கிளிநொச்சி, புன்னை நீராவி பகுதியில் சில தினங்களுக்கு முன்னர் யுவதி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சிவில் பாதுகாப்புப் படை உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் மூலம் புலனாகிய சாட்சியங்களின் அடிப்படையில் சந்தேகநபர் இன்று (16) காலை கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
மாத்தளை பகுதியைச் சேர்ந்த 28 வயதான யுவதி ஒருவர் கடந்த 13 ஆம் திகதி கொலை செய்யப்பட்டு புன்னை நீராவி பகுதியிலுள்ள கிணறொன்றில் வீசப்பட்டிருந்தார்.
சடலத்தின் கழுத்தில் காணப்பட்ட வெட்டுக்காயம் மற்றும் மேலும் சில தடயங்களின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், சம்பவ இடத்திற்கு அருகேயுள்ள சிவில் பாதுகாப்புப் படை முகாமில் கடமையாற்றிய வீரர் ஒருவரைக் கைது செய்துள்ளனர்.
அத்துடன், யுவதியைக் கொலை செய்வதற்காக பயன்படுத்தப்பட்ட கத்தியையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
சிவில் பாதுகாப்புப் படை வீரருடன் ஏற்பட்டிருந்த காதல் தொடர்பினால் யுவதி கர்ப்பமடைந்திருந்த நிலையில், தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு கோரி கிளிநொச்சிக்கு சென்றிருந்ததாகவும் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.
சந்தேகநபரை நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு கிளிநொச்சி பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.