வவுனியா, நெடுங்கேணியில் வைத்து கடந்த 11 ஆம் திகதி சுட்டுக்கொலை செய்யப்பட்ட தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் புதிய தலைவர் என்று கூறப்படும் கஜீபன் என்றழைக்கப்படும் கோபியின் (வயது31) உறவினர் ஒருவரை பயங்கரவாத புலனாய்வு பிரிவினர் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.
யாழ்ப்பாணம், குருநகர் பீஜ் வீதியைச்சேர்ந்த அருளானந்தன் டினேஷ்குமார் என்பவரே சந்தேகத்தின் பேரில் நேற்று வியாழக்கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழீழ விடுதலைப்புலிகளின் புதிய தலைவர் என்று கருதப்பட்ட கோபி மற்றும் தேவியன், அப்பன் ஆகியோருக்கு உதவியதாகவே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோபியின் தொலைபேசி அழைப்பினை சோதனை செய்த போது, கோபி, தேவியன் மற்றும் அப்பன் ஆகியோருக்கு உதவி செய்தார் என்ற அடிப்படையில் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கைதுசெய்யப்பட்ட அவரை கொழும்பு பயங்கரவாத குற்றத்தடுப்பு அலுவலகத்திற்கு கொண்டு சென்றுள்ளதாகவும் பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
நெடியவன் மீதான சர்வதேச பிடியாணை தொடர்பில் நோர்வே ஆராய்வு
24-04-2014
தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் புதிய தலைவரென கருதப்படும் ஒஸ்லோ வாழ் தமிழரான பேரின்நாயகம் சிவபரன் எனப்படும் நெடியவனை கைதுசெய்ய வேண்டியதன் அவசியம் குறித்து, நோர்வே அரசாங்கத்திற்கு ஏற்படுத்தியுள்ள சர்வதேச பிடியாணை தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் அணுகுமுறையை எவ்வாறு எதிர்கொள்வதென தொடர்ந்து மதிப்பீடு செய்து வருவதாக நோர்வே வெளிவிவகார அமைச்சு கூறியுள்ளதென ‘தி லோக்கல்’ செய்தி முகவரமைப்பு செய்தி வெளியிட்டுள்ளது.
நெடியவன் உட்பட 40 தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் உறுப்பினர்களை கைது செய்ய கோரும் சர்வதேச பிடியாணைகளை இலங்கை பொலிஸ் இம்மாத முற்பகுதியில் விடுத்திருந்தது.
இதனை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டுமென வெளிவிவகார அமைச்சு தற்போது மதிப்பீடு செய்து வருவதாக நோர்வே வெளிவிவகார அமைச்சின் இராஜாங்க செயலாளர் அரசாங்க வானொலிக்கு கூறியுள்ளார்.
இதே வேளை சிவபரனின் பெயர் சர்வதேச பொலிஸாரின் தரவுத் தளத்தில் சேர்க்கப்படவில்லை.
நெதர்லாந்தில் புலம்பெயர்தோரிடையே தமிழீழ விடுதலை புலிகள் அமைப்புக்காக நிதி சேகரித்தமை தொடர்பில் விசாரிப்பதற்காக, நோர்வே 2011 ஆம் ஆண்டு சிவபரனை கைது செய்து சில நாட்கள் தடுத்து வைத்தது. பின்னர் அவரை பிணையில் விடுதலை செய்தது.
ஐரோப்பிய ஒன்றியத்தால் தடை செய்யப்பட்ட இயக்கத்துக்காக நிதி சேகரித்த குற்றத்திற்காக ஹேக்கிலுள்ள நீதிமன்றம் 5 டச்சு புலம் பெயர்ந்தோருக்கு 6 மாதங்கள் சிறைதண்டனை வழங்கிய போதும் சிவபரனை நோர்வே பொலிஸார் மீண்டும் கைது செய்யவில்லை.