கென்யாவில் பழங்குடி மக்கள் அதிகம் வாழ்கிறார்கள். அவர்கள் பலதார உறவு முறை வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு சட்ட அங்கீகாரம் அளிக்க முடிவு செய்த அரசு ஆண்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட பெண்களை திருமணம் செய்ய அனுமதியளிக்கும் வகையிலான சட்ட மசோதாவை கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது.
இச்சட்டத்துக்கு அதிபர் அங்கீகாரம் அளிக்க கூடாது என்று மகளிர் அமைப்பினரும், கிறிஸ்தவ பாதிரியார்களும் கோரிக்கைவிடுத்துவந்தனர். குடும்பம் என்ற அமைப்பை சீர்குலைக்கும், முதலில் மணந்து கொண்ட மனைவி தெருவில் நிறுத்தப்படுவார் என்பது போன்ற கருத்துக்களை முன்வைத்து பெண்கள் அமைப்பினரும், கிறிஸ்தவ மதரீதியான கோட்பாடுக்கு எதிரானது என்று பாதிரியார்களும் இச்சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆனால் எதிர்ப்பை மீறி கென்ய அதிபர் உஹுரு கென்யாட்டா சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கி கையெழுத்திட்டுள்ளார். இச்சட்டப்படி முதல் மனைவியின் ஒப்புதல் கூட இல்லாமல் கணவனால் வேறு பெண்களை மணமுடிக்க இயலும். இச்சட்டத்துக்கு எதிராக நீதிமன்றத்தை அணுக உள்ளதாக தேசிய பெண் வழக்கறிஞர் சம்மேளனம் அறிவித்துள்ளது.
30-04-2014
தனக்கு கிடைக்கும் எந்த பொருட்களையும் எரித்துவிட்டு அதன் சூடான சாம்பலினை தனது மெத்தையாக மாற்றி அதனுள் தனது உடலை நுழைத்து தூங்குகிறார் லட்விக். வீடற்ற இவர், நொவி பைட்ஷொவ் நகரில் கைவிடப்பட்ட பண்ணை வீடொன்றை தனது குடியிருப்பாக மாற்றியுள்ளார்.இது குறித்து லட்விக் கூறுகையில், ஒரு வருடத்துக்கு முன்னர் நான் எனது தொழிலை விட தீர்மானித்தேன். அதன் பின்னர் இங்கு நெருப்புடன் வாழ்ந்துகொண்டிருகிறேன்.
தினமும் சூடான சாம்பலில் படுத்து என்னை சூடாக வைத்திருகிறேன். என்னிடம் ஜக்கெட், சப்பாத்து, மெத்தை, படுக்கை என அனைத்தும் இருந்தன. ஆனால் நான் அனைத்தையும் எரித்துவிட்டேன். ஏனெனில் நெருப்பினை போன்று வேறு ஒன்றுமில்லை.
நான் பார்வைக்கு நரகமாக இருக்கிறேன். ஆனால் மக்கள் எனக்கு பழைய டயர்களை தந்து உதவுகிறார்கள். அவற்றை எரித்து தினமும் 7.30 மணிக்கு நெருப்புடன் உறங்குவேன்’ எனத் தெரிவித்துள்ளார்.
கடும் குளிரிலும் ஒரே ஒரு கம்பளியை மாத்திரம் அணிந்துகொள்ளும் லட்விக் நெருப்புடன் உறங்கும் மனநிலை பாதிப்புக்குள்ளாகியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சாம்பல் தோய்ந்த நிலையில் காணப்படும் லட்விக் குளிக்க விரும்புவதில்லையாம்.
இவருக்கு நாளொன்றுக்கு செக் குடியரசின் அரசு 100 செக் கொருனா (சுமார் 660 ரூபா) கொடுத்து உதவுகின்றனர்.
ஆனாலும் இதனை நேரடியாக கொடுத்தால் அதனையும் எரித்துவிடலாம் என்பதால் கடைகளில் பொருட்களை கொள்வனவு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.