முஸ்லிம் பெண்கள் உலகில் இஸ்லாம் கூறும் நன்நெறி முறைக்கு ஏற்புடையதான வாழ்வை மேற்கொள்வதற்காக அணிய அனுமதித்துள்ள ஆடைகளின் வகை, அணிவதற்கான வரையறை, ஒழுங்கின் பிரகாரம் அவ்வாறாக அணியும் ஆடையும் பெண்களின் ஒழுக்க மாண்பிற்கு ஒரு அளவு கோலாக அமைகின்றது, மானங்காக்கும் முழுமையான பாதுகாப்பிற்கும் கற்பொழுக்கம் பேணவும் வெட்கம், மானம், மரியாதை காக்கவும் இறைவனால் அருளப்பட்ட அருட் கொடையே ஆடைகள்.
* நபியே நீர் உம்மனைவியருக்கும் உமது பெண்களுக்கும், ஈமான் கொண்டவர்களின் பெண்களுக்கும் அவர்கள் தங்கள் தலைமுந்தானைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறு கூறுவீராக! இது அவர்கள் கண்ணியமானவர்களென அறியப்படுவதற்கு மிக நெருக்கமானதாகும். அப்பொழுது அவர்கள் நோவினை செய்யமாட்டார்கள் (33: 59)
* இன்னும் முஃமினான பெண்களுக்கு நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வையை தாழ்த்திக் கொள்ளட்டும். தங்கள் வெட்கத்தலங்களைப் பேணிக்காத்துக்கொள்ளட்டும். தங்கள் அலங்காரத்திலிருந்து (சாதாரணமாக) வெளியில் தெரியக் கூடியதைத் தவிர வேறு எதனையும் வெளிக்காட்டலாகாது. இன்னும் தங்கள் முந்தானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ளட்டும். (24: 31)
மேற்கூறப்பட்டுள்ள குர்ஆன் வசனங்களிலிருந்து பெண்களுடைய ஆடை பின்வருமாறு அமைய வேண்டுமென இஸ்லாம் பணிக்கின்றது.
* அணியும் ஆடை முகத்தையும் மணிக்கட்டுக்கு கீழ் உள்ள கைகளின் பகுதிகளையும் தவிர்ந்த உடலின் ஏனைய பாகங்களையும் முழுமையாக மறைத்தல் வேண்டும்.
* உடல் அவயவங்களை வெளிக்காட்டக் கூடிய மெல்லிய துணியாக இல்லாது கனமானதாக இருத்தல் வேண்டும்.
* உடலோடு ஒட்டி உடலுறுப்புக்களின் அளவை வெளிக்காட்டும் உடையல்லாது, இறுக்கமானதன்றி தொய்வான தாராளமான பெரிய ஆடையாக அமைதல் வேண்டும்.
* உடலுக்கு அளவானதன்றி அவயவங்களை வெளிக்காட்டும் அரைகுறையாடையாக இல்லாது முழுமையான ஆடையாக அமைதல் வேண்டும்.
* ஆடையில் மேலாடைகள் உட்பட அதிக அலங்காரமாகவும் நறுமணம் தடவப்பட்டதாகவும் ஆடைகள் இருக்கக் கூடாது.
* ஒரு பெண் நறுமணம் பூசிக்கொண்டு அந்த நறுமணத்தை பிறர் நுகருமாறு மக்கள் கூடியுள்ள இடங்களை கடந்து சென்றால் அவள் விபச்சாரிக்கு சமமாவாள் என பெருமானார் ஸல் அவர்கள் கூறியுள்ளார்கள். (நஸாஈ, திர்மிதி)
* ஆண்களின் அணிந்த ஆடைகளோ அன்றி அதற்கு ஒத்த ஆடை போன்றோ இருக்கக்கூடாதென ஹதீஸ்கள் வலியுறுத்துகின்றன.
* பெண்களைப் போன்று ஆடை ஆபரணங்கள் அணிகின்ற ஆண்களையும், ஆண்களைப்போன்று ஆடை ஆபரணங்களை அணிகின்ற பெண்களையும் நபி (ஸல்) அவர்கள் சபித்தார்கள். (அபூதாவூத்)
* அந்நியமத பெண்கள் அணியும் ஆடை போன்றும் இருக்கக்கூடாது.
* யார் பிற மதக் கலாசாரத்தை பின்பற்றுகிறாரோ அவரும் அவர்களையே சார்ந்தவர்கள். (அபூதாவூத்)
* என் மீது இரு காவி நிற ஆடைகளைக் கண்ட நபி (ஸல்) அவர்கள், இவை காபிர்களின் ஆடைகள். இவற்றை அணிய வேண்டாம் என்று கூறினார்கள் என அப்துல்லா இப்னு அம்ரு (ரலி) அறிவிக்கிறார்கள்.
(முஸ்லிம், அஹ்மத், நஸாயி)
* புகழுக்கும் பிரபல்யத்திற்கும் உரியதான மமதை, கர்வத்தைத் தூண்டக்கூடியதான ஆடம்பரமான ஆடையாக அமையக்கூடாது.
மேற்கூறப்பட்ட ஷரீஆ வரையறைகளுக்கேற்பதான முறையில் உடை அணியும் போது பெண்ணினத்திற்கு இம்மை, மறுமை இரண்டிலும் பல நன்மைகளும் பயன்களும் கிடைக்க அது வழிவகுப்பதுடன்….,
இஸ்லாம் வரையறை செய்துள்ள பர்தா உடை பெண்களின் ஒழுக்க மாண்பை வெளிப்படுத்துவதுடன் கண்ணியம், கௌரவம், அடக்கம் நாணம் என்பனவான பெண்களுக்கே உரித்தான நற்பண்புகளுக்கு அணி சேர்ப்பதாகவும் சமூகத்தின் மதிப்பையும் அந்தஸ்தையும் பெண் பெறுவதற்கான சாத்தியத்தையும் பாதுகாப்புகளுக்கான உத்தரவாதமாகவும் விளங்குகின்றது.
மேலும் (முஃமினான பெண்கள்) தம் கணவர்கள் அல்லது தம் தந்தையர் அல்லது தம் புதல்வர்கள் அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள் அல்லது தங்கள் பெண்கள் அல்லது தம் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள் அல்லது ஆடவர்களில் தம்மை அண்டி வாழும் (பெண்களை விரும்ப முடியாத அளவு) வயதானவர்கள், பெண்களின் மறைவான அங்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர வேறு ஆண்களுக்கு தங்களுடைய அலங்காரங்களை வெளிப்படுத்தக் கூடாது.
மேலும் தாங்கள் மறைத்து வைக்கும் அலங்காரங்களிலிருந்து வெளிப்படுமாறு தங்கள் கால்களைப் பூமியில் தட்டி நடக்க வேண்டாம். மேலும் முஃமீன்களே!
இதில் உங்களிடம் தவறு நேரிட்டிருப்பின் நீங்கள் பிழை பொறுக்கத் தேடி, தவ்பா செய்து நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு நீங்கள் அல்லாவற்றின் பக்கம் திரும்புங்கள் (24. 31)
– பாத்திமா முஹம்மத் சாதிக்
அறிந்தோரும் அறியாதோரும்
சுவர்க்கவாதியும் நரகவாதியும் சமமாக மாட்டார்கள். அவ்வாறே இருளும் ஒளியும் சமமாகாது. அதேபோல நிழலும் வெயிலும் சமமாகாது. உயிருள்ளவர்களும் மரணித்தவர்களும் சமமாகமாட்டார்கள்.
ஆனால், அறிந்தோர்களிடத்தில் ஒவ்வொரு விடயத்தையும் பிரித்தறியக்கூடிய தன்மை இருக்க வேண்டும். விசுவாசம் கொண்டோரே! தீயவன் எவனும் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால், அதை தீர விசாரித்து தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்.
இல்லையேல் அறியாமையினால் குற்றமற்ற ஒரு சமூகத்தாருக்கு நீங்கள் தீங்கு செய்து விடலாம். பின்னர் நீங்கள் செய்தவை பற்றி நீங்களே சைசேதப்படுபவர்களாக ஆவீர்கள்.
(ஹுஜுராத்: 06)
ஒரு முஃமின் இரவில் விறகு சேகரிப்பவனை போன்று இருக்க கூடாது. சொல்லப்படும் செய்திகள் யாவற்றையும் அலசி ஆராய்ந்து நம்பி செயற்படுபவன் இரவில் விறகு சேகரிப்பவன் போலாவான், தீயவர்கள், அதிலும் வேலையற்றுக் கிடப்பவர்கள் ஒரு தனி நபரையோ அல்லது குடும்பத்தையோ அல்லது சமூகத்தையோ பொறாமை, பகைமை காரணமாக இல்லாததை இருக்கின்றதாகவும், இருக்கின்றதை இல்லாததாகவும் கூறுவார்கள்.
அத்துடன் அவதூறு, வீண்பழி சுமத்துவது, இன்னும் பல பல அவர்களுக்கு கைவந்த கலையாக இருக்கும். அதே நேரம், குற்றம் சுமத்தப்பட்டவர்கள் அல்லாஹ்விற்கு அடிப்பணிந்தவர்களாக இருந்தால் அவர்களின் நிலை என்னவாகும்?
எத்தனை தடவை ஹுஜுதில் தலை வைத்தாலும் ஈடாகுமா? ஸூரதுல் ஹுஜுராத்தின் போதனையை எத்தனை தடவைகள் தான் செவிமடுத்தாலும் அவை செவிகளுக்கு சென்றடைவதில்லை.
விசுவாசம் கொண்ட ஆண்களையும் விசுவாசம் கொண்ட பெண்களையும் அவர்கள் செய்யாத எதையும் செய்ததாகக் கூறி எவர் நோவினை செய்கிறாரோ, அவர்கள் நிச்சயமாக அவற்றையும் வெளிப்படையான பாவத்தையுமே சுமந்து கொள்கிறார்கள்.
(33:58)
ஒரு மனிதன் ஏறும் மிக மோசமான வாகனம் ‘அவர்கள் சொன்னார்கள்’ என்பதாகும். இந்த நபி மொழியின் பொருள், ஏதாவது ஒரு கருத்தை கூறிவிட்டு ‘அவர் சொன்னார் இவர் சொன்னார்’ என்று பிறரின் மேல் ஏறிக் கொள்வதாகும்.
இட்டுக்கட்டுகளில் மோசமானது, ஒரு மனிதன் தான் காணாதவற்றை கண்டதாக விபரித்துக் காட்டுவதாகும்.
(அல் – புகாரி)
இன்னும் சொன்னார்கள்:
செவிமடுத்தவையெல்லாம் பேசுவது ஒன்றே ஒரு மனிதன் பொய்யாக இருக்கப் போதுமானதாகும் (முஸ்லிம்)
இந்த அறிவற்றவர்களின் செயல்களினால் எத்தனை குழப்பங்கள், எத்தனை பிரச்சினைகள், எத்தனை நல்ல உள்ளங்கள் பிரிந்தன, பிரிகின்றன; பிரிந்து கொண்டிருக்கின்றன.
எனவே, அறிந்தவர்களாகிய நாங்கள் எங்களுக்கு வருகின்ற செய்திகளை நன்கு அறியப்பட்டு அதன் உண்மைகளையும் பொய்யையும் உறுதிப்படுத்திக் கொள்வ தற்கு வல்ல அல்லாஹ்வே அருள் புரிவானாக!
-– ஜெமீலா வஹாப்