இயற்கை அருளின் அபரிமித விளைச்சலில் இருந்து தன்னிறைவுபெற்ற ஒரு தேசத்தைக் கட்டியெழுப்பும் வெற்றிப் பெருமையுடன் இந்த தமிழ், சிங்கள புத்தாண்டை நாம் கொண்டாடுகின்றோம்.
மிகச் சிறந்த பெறுமானங்களைக் கொண்ட ஒரு சிரேஷ்ட கலாசார முதுசத்தினால் மட்டுமே மானிடப் பெறுமானங்கள் நிறைந்த மக்களை உலகுக்குத் தரமுடியும். இப்பண்டிகையைப் போன்ற தேசிய கலாசாரக் கொண்டாட் டங்களின் மூலம் இதற்கான அடித்தளம் எமக்குக் கிடைக்கப்பெற்றுள்ளது.
செழுமைமிக்க கலாசாரப் பாரம்பரியங்களைத் தொடர்ச்சியாகப் பேணுவது தேசம் சுபீட்சத்தை நோக்கி துரித முன்னேற்றம் அடைந்துவருகின்றது என்பதற்கான அடையாளமாகும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
விவசாயம் மற்றும் ஏனைய துறைகளில் உற்பத்தியும் அபிவிருத்தியும் பாரிய முன்னேற்றத்தைக் கண்டுவருகின்ற ஒரு காலகட்டத்திலேயே இப்பண்டிகையை நாம் வரவேற்கின்றோம். நாட்டில் துரித அபிவிருத்திக்காக தேசிய ஐக்கியத்தைக் கட்டியெழுப்ப வேண்டியது அவசியமாகும்.
சகவாழ்வும் நல்லிணக்கமுமே இப்புத்தாண்டுப் பாரம்பரியங்களின் மிக முக்கிய சிறப்பம்சங்களாகும். ஒரு குடும்பத்தின் ஐக்கியத்தை குடும்ப எல்லையைத் தாண்டி கிராமம், நகரம் மற்றும் முழு நாட்டுக்கும் கொண்டு செல்வதே இப்புத்தாண்டு கொண்டாட்டத்தின் மிகவும் பெறுமதிவாய்ந்த அம்சமாகும்.
இலங்கையை ஆசியாவின் ஆச்சரியமாக ஆக்கும் இலக்கை நோக்கி இந்த நல்லிணக்க உணர்வைக் கட்டியெழுப்புவது பிறந்திருக்கும் இப்புத்தாண்டில் எம் எல்லோரினதும் அர்ப்பணமாக இருக்கட்டும். உங்கள் எல்லோருக்கும் சுபீட்சம் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்.