கையாகவும் இயல்பாகவும் இருப்பதுடன் நகைச்சுவையை வெளிப்படுத்தும் அங்க அசைவுகளும் அவரது வெற்றிக்கு காரணமாக இருந்தது. பிலிம்பேர் விருது தமிழக அரசு விருது என்பன அவருக்குக் கிடைத்தன.
கடந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க. வில் இணைந்த வடிவேலு அந்தக் கட்சிக்காகப் பிரசாரத்தில் ஈடுபட்டார். அந்த தேர்தலில் தற்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவின் அ.தி.மு.க.வும் நடிகர் விஜயகாந்தின் தே.மு.தி.க.வும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன.
தேர்தல் பிரசாரத்தின் போது ஜெயலலிதாவை தரக்குறைவாகவோ தாக்கியோ பேசாத வடிவேலு, விஜயகாந்தை விமர்சித்துப் பேசியிருந்தார். எதிர்பாராத விதமாக தேர்தலில் தி.மு.க. தோல்வியடைந்தது.
ஜெயலலிதா – விஜயகாந்த் கூட்டணி வெற்றி பெற்றது. அ.தி.மு.க., – விஜயகாந்த் கூட்டணி வெற்றியுடன் வடிவேலின் வீழ்ச்சியும் ஆரம்பமானது.
ஆமாம், ‘வடிவேலுக்கு படங்களில் வாய்ப்புக்கள் கொடுக்கக்கூடாது’ என்று இரகசிய கட்டளையிடப்பட்டது. மீறி படவாய்ப்புக் கொடுத்தவர்கள் அச்சுறுத்தப்பட்டனர்.
அவர்களது திரைப்படங்களை வெளியிடுவதற்கு தடை விதிக்கப்பட்டன. இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டன. மொத்தத்தில் தமிழ்த்திரைப்பட உலகம் வடிவேலுவை தீண்டத்தகாதவர் போல ஒதுக்கிவைத்தன.
இவை அனைத்துக்கும் காரணம் யார் என்பதை வெளிப்படையாக அனைவரும் பேசினர். கடந்த மூன்று வருடங்களாக அஞ்ஞாத வாசம் புரிந்த வடிவேலுவுக்கு அரசியலே வேண்டாமென்று போய் விட்டது.
இந்த நிலையிலேயே தெனாலிராமன் படத்தில் வடிவேலு நடித்து முடித்துள்ளார். அந்தப்படத்தை வெளியிட வேண்டியது மட்டுமே மிகுதியாக உள்ளது.
இந்தப் படத்தை வெளியிடக்கூடாது என்று தெலுங்கு அமைப்பைச் சேர்ந்த சிலர் வடிவேலுவுக்கு அச்சுறுத்தல் விடுத்து வருகின்றனர். வடிவேலுவின் வீட்டை முற்றுகையிடவும் முயன்றுள்ளனர். இவ்வாறு முற்றுகையிட்டவர்கள் மீது பொலிஸார் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. வடிவேலுவுக்கு பாதுகாப்பும் வழங்கவில்லை.
இந்த நிலையிலேயே தனக்கு உதவுமாறு தமிழ் அமைப்புக்களிடம் வடிவேலு வேண்டுகோள் விடுத்தார். அந்த வகையில் இயக்குநர் சீமான் வடிவேலுவுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து இயக்குநர் கவுதமன் வடிவேலுவுக்கு ஆதரவாக அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார். தமிழ் மண்ணின் பெரும் கலைஞனாக வடிவேலுவை மிரட்டுவது ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்தையும் உரசிப்பார்க்கும் செயல் என்றும் இதனை சம்பந்தப்பட்டவர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டுமென்றும் கவுதமன் தெரிவித்துள்ளார்.
எனினும் வடிவேலுவின் தெனாலிராமன் படத்தை வெளியிடக்கூடாது என்பதில் இந்த விஜயத்துக்கு காந்தமான தலைவர் + நடிகர் உறுதியுடன் இருக்கின்றாராம்.
தெலுங்கரான இந்த நடிகர் + தலைவரே தமது இனத்தவர்களான தெலுங்கு மக்களை தூண்டிவிட்டு வடிவேலுவுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கு இரகசிய ஏற்பாடுகளை செய்துள்ளாராம்.
இந்த உண்மை பலருக்கும் தெரியவந்து விட்டதாம். இதனையடுத்தே தமிழ் அமைப்புக்கள் வடிவேலுவுக்கு ஆதரவாகக் குரல் கொடுப்பதற்கு முன்வந்துள்ளனவாம்.
தமிழக திரைப்படத்துறையில் 80 வீதமான நடிகர்கள் நடிகைகள் மற்றும் கலைஞர்கள், தொழில்நுட்பவியலாளர்கள் வேற்று மாநிலங்களைச் சேர்ந்தவர்களேயாகும். விரல் விட்டு எண்ணக்கூடிய சிலரே தமிழர்கள்.
இவ்வாறான நிலையில் இந்த வேற்று மாநிலக் கலைஞர்களுக்கு எதிராக தமிழ்த்திரைப்பட உலகத்தினர் பொங்கி எழுந்தால் அதன் விளைவு மோசமானதாக இருக்கும்.
இதனை அந்த நடிகர் தலைவர் புரிந்து கொண்டாரா? இல்லையா? என்பது தெரியாது. ஆனால் அதைப்பற்றி அவர் கவலைப்பட்டதாகவே தெரியவில்லை என்று அந்த அமைப்புக்கள் கூறுகின்றன.
‘ஜெகஜால புஜபல தெனாலிராமன்’ என்ற குறித்த திரைப்படத்தில் கிருஷ்ணதேவராயர் பாத்திரம் தவறாகச் சித்திரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தே மேற்படி படத்தை தடை செய்ய வேண்டுமென்று தெலுங்கு அமைப்புக்கள் கூறுகின்றன.
விஜயநகரப் பேரரசர்களில் ஒருவரான கிருஷ்ணராய தேவரைப்பற்றி தவறாக சித்திரிக்கப்பட வில்லை என்பதே வடிவேலு மற்றும் படத்தயாரிப்பாளர்களின் வாதம்.
படம் இன்னும் திரையிடப்படாத நிலை யில், அந்தப் படத்தின் திரைக்கதையைப்பற்றிய விபரம் எதுவும் வெளிவராத நிலையில் தேவராயரின் பாத்திரம் தவறாகச் சித்திரிக்கப்பட்டுள்ளது என்று எவ்வாறு கூறமுடியும் என்பது தமிழ் அமைப்புக்களின் கேள்வியாகும்.
இந்தப்படத்தில் வடிவேலு நடித்திருக்கிறார் என்ற ஒரே காரணத்துக்காகவே படத்தை வெளியிடக்கூடாது என்று குறித்த அமைப்புக்கள் தெரிவிக்கின்றன.
ஒட்டுமொத்தமாக வடிவேலு என்ற தமிழ் கலைஞனை திரைப்படத்துறையை விட்டே விரட்டுவதற்கு திட்டமிட்டு ஒரு சிலர் செயற்படுவது இதன் மூலம் புலனாகின்றது.
தமிழ்த் திரைப்பட உலகிலிருந்து தமிழ்க் கலைஞர் ஒருவரை விரட்டியடிக்க சதி மேற்கொள்ளப்படுவது வேடிக்கையானது. இதற்கு முன்னரும் கூட பிரபல திரைப்பட நடிகரும் அரசியல்வாதியுமான ஒருவரினால் சந்திரபாபு போன்ற பல தமிழ் நடிகர்கள் இல்லாமல் செய்யப்பட்டதாக கேள்விப்பட்டிருக்கிறோம்.
அதேபோன்று தற்போது பக்கத்து மாநிலத்திலிருந்து தமிழகம் வந்து குடியேறி தமிழ்ப்படத்தில் நடித்து ஒரு கட்சியின் தலைவராக உயர்ந்திருக்கும் ஒருவர் தமிழரான வடிவேலுவை ஒழித்துக்கட்ட முயற்சி செய்கிறார் என்பது கவலைக்குரியது.
இப்போதே இப்படியென்றால் அந்த நடிகர் +தலைவர் தமிழகத்தின் ஆட்சியைப் பிடித்து தமிழக முதல்வரானால் தமிழர்களின் நிலைமை எப்படி இருக்கும் என்பதே தமிழ் அமைப்புக்களின் கேள்வியாகும்.
வடிவேலுவுக்குக் குரல் கொடுக்க முன்வந்திருக்கும் அமைப்புக்கள் இறுதிவரை இதற்கு ஒரு தீர்வை காணப்போவதாக அறிவித்திருப்பது வடிவேலு ரசிகர்களுக்கு ஆறுதல் தரும் செய்தியாகும்.
இவ்வாறான நிலையில் வடிவேல் ‘ஜெ’ டி.வி. நிகழ்ச்சியில் பங்குபற்றப் போவதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. பிறகென்ன ‘ஜெ’ அம்மா கட்சியில் இணைவதுதான் பாக்கி! சேருவாரா வடிவேல்?
நல்லதம்பி நெடுஞ்செழியன்