வடக்கு–கிழக்கில் புலிகளின் மேலாதிக்கத்துடன் இடைக்கால நிர்வாகம் ஒன்றைத் தருவதற்கு அரசு முன்வந்த போதிலும் எல்.ரி.ரி.ஈ. யோ வடக்கு – கிழக்கை முழுமையாக ஆள்வதற்கான இடைக்கால சுயாட்சி அதிகார சபையை 2003 ஒக்ரோபரில் நிபந்தனையாக முன்வைத்தது.
அந்த சபைக்கான சில அதிகாரங்கள் ஒற்றையாட்சி அரசமைப்பின் கீழ் சாத்தியமானவை எனினும், ஏனையவை நிச்சயமாக அப்படியிருக்கவில்லை. அத்தகைய முழுமையான அதிகாரத்தை வழங்குவது கூட்டு சமஷ்டி முறையின் கீழ் மட்டுமே சாத்தியப்படக்கூடியது.
வன்முறைக்கு முடிவு கட்டும் விதத்தில் அமையக்கூடிய பரந்த சமாதான உடன்படிக்கையின் போது அதன் பகுதியாக சமஷ்டிக் கட்டமைப்பு இடம்பெறுவதை, கடை சியில் பொதுமக்கள் ஏற்று அங்கீகரிப்பார்களாயினும், இடைக்கால உடன் பாடாக ‘இடைக்கால சுயாட்சி அதிகார சபையை’ மக்களிடம் செலுத்துவது கஷ்டமானதாகவே இருக்கும்.
யுத்த நிறுத்தத்துக்கு இணங்கி சமாதானத் தீர்வுக்கான பேச்சுக்கு புலிகள் நேர்மையுடன் வந்தார்களா? பல பார்வையாளர்கள் அது புலிகளின் தந்திரோபாய நகர்வு மட்டுமே என்றும், புலிகளின் உண்மையான திட சங்கற்பம் தனிநாடு என்றும் இந்த விடயத்தை நோக்கினார்கள்.
அரசியல் தீர்வுக்கான இணக்கம் ஒன்றுக்கு வருவதற்கான இயலாமையிலேயே தென்னிலங்கையின் அரசியல் முறைமை இருந்ததை அது அறிந்தே இருந்தது.
அரசமைப்பு ரீதியான தீர்வு இல்லாத நிலையில், ஆசுவாசப் படுத்துவதற்கான நேரத்தையும் பெற்றுக் கொண்டு, இடைக்கால நிர்வாகத்தையும் தனது கட்டுப்பாட்டுக்குள் எடுப்பதற்காக எல்.ரி.ரி.ஈ. சற்று வளைந்து கொடுக்க முன் வந்தமை போன்றே அது தோன்றியது.
அதன் பேச்சுக்கான சிரேஷ்ட பிரதிநிதி கூட சமஷ்டிக் கட்டமைப்புக்குள் தமிழர்களின் பிரச்சினைக்கு ஒரு தீர்வை ஆராயும் திட்டத்தை விடுதலைப் புலிகள் கைவிட்டி ருந்தனர் என்பதைப் பின்னாளில் குறிப்பிட்டிருந்தார்.
தன்னுடைய கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசங்களை எல்.ரி.ரி.ஈ. எப்போதும் இரும்புக்கரம் கொண்டே ஆளுகை செய்தது. எத்தகைய அதிருப்தியும் பொறுத்துக் கொள்ளப்படவேயில்லை. ஏனைய தமிழ்க் கூட்டமைப்புகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான செயற்பாட்டாளர்கள் கொல்லப்பட்டார்கள்.
மத்தியில் அதிகாரம் குவிக்கப்பட்ட இலங்கையின் ஒற்றையாட்சி அரசிலிருந்து தமிழர்களுக்கு நீதி கிட்டவே மாட்டாது என்ற குற்றச்சாட்டோடு தனிநாட்டுக்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
ஆனால் உருவாக்கப்பட இருந்த தனிநாடான தமிழீழமோ, சிங்கள, முஸ்லிம் மக்களின் பலமான ஜனப்பரம்பல் அங்கிருந்த போதிலும், அது, மத்தியில் அதிகாரம் குவிக் கப்பட்ட, தனிக்கட்சி ஆட்சிமுறை கொண்ட, ஒற்றையாட்சி நாடாக முன் மொழியப்பட்டமைதான் கவனிக்கத்தக்கதாகும்.
எல்.ரி.ரி.ஈயின் பிடிவாதம், மிதவாதத் தமிழர்களை ஏமாற்றத்தில் தள்ளி யது மட்டுமல்லாமல், கரும்பாறையாக இருந்த அந்த அமைப்பிலேயே உடைவை ஏற்படுத்தியது.
யுத்த நிறுத்த காலத்தில் எல்.ரி.ரி.ஈயின் கிழக்கு மாகாணத் தலைவர்கள் பிரிந்து சென்றமையோடு, பின்னர் எல்.ரி.ரி.ஈ யை இலங்கைப் படைகள் தோற்கடிக்கவும் உதவினர்.
புலிகளின் கடும்போக்கானது சிங்களப் பெரும்பான்மையோரில் உள்ள கடும்போக்காளர்களுக்கு உதவியது. மஹிந்த ராஜபக் ஷ 2005இல் சிங்களக் கடும்போக்குவாதிகளின் உதவியுடன் ஜனாதிபதி பதவிக்கு உயர்ந்தார்.
மிதவாதியை விட கடும்போக்காளரை எல்.ரி.ரி.ஈ. விரும்பி, தங்களின் கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசத்தில் வாக்களிப்பன்று பகிஷ்கரிப்பை நடை முறைப்படுத்தி, அதன் மூலம், உயர்ந்தபட்ச அதிகாரப் பரவலாக்கலுக்கு இணங்கி முன்வந்த ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஒரு சில நூறாயிரம் தொகையுடைய முக்கிய வாக்குகளால் வெற்றியை அது மறுக்கச் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அரசியல் தீர்வில் அதற்கு சிரத்தை இல்லை என்பதை உறுதிப்படுத்த இது ஒன்று மட்டுமே போதுமானது.
இராணுவப்படை என்ற முறையில் எல்.ரி.ரி.ஈ. தன்னை அளவுக்கு அதிகமாக மதிப்பிட் டுக் கொண்டது என்பதும் தெளிவானது. ஆனால், நான்கு வருடத்துக்குள் ராஜபக் ஷ இராணுவ இயந்திரம் எல்.ரி.ரி.ஈ. ஐ முழுமையாக சின்னாபின்னமாக்கியது.
அத்தோடு 9–1 இற்குப் பின்னரான சர்வதேச நிலைமைகளை எல்.ரி.ரி.ஈ. தவறாகப் புரிந்து கொண்டது. யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் இடம்பெற்றவை குறித்து சிலர் மகிழ்வுறவில்லையாயினும், பெரும்பாலான சர்வதேச செயல் தரப்பினர் எல்.ரி.ரி.ஈ.யை ராஜபக்ஷ வெல்வதற்கு நேரடி யாகவோ, மறைமுகமாகவோ உதவினர்.
எல்.ரி.ரி.ஈக்கு எதிரான யுத்தம் நடந்து கொண்டிருந்த போதே ஜனாதிபதி ராஜபக்ஷ சர்வகட்சி மாநாட்டை கூட்டினார். அது பின்னர் அரசமைப்புத் தீர்வுக்கான யோசனைகளை முன்வைப்பதற்கான சர்வ கட்சிப் பிரதிநிதிகள் குழுவாக தோற்றம் கொண்டது. இதற்கு உதவுவதற்காக 17 பேர் கொண்ட நிபுணர் குழுவையும் அவர் நியமித்தார்.
அந்த நிபுணர் குழு தங்களுக்குள் பிளவுண்டு கருத்து வெளியிட்டது. சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் என அனைவரையும் உள்ளடக்கிய 11 நிபுணர்கள் வலிமையான அதிகாரப் பகிர்வு உடன்பாடு ஒன்றை முன் மொழிந்தனர்.
சிங்களவர்களான நான்கு நிபுணர்கள் மிகக் குறைந்த அதிகாரப் பகிர்வுத் திட்டத்தை முன்மொழிய, மற்றைய இருவர் தங்களின் சொந்த அறிக்கைகளைச் சமர்ப்பித்தனர்.
மேற்படி ‘பெரும்பான்மையினரின் அறிக்கை‘ என்று கூறப்பட்ட யோசனைத் திட்டம் விரிவான அதிகாரப் பகிர்வில் இரண்டு பக்க அணுகு முறைகளைக் கொண்டிருந்தது.
சமூகங்கள் தத்தமது பிரதேசங்களில் அதிகாரத்தைப் பிரயோகித்து தமது சொந்தப் பிரதேசத்தை அபிவிருத்தி செய்யும் அதேவேளையில், மத்தியிலும் அதிகாரத்தைப் பகிர்ந்து .கொள்ளவும், பல்வேறு சமூகங்களை ஒன்றிணைத்து தேசிய ஒன்றிணைவை மத்தி பலப்படுத்தவும் அது சிபாரிசு செய்தது.
அந்த முன்மொழிவில் முக்கியமான அம்சம் என்னவென்றால் இலங்கையின் ‘மக்கள்’ என அரசமைப்பில் குறித்தொதுக்கப்படுவோர் ‘இலங்கையின் மக்கள் கூட்டங்களின் அங்கம்’ என்பதாகும்.
அத்தோடு ‘ஒவ்வொரு மக்கள் கூட்டமும்’, அதன் காரணமாக, அரச அதிகாரத்தில் உரிய பங்கையும் பெறும். இது, பொதுவான ‘இலங்கையர்’ என்ற அடையாளப்படுத்தலைப் பலவீனப்படுத்தாமல் முன்னெடுக்கப்படும்.
இந்தப் பெரும்பான்மை நிபுணர்களின் அறிக்கை சிங்கள மிதவாதிகளினாலும் தமிழ், முஸ்லிம், இந்தியத் தமிழர்கள் தரப்பில் பெருவாரியானோராலும் வரவேற்கப்பட்டது.
எல்.ரி.ரி.ஈயோ இந்த அறிக்கை குறித்து கருத்து எதனையும் வெளியிட முன்வராமல் போனமை ஆச்சரியத்துக்குரியதன்று. ஆனால் அது, அக்குழுவின் நிபுணர்களான தமிழர்கள் தமது இனத்தின் சார்பில் எப்படி அதில் பிரதிநிதித்துவம் செய்யலாம் எனக் கேள்வி எழுப்பியது.
நடவடிக்கைகள் மூன்று வருடங்கள் இழுபட்டன. சிங்கள தேசியக் கட்சிகள் பல கட்டங்களில் வெளிநடப்புச் செய்தன. ஆனால் அரசின் பிரதான கட்சியான ஸ்ரீ.ல.சு.கட்சி தொடர்ந்து அதில் நீடித்தது.
உத்தியோகபூர்வ அறிக்கை ஏதும் வெளியிடப்படாத போதிலும்,குழுவின் தலைவர் திஸ்ஸ விதாரண, அதன் முன்மொழிவுகளின் சுருக்கக் குறிப்பு ஒன்றை 2009 இல் ஜனாதிபதியிடம் கையளித்தார்.
‘பெரும்பான்மை அறிக்கை’ பரிந்துரை செய்தவற்றிலும் மிகக் குறைவானவற்றையே அந்த முன்மொழிவுகள் கொண்டிருந்தன. எனினும் ஒற்றையாட்சிக்குள் மத்தியுடன் விரிவான அதிகாரப் பகிர்வு பற்றி அவை பிரஸ்தாபித்தன. அத்துடன் அவை விரிவான பேச்சுக்கான அடிப்படையாகக் கொள்ளக் கூடியவையாக வும் அமைந்தன.
முன்மொழிவுகளின் சுருக்கத்தைத் தாம் ஜனாதிபதியிடம் ஒப்படைத்தார் என விதாரண மீள்வலியுறுத்திய போதிலும் ஜனாதிபதி செயலகமோ அத்தகைய பிரதி தனக்குக் கிடைத்தது என்பதை மறுத்தே வந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
அதன் தொடர்ச்சியாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸைப் பிரதிநிதித்துவப்படுத்திய ஆர்.யோகராஜனும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸைப் பிரதிநிதித்துவப்படுத்திய நிஸாம்காரியப்பரும் அந்த முடிவுகளின் சுருக்கத்தை கூட்டங்களின் பதிவுகளின் அடிப்படையில் வெளியிட, அது சரியானதே என்று விதாரணவும் ஏற்றுக் கொண்டார்.
வட அயர்லாந்து, காஷ்மீர், முன்னாள் யூகோஸ்லாவியா, சூடான் போன்ற பிணக்குப் பிரதேசங்களில் கருத்துக் கணிப்பை நடத்தி தேர்ந்த அனுபவம் பெற்றிருந்த – லிவர்பூல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த – கலாநிதி கொலின் இர்வின், யுத்தம் முடிவடைவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னர் – 2009 மார்ச்சில் குழுவின்- பூர்வாங்க முன்மொழிவுகள் தொடர்பில் ஆய்வு ஒன்றை நடத்திப் பார்த்தார்.
ஒரு வருடம் கழித்து – மார்ச் 2010 இல் – யுத்தம் முடிந்து 9 மாதங்களின் பின்னரும் – அதே முன்மொழிவுகள் ஆய்வு செய்யப்பட்டன. இம்முறை வடக்கு மாகாண மக்களையும் உள்ளடக்கி அதிக மாதிரிகள் உள்வாங்கப்பட்டன
முன்மொழிவுகளை முன்வைத்து, அவை குறித்து 14 விட யங்களை ஒழுங்குபடுத்தி, அந்த விடயங்கள் தொடர்பில் மக்களின் கருத்துக்கள் உள்வாங்கப்பட்டன.
‘அத்தியாவசியம்’, ‘விரும்பத்தக்கது’, ‘ஏற்றுக் கொள்ளக்கூடியது’, ‘தாங்கக்கூடியது’, ‘ஏற்றுக்கொள்ளமுடியாதது’, என பல்வேறு விடைகளில் ஒவ்வொன்றை ஒவ்வொரு விடயத்துக்குமான பதிலாகத் தெரிவுசெய்யும்படி மக்கள் கேட்கப்பட்டனர்.
கடைசியாக முழு முன்மொழிவு வடிவம் தொடர்பிலும் அவர்களின் கருத்துக்கள் பெறப்பட்டன. அது தொடர்பில் தமிழர்கள், முஸ்லிம்கள், இந்தியத் தமிழ் மக்கள் ஆகியோர் ‘அத்தியாவசியம்’, ‘விரும்பத்தக்கது’, ‘ஏற்றுக்கொள்ளக்கூடியது’, என்ற பதிலை அளித்த விகிதம் பின்வருமாறு அமைந்தது.
தமிழர் – 2009 – 82% 2010 – 83%
முஸ்லிம்கள் – 2009 – 85% 2010 – 88%
இந்தியத் தமிழர் – 2009 – 90% 2010 – 90%
இந்தப் புள்ளி விவரங்கள் ஆச்சரியமானவை அல்ல. ஆனால் சிங்களவர் களின் பிரதிபலிப்பு ஆச்சரியம் தருவதாக இருந்தது:-
2009 – 59%(அத்தியாவசியம் 13%விரும்பத்தக்கது 21%ஏற்றுக் கொள்ளத்தக்கது 25%)
2010 – 80% (அத்தியாவசியம் 20%விரும்பத்தக்கது 38%ஏற்றுக் கொள்ளத்தக்கது 22%) அதிகாரப் பகிர்வை சிங்களவர்கள் விரும்பவில்லை எனக் குறிப்பிட்டு அதை எதிர்த்தவர்கள் பிரசாரப்படுத்திய கட்டுக்கதைக்கு மாறாக, எல்.ரி.ரி.ஈயின் முகத்துக்கு முன்னால் அதன் தோல்வி தோன்றியிருந்த – யுத்தம் முடிவுறுவதற்கு மூன்று மாதங்களுக்கு முந்திய – காலத்தில் 59 வீதத்தினர் APRCயின் முன்மொழிவுகளை ஏற்றுக்கொள்ளத் தக்கவையாகக் கண்ட னர்.
ஒரு வருடத்தின் பின்னர் – அதாவது யுத்தம் முடிவுற்று 9 மாதங்களின் பின்னர் – அந்த எண்ணிக்கை 80 வீதமாக உயர்ந்தது. அப்படியிருந்த போதிலும், ராஜபக் ஷ அரசு APRC முன்மொழிவுகள் குறித்து இன்னும் கருத்து எதனையும் வெளியிடவில்லை.
அந்த ஆட்சிப்பீடம் இன்னமும் இராணுவ வெற்றியின் கீர்த்தியில் திளைக்கிறது. மாறாக, ஆயுதப் பிணக்குக்குப் பிரதான காரணமாக அமைந்த மூல விடயம் – அரச அதிகாரத்தைப் பகிர்தல் – இன்னும் தீர்க்கப்படாமல் இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளத் தவறுகின்றது.
ராஜபக்க்ஷ ஆட்சிப்பீடத்தில் கடும்போக்காளர்களே அதிகாரத்தைப் பிடித்து வைத்திருக்கிறார்கள். அரசி யல் தீர்வு குறித்து எப்போதாவது பேசப்பட்டாலும் அது பின்தள்ளப் பட்டதாகவே உள்ளது.
இலங்கையின் கதை என்பது சிங்களவர்களையும் தமிழர்களையும் பொறுத்தவரை சந்தர்ப்பங்களைக் கோட்டை விட்ட விவகாரமாகவே உள் ளது. இலங்கையைப் பொறுத்தவரை யுத்தம் முடிந்து விட்டது.
ஆனால் பிணக்கு முடியவில்லை. எல்லா சமூகங்களுக்கும் அரச அதிகாரத்தை உரியமுறையில் பகிர்வதே இரண்டாவது விடயத்தை முடிவுக்குக் கொண்டு வரும் – அது எல்லா அவதானிகளுக்கும் பிரதியட்சமான உண்மை.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக இலங்கையருக்கு அது தெரியவில்லை. எமது இனத்துவ – அரசியல் விவகாரத்துக்கு தீர்வு காண்பதற்கான அத்திவாரத்தைப் போடுவதற்கான எமது இயலாமை ஒருபுறம் இருக்க, மறுபுறத்தில் அதற்குச் சமாந்தரமாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை உச்சபட்சத்திற்கு பலப்படுத்தப்பட்டிருக்கிறது.
1978 அரசமைப்பின் கீழ் அரச முறைமை குறித்து விவாதித்த டாக்டர் கொல்வின் ஆர்.டி.சில்வா, அது ‘பாராளுமன்ற ஜனநாயகம் என்ற வெளிச் சட்டையைப் போர்த்திய யாப்பு ரீதியான ஜனாதிபதி முறை சர்வாதிகாரம்’ என்று குறிப்பிட்டிருந்தார். அது உண்மை எனபது நிரூபணமாகியுள்ளது.
காலவரையறையும் இல்லாமல், 17 ஆவது திருத்தமும் செயலிழந்து போனமையால், இலங்கையின் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை மிக வலிமையானதாகவும் மிக இழிவானதாகவும் மாறிவருகின்றது.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையின் எதிர்காலம் என்ன? நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை சரியென வாதிட்ட ஐ.தே.கட்சி அதன் சொந்தத் தயாரிப்பின் முழு வலிமையையும் உணர்ந்த போதுதான் கடைசியாக அதை இல்லாதொழிக்கும் முடிவுக்கு மனதை மாற்றிக் கொண்டது.
தமிழ், முஸ்லிம் கட்சிகளைப் பொறுத்தவரை அது, தங்களது இனத்துக்கு எந்தப் பாதுகாப்பும் தராது என்பதில் எந்தப் பிர மையும் அவற்றுக்கு இல்லை.
முரண்பாடாக, தற்போதைய ஸ்ரீ.ல.சு.க. தலைமையும், சிங்களக் கடும் போக்குவாதிகளுமே அதை இன்றும் ஆதரித்து, அதேயளவுக்குத் தக்கவைக்கவும் முனைந்து நிற்கின்றனர்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்கும் மனநிலையில் ஜனாதிபதி ராஜபக்ஷ இல்லாது விடினும், அழுத்தத்தின் கீழ் அதனை அவர் செய்யமாட்டார் என்று கூறுவதற்கும் இல்லை.
எதிரணியின் பொதுவேட்பாளர் என்ற ‘தனி விடயத்தை மட்டும்’ ஆராய் வது குறித்து ஏற்கனவே பேச்சுக்கள் அடிபடுகின்றன. அந்தத் தனி விடய விவகாரம் முழு எதிரணியையும் ஒன்றிணைப்பதுடன், ஸ்ரீ.ல.சு.கட்சிக் குள் உள்ள அதிருப்பதியாளர்களை நிறைவேற்று அதிகாரத்தை இல்லா தொழிப்பதற்கான உட்கலகத்துக்குத் தூண்டுவதில் வினைத்திறனையும் ஊட்டக்கூடியது.
தனது நிலைக்கு மோசமான சவால் வருமானால் ராஜபக் ஷ, எதிரணியின் எதிர்ப்பைச் சமாளிக்க நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையயைக் கைவிடவும் முன்வரலாம்.
எப்படியெனினும், அவர் தமது தற்போதைய நிலையை ஸ்திரப்படுத்திப் பேணுவாராயின், நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்க வேண்டும் என்பதற்காக எதிரணியும், ஸ்ரீ. ல.சு.கட்சி அதிருப்தியாளர்களும் ஒன்றிணையும் விவகாரமாக அது அமைவதற்கான சாத்தியங்கள் அனேகமுண்டு.
முன்மொழிவுகளை தயாரிப்பதிலும் விட அரசமைப்பை உருவாக்குவது மிகச் சிக்கலானது. 1994 முதல் 2000 வரையான காலப்பகுதியில் முன்னெ டுக்கப்பட்ட அரசமைப்பு சீர்திருத்த நடவடிக்கைகளை ஒத்த முயற்சிகளிலும் பார்க்க, புதிய வடிவத்திலான ஓர் அரசமைப்பை உருவாக்க முயல்வது இப்போதைய நிலையில் சாலச்சிறந்தது.
இன ரீதியாக சமாதானத்தை எட்டுவதற்கு மட்டும்தான் சீர்திருத்தம் அவசியம் என்பதல்ல, அரசமைப்பின் மேன்மை, உரிமைச் சட்டங்கள், தேர்தல் சீர்திருத்தம், சுயாதீனமான நீதித்துறை, சட்டத்தின் ஆட்சியை மீள ஏற்படுத்துதல், உயர் பதவிகளுக்கான நியமனங்கள் மற்றும் சுயாதீன மான நிறுவனங்கள் விடயத்தில் தேசிய இணக்கப்பாடு ஆகிய எல்லாவற் றிலும் அது கவனிக்கப்பட வேண்டும்.
பரந்தளவிலான சீர்திருத்தங்கள் ஜனநாயக அரசியல் சூழலிலேயே அதிக சாத்தியமானவை என்பதால், அத்தகைய சீர்திருத்தத்தின் முதல் நடவடிக்கையானது, நிறைவேற்று அதிகாரத்தை இல்லாதொழித்து ஜனநாயக இடைவெளியை ஏற்படுத்துவ தாக அமைய வேண்டும்.
இது, 17 ஆவது திருத்தத்தை உரிய மாற்றங்களுடன் மீளக் கொண்டு வருவதுடன் இணைந்;து முன்னெடுக்கப்பட வேண்டும். அத்தகைய இடைவெளி பரந்தளவிலான சீர்திருத்தங்கள் குறித்து தீவிர மாகக் கலந்துரையாட வாய்ப்பளிக்கும். அதற்கு மேல் சீர்திருத்தங்கள் பரந்தளவிலும் ஊக்குவிக்கும் வகையிலும் மேற்கொள்ளப்படுவது புதிய அரசியல் இயக்க நிலைமையைப் பொறுத்ததாக அமையும்.