தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீளக்கட்டியெழுப்பும் நடவடிக்கைகளில் மும்முரமாக ஈடுபட்டவர் எனக் கூறப்படும் பேரின்பநாயகம் சிவபரனை (நெடியவன்) கைது செய்வதற்கான சிவப்பு அறிவித்தல், சர்வதேச பொலிஸாரினால் வெளியிடப்பட்டதை அடுத்து நோர்வேயில் அவர் தங்கியிருந்ததாகக் கூறப்படும் இடங்களிலிருந்து தலைமறைவாகியுள்ளார் என வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், நெடியவனை கைது செய்வதற்கான விசேட நடவடிக்கையில் நோர்வே பாதுகாப்பு தரப்பினர் ஈடுபட்டுள்ளனர் என்றும் இலங்கை பாதுகாப்பு தரப்பினரும் அதற்கு ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவும் அச்செய்திகள் குறிப்பிடுகின்றன.
சர்வதேச பொலிஸாரான இன்டர்போலினால் வெளியிடப்பட்ட சிவப்பு அறிவித்தலை அடுத்து, நோர்வேயில் நெடியவன் அடிக்கடி சென்றுவரும் இடங்கள் பாதுகாப்பு தரப்பினரால் சோதனையிடப்பட்டுள்ளன. இருப்பினும், அவர் அங்கிருந்து தப்பிச் சென்று தலைமறைவாகியுள்ளார் என நோர்வே தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், நோர்வேயின் அனைத்து விமான நிலையங்கள் உள்ளிட்ட நாட்டை விட்டு வெளியேறும் இடங்கள் அனைத்திலும் நெடியவனைத் தேடி பாதுகாப்பு தரப்பினர் வலைவிரித்துள்ளதாக மேற்படி செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.