புத்தரின் உருவத்தை கையில் பச்சை குத்தியிருந்த ஒரு பிரிட்டிஷ் பெண்மணியை நாட்டைவிட்டு வெளியேறுமாறு இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவிலிருந்து நேற்று விமானம் மூலம் இலங்கை வந்தடைந்த நவோமி மிஷேல் கோல்மென் எனும் அந்த பிரிட்டிஷ் சுற்றுலாப் பயணி, தனது வலது கையில் புத்தர் மற்றும் தாமரையின் உருவங்களை பச்சை குத்தியிருந்ததாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்தார்.
இதன் காரணமாக, விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட அவர், நீதிபதி ஒருவர் முன்பாக நிறுத்தப்பட்டு, நாட்டிலிருந்து வெளியேறும்படி உத்தரவிடப்பட்டுள்ளார்.
நாடு கடத்தப்படுவதற்கு முன்னதாக அவர் இப்போது குடியகல்வுத் துறையின் தடுப்பு முகாமொன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இலங்கை பௌத்த கடும்போக்கு அதிகரித்து வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுக்கள்
இலங்கையில் புத்தரின் உருவங்கள் மிகவும் உணர்வுபூர்வமானவையாகக் கருதப்படுகின்றன.
இரண்டு வருடங்களுக்கு முன்னர் இலங்கையில் புத்தர் உருவச்சிலையை முத்தமிட்டதற்காக, மூன்று பிரெஞ்சு சுற்றுலாப் பயணிகளுக்கு நிறுத்தி வைக்கப்பட்ட சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.
புத்தர் சிலைகளுக்கு முன்னர் நின்றுகொண்டு புகைப்படங்களுக்கு காட்சியளிக்க வேண்டாம் என இலங்கைச் செல்லும் பயணிகளுக்கு பிரிட்டிஷ் அரசு பயண அறிவுறுத்தல் விடுத்துள்ளது.
தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது பிரஜைக்கு வேண்டிய உதவிகளைச் செய்து வருவதாக கொழும்பிலுள்ள பிரிட்டிஷ் தூதரகம் தெரிவித்துள்ளது.