பண்டிகை காலத்தின் போது நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 38 பேர் பலியாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் பதிவான உயிரிழப்புக்களை ஏற்படுத்தும் 34 விபத்துக்கள் மூலமே இந்த 38 உயிரிழப்புக்களும் பதிவாகியுள்ளதாகவும் நாடளாவிய ரீதியில் மொத்தம் 417 விபத்துச் சம்பவங்கள் நேற்று காலை ஆறு மணியுடன் நிறைவடைந்த ஆறு நாட்களில் பதிவாகியுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவர் குறிப்பிட்டார்.
கடந்த 10 ஆம் திகதி முதல் மதுபானம் அருந்திவிட்டு வாகனம் செலுத்தும் சாரதிகளைக் கைது செய்ய விஷேட பொலிஸ் குழுக்கள் போக்கு வரத்து ஒழுங்கு விதிகளைக் கண்காணிக்க என நியமிக்கப்பட்ட நிலையிலேயே இந்த விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன.
அதன் படி 10 ஆம் திகதி முதல் ஜய புதுவருட பிறப்புக்கு முதல் நாளான ஏப்ரல் 13 ஆம் திகதி வரையில் 19 பாரிய விபத்துக்கள் நாடளாவிய ரீதியில் பதிவாகியிருந்தது. அந்த விபத்துக்கள் காரணமாக 23 பேர் உயிரிழந்திருந்தனர்.
எவ்வாறாயினும் புத்தாண்டு பிறக்கும் வரையில் நாடளாவிய ரீதியில் 352 விபத்துக்கள் பதிவாகியிருந்ததுடன் அதில் 30 பேர் உயிரிழந்திருந்தனர்.
இந்நிலையிலேயே கடந்த 10 ஆம் திகதி முதல் புத்தாண்டு நிறைவுற்ற காலப்பகுதியான நேற்று காலை 6.00 மணிவரியிலான காலப்பகுதிக்குள் 38 பேர் வாகன விபத்துக்களால் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதனிடையே இந்த புத்தாண்டு காலப்பகுதியில் வாகன விபத்துக்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கும் நிலையில் திடீர் விபத்துக்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது.
கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது இம்முறை புத்தாண்டு தினமான 14 ஆம் திகதி பதிவாகியுள்ள திடீர் விபத்துக்களில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
புதுவருட தினத்தன்று வரையிலான காலப்பக் 206 பேர் மட்டுமே திடீர் விபத்துக்களால் காயமடைந்து தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும் அவர்களில் 86 பேர் மட்டுமே தங்கியிருந்து சிகிச்சைப் பெற்று வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறாயினும் கடந்த வருட பண்டிகை தின திடீர் விபத்துக்களின் போதான சம்பவங்களுடன் ஒப்பிடும் போது குறித்த தீடீர் விபத்துக்கள் 27 ஆல் குறைவடைந்துள்ளதாகவும் தீக் காயங்கள் தொடர்பிலான 03 சம்பவங்கள் மட்டுமே இம்முறை புத்தாண்டு தினத்தன்று பதிவாகியுள்ளதாகவும் தேசிய வைத்தியசாலையில் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.