Site icon ilakkiyainfo

நெடியவன் உட்பட விடுதலை புலிகளின் வெளிநாட்டு பிரிவினருக்கு எங்கே வரும் சிக்கல்?

இலங்கை அரசு, பயங்கரவாதத்தில் ஈடுபட்டதாக வெளிநாடுகளில் உள்ள 40 பேரின் பெயர்களை சர்வதேச போலீஸ் இன்டர்போலிடம் கொடுத்ததையடுத்து, அதில் சிலரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட தொடங்கியுள்ளது. விடுதலைப் புலிகளின் வெளிநாட்டுப் பிரிவுகளில் ஒன்றின் தலைவரான நெடியவன் எனப்படும் பேரின்நாயகம் சிவபரன் தொடர்பாக நார்வே அதிகாரிகளுடன் பேச்சுக்கள் நடக்கின்றன.

இன்டர்போல் மூலம் ‘சிவப்பு எச்சரிக்கை’ வழங்கப்பட்டுள்ள 40 பேரில், முதல் கட்டமாக 8 பேர் தற்போது வசிக்கும் நாடுகளுடன், இலங்கை வெளியுறவு அமைச்சு பேச்சுவார்த்தைகளை நடத்துகிறது. அந்த 8 பேரில் நெடியவனும் ஒருவராக உள்ளார்.

நார்வே நாட்டு வெளியுறவுத்துறையின் உள்துறை விவகாரங்களை கவனிக்கும் செயலாளர் Morten Høglund, இலங்கை அரசின் கோரிக்கையை எப்படி எதிர்கொள்வது என்பது தொடர்பாக தமது அமைச்சு ஆராய்ந்து வருவதாக, நார்வே அரசு வானொலி NRK-க்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

நார்வே வெளியுறவுத்துறை அதிகாரி ஒருவரிடம் இது தொடர்பாக விசாரித்தபோது, நெடியவனின் பெயரில், இலங்கை போலீஸால் ‘சிவப்பு எச்சரிக்கை’ வழங்கப்பட்டுள்ள போதிலும், அவரது பெயர் இன்னமும் சர்வதேச போலீஸ் இன்டர்போலால் நார்வே அரசுக்கு அறிவிக்கப்படவில்லை. இன்டர்போல் நெடியவனின் பெயரை அறிவித்த பின்னரே, நார்வே அடுத்த நடவடிக்கையை எடுக்க வேண்டியிருக்கும் என்றார்.

பொதுவாக ஒரு நாடு குறிப்பிட்ட நபர் ஒருவர் பற்றிய சிவப்பு எச்சரிக்கை கொடுத்த பின்னர், அந்த பெயர் இன்டர்போல் டேட்டாபேஸில் இடம்பெற சுமார் 90 நாட்கள் எடுக்கும். அதன்பின், அதில் குறிப்பிடப்பட்ட நபர் தற்போது தங்கியுள்ள நாட்டுக்கு, அந்த விபரங்களை இன்டர்போல் தெரியப்படுத்தும்.

நெடியவன் விஷயத்தில் இலங்கை அரசுக்கு சாதகமான அம்சமாக, அவர் ஏற்கனவே நார்வே போலீஸால் முன்பு கைது செய்யப்பட்ட சம்பவம் உள்ளது. கடந்த 2011-ம் ஆண்டு, நெதர்லாந்தில் விடுதலைப் புலிகளுக்கு நிதி சேகரித்த கேஸ் அது.

நெதர்லாந்தில் வசிக்கும் தமிழர்களை மிரட்டி புலிகளுக்காக நிதி சேகரித்த சிலர் சிக்கியதுடன், சங்கிலித் தொடராக இவரும் சிக்கிக் கொண்டார்.

இதுபற்றி  நாம் 3 ஆண்டுகளுக்கு முன் எழுதியிருந்தோம். அப்போது இருந்த சூழ்நிலை வேறு, தற்போதைய சூழ்நிலை வேறு.  இப்போது இந்த விவகாரம் கழுத்தை இறுக்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

அந்த விவகாரம் என்ன?

நெதர்லாந்துப் பிரஜை ஒருவர், ராத்தர்டாம் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். ஒரு நபர், தம்மை மிரட்டி பண வசூல் செய்கிறார் என்பதே புகார். அடுத்த சில தினங்களில், இதேபோல வேறு சில புகார்களும் நெதர்லாந்தில் வெவ்வேறு நகர போலீஸ் நிலையங்களில் பதிவாகின. இந்தப் புகார்கள் நெதர்லாந்து போலீஸ் இலாகாவுக்கு ‘தலைக்குள் மணியடிக்க’ வைத்தது!

இது ஒரு தனிப்பட்ட கொடுக்கல்-வாங்கல் அல்ல, ஒருவிதமான பணச் சேகரிப்பு என்பது அவர்களுக்குப் புரிந்தது. இவை சாதாரண பணப்பரிமாற்றங்கள் அல்ல என்பதற்கான அறிகுறிகளும் தென்பட்டன.

ஆனால், நெதர்லாந்து போலீஸ் யாரையும் கைது செய்யவில்லை. மிரட்டி பணம் சேகரிப்பதாகக் குற்றம் சாட்டப்பட்ட நபரை, சுதந்திரமாக வெளியே திரிய விட்டார்கள். அவரது நடமாட்டங்கள் ரகசியமாகக் கண்காணிக்கப்பட்டன. இது மாதக்கணக்கில் நடந்தது.

இந்தக் கண்காணிப்பு ஒருபக்கமாக நடந்து கொண்டிருக்க, தமது விசாரணையை வேறு கோணங்களில் தொடர்ந்தது நெதர்லாந்து போலீஸ். அந்த விசாரணைகளில், இந்தப் பணம் போய்ச் சேர்ந்த இடம், நெதர்லாந்துக்கு வெளியே மற்றொரு நாட்டில் உள்ள, விடுதலைப்புலிகள் இயக்க அலுவலகம் ஒன்றுக்கு என்ற விபரம் கிடைத்தது.

விடுதலைப்புலிகள் இயக்கம், ஐரோப்பிய ஒன்றியத்தினால்  2006-ம் ஆண்டே பயங்கரவாத அமைப்பாக தடைசெய்யப்பட்டிருந்தது. நெதர்லாந்து, ஐரோப்பிய ஒன்றியத்தின் அங்கத்துவ நாடுகளில் ஒன்று. இதனால், இந்தப் பணப் பரிமாற்றங்கள், தடைசெய்யப்பட்ட அமைப்பு ஒன்றுக்கான   ‘நிதி சேகரிப்பு’ என்ற வகைக்குள் வந்தது.

விஷயம் ‘பெரியது’ என்று தெரிய வந்ததும் நெதர்லாந்து போலீஸ் இலாகா, இந்த விவகாரம் தமது சக்திக்கு அப்பாற்பட்டது என்பதை உணர்ந்து கொண்டது. அதையடுத்து தாம் சேகரித்த தகவல்கள் அனைத்தையும் நெதர்லாந்து உளவுப்பிரிவு ஒன்றிடம் ஒப்படைத்தது போலீஸ் இலாகா.

மற்றைய நாடுகளைப் போலவே, நெதர்லாந்திலும் ஒன்றுக்கு மேற்பட்ட உளவுப்பிரிவுகள் உள்ளன. இவற்றில் நெதர்லாந்து தேசிய பாதுகாப்புக்குப் பொறுப்பான உளவுப் பிரிவின் கைகளிலேயே இந்த விபரங்கள் போய்ச் சேர்ந்தன.

டச் மொழியில் Algemene Inlichtingen- en Veiligheidsdienst (AIVD) என்று அழைக்கப்படும் இந்த உளவுப்பிரிவின் தலைமையகம், Zoetermeer என்ற இடத்தில் உள்ளது.

AIVD, தமது பாணியில் மேலதிக விபரங்களைச் சேகரிக்கத் தொடங்கியது. நெதர்லாந்திலிருந்த சில போன் இலக்கங்கள் அவர்களது கண்காணிப்புக்குள் வந்தன. அந்தத் போன் இலக்கங்களுக்கு வந்த சில அழைப்புகளை அவர்கள் ஒட்டுக் கேட்டபோது, அதில் பேசப்பட்ட விஷயங்கள் அவர்களை ஆச்சரியப்பட வைத்தன.

அவர்கள், நெதர்லாந்தில் நடைபெறும் பணப் பரிமாற்றங்கள் பற்றி அவ்வளவாக பேசவில்லை. மாறாக, வெளிநாடுகளில் நடைபெற்ற பணப் பரிமாற்றங்கள் பற்றிய கணக்குகள், நெதர்லாந்து தொலைபேசி இலக்கத்துக்கு அறிவிக்கப்பட்டன.

இது AIVDக்கு முதலில் ஆச்சரியத்தை ஏற்படுத்தினாலும், போகப்போக, புரிந்து கொண்டார்கள். விடுதலைப் புலிகள் இயக்கத்துக்காக, வெளிநாடுகளில் சேகரிக்கப்பட்ட பண கணக்குகள் அளைத்தும், நெதர்லாந்திலுள்ள ஒரு நபருக்குத் தெரிவிக்கப்படுகிறது என்று புரிந்து போனது.

அந்த நபர்தான், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சர்வதேச அளவில் பண கணக்குகளை கையாளும் நபராக (ஆடிட்டர் போல) இருக்கலாம் என ஊகித்து விட்டது, AIVD.

அத்துடன், வெளிநாடுகளில் இருந்து பணம் பற்றிய கணக்குகள் மட்டுமே நெதர்லாந்துக்கு வருகின்றன, ஆனால், பணம் வருவதில்லை என்பது கவனிக்கப்பட்டது. மாறாக, நெதர்லாந்தில் சேகரிக்கப்பட்ட பணத்தில் ஒரு பகுதி, நெதர்லாந்துக்கு வெளியே செல்வது தெரியவந்தது.

இதிலிருந்து, பணம் கணக்குப் பார்க்கப்படும் இடம்தான் நெதர்லாந்து என்றும், பணம் போய்ச்சேரும் இடம் நெதர்லாந்துக்கு வெளியே இருக்கிறது என்றும் ஊகித்தது உளவுத்துறை. அதையடுத்து, சில வெளிநாட்டு உளவுத்துறைகளிடமிருந்து புலிகளின் பண டீலிங்குகள் பற்றிய தகவல்களை பெற்றுக்கொண்டது AIVD.

இந்த வகையில் AIVD தொடர்புகொண்ட வெளிநாட்டு உளவுத்துறைகளில் ஒன்று, ஜேர்மன் உளவுத்துறையான Bundesnachrichtendienst (BND)

அவர்களும் கிட்டத்தட்ட இதேபோன்ற தகவல் சேகரிப்பில் இருந்தது அப்போது தெரியவந்தது. நெதர்லாந்து உளவுத்துறையும், ஜேர்மன் உளவுத்துறையும் தத்தமது கையிலுள்ள தகவல்களைப் பரிமாற்றம் செய்துகொண்டனர். அப்போதுதான், முதன்முதலில் இந்த விவகாரத்துக்கு ஒரு முழு உருவம் கிடைக்கத் தொடங்கியது.

நெதர்லாந்து உளவுத்துறை, விடுதலைப்புலிகளை சுதந்திரமாக உலாவவிட்டு விபரங்களைச் சேகரித்ததுபோலச் செயற்படவில்லை ஜேர்மன் உளவுத்துறை.

அவர்கள் அதிரடி நடவடிக்கையில் இறங்கினர்.2010-ம் ஆண்டு  மார்ச் முதல் வாரத்தில், ஜேர்மன் உளவுப்பிரிவினர் ஜேர்மனியிலுள்ள இலங்கை தமிழர் தொடர்புள்ள மொத்தம் 8 இடங்களை ஒரே நேரத்தில் சுற்றி வளைத்தனர்.

இந்த 8 இடங்களில், ‘தமிழர் தொடர்பு மையம்’ ஒன்றின் அலுவலகமும் அடக்கம். இந்தச் சுற்றிவளைப்பில் ஜேர்மன் பிரஜாவுரிமை பெற்றவர்கள் உட்பட, 6 பேர் கைது செய்யப்பட்டனர்.ஜேர்மன் கைதுகளுடன், நெதர்லாந்தில் விஷயங்கள் கொஞ்சம் குழம்பிப் போயின. தங்களால் கண்காணிக்கப்பட்டுக் கொண்டிருந்த ஆட்கள் உடனடியாகவே வெளித் தொடர்புகள் அனைத்தையும் துண்டித்துக் கொண்டதை AIVD கவனித்தது. இனியும் இவர்களை வெளியே விட்டு வைத்திருப்பதால், மேலதிக தகவல்கள் கிடைக்காது என்பதும் புரிந்து போனது.

இதன் பின்னரே, AIVD தனது வேட்டையைத் தொடங்கியது.

2011-ம் ஆண்டு ஏப்ரல் நான்காவது வாரம். நெதர்லாந்து உளவுத்துறை ஒரே நேரத்தில் இலங்கை தமிழர் தொடர்புள்ள மொத்தம் 16 இடங்களைச் சுற்றிவளைத்தது. இதில் 7 பேர் கைதாகினர். கம்யூட்டர் ஹார்ட் டிஸ்க்குகள், டி.வி.டிக்கள், போட்டோக்கள் உட்பட பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. ரொக்கப் பணமாக 40,000 யூரோ எடுக்கப்பட்டது.

கைது செய்யப்பட்டவர்களில், விடுதலைப்புலிகளின் சர்வதேச பிரதான கணக்காளரும், நெதர்லாந்து தலைவரும் அடக்கம் என்று கூறப்பட்டது. தமிழர் புனர்வாழ்வுக் கழகம், தமிழ் இளையோர் அமைப்பு, தமிழ் மகளிர் அமைப்பு, தமிழ் கலை பண்பாட்டுக் கழகம் ஆகியவற்றின் நெதர்லாந்துத் தலைவர்களும் கைது செய்யப்பட்டதாக பி.பி.சி. செய்தி வெளியிட்டது.

இந்தக் கட்டத்தில், விவகாரம் நெதர்லாந்து நீதிமன்றத்துக்குச் சென்றது. பயங்கரவாத இயக்கமாக தடைசெய்யப்பட்ட அமைப்புக்கு நிதி சேகரித்தல் தொடர்பான வழக்கு பதிவாகியது.

வழக்கு ஒருபுறத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்க, AIVD இந்த விவகாரத்தில் மேலதிக உளவுத் தகவல்களைச் சேகரித்துக் கொண்டிருந்தது. காரணம், இந்தப் பணப்பரிமாற்றங்கள், ஒரு சர்வதேச நெட்வேர்க் ஆன செயல்பட்ட தகவல்கள் அவர்களிடம் கிடைத்திருந்தன.

அதேநேரத்தில் ஜேர்மனியில் BND, தமது விசாரணை வட்டத்துக்குள் இருந்தவர்களை விசாரித்து, இந்த நெட்வேர்க்கை புரிந்துகொள்ள முயன்று கொண்டிருந்தது.

premium-idஅவர்களது விசாரணையில் வித்தியாசமான தகவல் ஒன்று கிடைத்தது.

அது என்னவென்றால், ஜேர்மனியில் பணச் சேகரிப்புடன் தொடர்புடைய இலங்கை தமிழர் ஒருவர், யுத்தம் முடிந்தபின் தம்வசமிருந்த பணத்துடன் ஜேர்மனியை விட்டு வெளியேறி விட்டார் என்பது.

அவரை தேடிய ஜேர்மன் உளவுத்துறை, அவர் ஆபிரிக்காவில் உள்ள மடகாஸ்கர் நாட்டில், தன்னிடமுள்ள புலிகளின் பணத்துடன் செட்டிலாகி விட்டதைத் தெரிந்து கொண்டது.

இதையடுத்து உளவுத்துறை BND, மடகாஸ்கர் நாட்டின் வெளியுறவு அமைச்சுடன் தொடர்பு கொண்டு, அந்த நபரை மடகாஸ்கரில் இருந்து ஜெர்மனிக்கு நாடு கடத்த வைத்தார்கள். ஜேர்மன் பிரஜையான அவர் ஜெர்மனியின் டியூசல்டோஃப் விமான நிலையத்தில் வந்து இறங்கியபோது, அவரை கைது செய்து தமது கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக் கொண்டது BND.

நெதர்லாந்து உளவுத்துறையிடம் இந்த சர்வதேச வலையமைப்பு தொடர்பாக மேலதிக தகவல்கள் கிடைக்கத் தொடங்கின.

பிரிட்டன், சுவிஸ், கனடா, அமெரிக்கா, பிரான்ஸ், நார்வே உட்பட சில நாடுகளில் இருந்த விடுதலைப் புலிகளின் கிளைகள், இந்த நெட்வேர்க்கில் இணைக்கப்பட்டிருந்த தகவல்கள் அவர்களிடம் இருந்தன. அந்த நாடுகளின் உளவுத் துறைகளின் ஒத்துழைப்பு கோரப்பட்டது. AIVDயின் அதிகாரிகள் இந்த நாடுகளுக்கு நேரடியாக அனுப்பி வைக்கப்பட்டனர்.

சேகரிக்கப்பட்ட பணத்துக்கு என்ன ஆயிற்று என்று விசாரித்தபோது, இவர்களால் விசாரிக்கப்பட்ட அனைவருமே ஒரே திசையை நோக்கித்தான் கையைக் காட்டியிருக்கிறார்கள்.

“All roads lead to Rome” என்று சொல்லப்படுவதைபோல, எல்லாத் தகவல்களும், நார்வேயில் வசிக்கும் நெடியவன் என்ற நபரை நோக்கியே இருந்திருக்கின்றன.

அதையடுத்து நெடியவனை விசாரிக்கும் முடிவு நெதர்லாந்தில் எடுக்கப்பட்டது. நார்வேயின் உதவி கோரப்பட்டது. சட்டரீதியான இந்த விவகாரத்தில் நெதர்லாந்துக்கு உதவ, நார்வேக்கு எந்தத் தயக்கமும் இருக்கவில்லை.

2011-ம் ஆண்டு, மே 18-ம் தேதி, உலகின் வெவ்வேறு நகரங்களிலும் முள்ளிவாய்க்காலில் யுத்தம் முடிவுக்கு வந்தது தொடர்பான நிகழ்வுகள் நடைபெற்றன. இவற்றில் பல நெடியவனின் தலைமையிலான குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டவை.

இந்த நிகழ்வுகள் நடைபெற்ற அதே மே 18-ம் தேதி, நெடியவன், நார்வே தலைநகர் ஆஸ்லோவில் விசாரணை செய்யப்பட்டுக் கொண்டிருந்தார்!

இந்த விசாரணை மிகமிக முக்கியமானதாக கருதப்பட்டு செடியவனை விசாரிக்க நெதர்லாந்திலிருந்து பிரத்தியேகமாக ஒரு நீதிபதியும், ஆறு டிஃபென்ஸ் அட்டர்னிகளும் நார்வே சென்றிருந்தனர்.

நார்வேயின் தலைநகர் ஆஸ்லோவிலுள்ள மாவட்ட நீதிமன்றத்தில், மூடிய அறைக்குள் நெடியவன் மீதான விசாரணைகள் நடைபெற்றன. விசாரணைகள் வீடியோவில் படம்பிடிக்கப்பட்டன.

அதன்பின் நெடியவன் ஜாமீனில் விடப்பட்டார்.

இந்த விவகாரம் தொடங்கிய நெதர்லாந்தில், விடுதலை புலிகளுக்காக மிரட்டி பணம் சேகரித்தவர்கள் மீது Extortion, Material support to terrorism, Money laundering ஆகிய பிரிவுகளில், வழக்கு தொடரப்பட்டது. நெதர்லாந்து வழக்கு எண்: BU7200, 09/748801-09.

அந்த வழக்கில் 2011-ம் ஆண்டு அக்டோபர் மாதம், 21-ம் தேதி தீர்ப்பளிக்கப்பட்டது. தீர்ப்பில், இலங்கைத் தமிழர்கள் 5 பேர் குற்றவாளிகளாக காணப்பட்டு, சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

ஆனால், இந்த வழக்கில்தான் நெடியவன் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டார். ஆனால், நெதர்லாந்து வழக்கு பதிவில் அவரது பெயர் சேர்க்கப்படவில்லை.

இதற்கு காரணம், அப்போது, யுத்தம் முடிவடைந்து, இலங்கையில் விடுதலைப்புலிகள் இயக்கம் அழிக்கப்பட்டு விட்டது. விடுதலைப் புலிகளின் தலைவராக இருந்த பிரபாகரனும் இறந்து விட்டதில், வெளிநாடுகளில் இருந்த விடுதலைப்புலிகள் சொத்துக்கள், மில்லியன் கணக்கில் பணம் ஆகியவற்றில் மிகப் பெரும் பகுதி, நெடியவனின் கைகளுக்கு வந்து சேர்ந்தது.

இதனால், நெடியவனை வெளியே விட்டு வைத்தால்தான், யார் யாரிடம் என்ன இருக்கிறது என்பது தெரியும் என்பதால், அவரை வெளியே விட்டு வைத்து, கண்காணித்துக் கொண்டிருந்தார்கள். இலங்கை அரசு நெடியவன்மீது கை வைக்காமல் இவ்வளவு நாளும் காத்திருந்த காரணமும் இதுதான்.

இந்தப் பின்னணியில்தான், இப்போது இலங்கை நெடியவன் மீது இன்டர்போலில் ‘ரெட் நோட்டீஸ்’ கொடுத்து, அவரை கைது செய்ய நார்வேயுடன் பேச தொடங்கியுள்ளது.

இந்த விவகாரத்தில் வேறு சில சுவாரசியமாக விஷயங்களும் உள்ளன. இந்த கட்டுரை நீளமாகி விட்டதால், மற்றொரு கட்டுரையில், நெடியவன் நெட்வேர்க்குடன் தொடர்புடைய வேறு சிலர் எவ்வளவு சிக்கலில் உள்ளனர் என்ற விபரத்தை தருகிறோம்.

 

Exit mobile version