அமெரிக்காவின் “டைம்´ பத்திரிகை நடத்திய “உலகில் செல்வாக்கு மிகுந்த 100 பேர்´ பட்டியல் தொடர்பான கருத்துக் கணிப்பில் பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடியை பின்னுக்குத் தள்ளி ஆம் ஆத்மி கட்சியின் அமைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
உலகில் 2014-ஆம் ஆண்டில் மக்கள் மத்தியில் செல்வாக்கு மிகுந்த 100 பேர் தொடர்பாக “டைம்´ பத்திரிகை அதன் வாசகர்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தியது.
அதில் அரவிந்த் கேஜரிவாலுக்கு ஆதரவாக 2,61,114 வாசகர்கள் வாக்களித்துள்ளனர். மோடிக்கு ஆதரவாக 1,64,572 வாசகர்கள் வாக்களித்துள்ளனர். காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு ஆதரவாக 96,070 வாசகர்கள் வாக்களித்துள்ளனர்.
இதில் 16.5 சதவீத வாசகர்கள் இந்தப் பட்டியலில் ராகுல் காந்தி பெயர் இடம் பெற வேண்டும் என்றும் 83.5 சதவீத வாசகர்கள் அவர் பெயர் இடம் பெற வேண்டாம் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்தப் பட்டியலில் பிரபலங்களான கேத்தி பெர்ரி, ஜஸ்டீன் பைபெர் மற்றும் ரிஹானா ஆகியோர் முன்னிலையில் இருந்தாலும் தற்போது இந்தியாவில் மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருவதால் இது நரேந்திர மோடிக்கும், அரவிந்த் கேஜரிவாலுக்கும் இடையேயான கருத்துக் கணிப்பு போட்டியாக மாறிவிட்டது என்று டைம் பத்திரிகை தெரிவித்துள்ளது.
டைம் பத்திரிகை நடத்திய இந்தக் கருத்துக் கணிப்பில் 32 இலட்சத்திற்கும் மேற்பட்ட வாசகர்கள் வாக்களித்தனர்.