இந்தியாவின், மைசூர் சாமுண்டீஸ்வரி கோயிலில் இன்று அதிகாலை லிங்கா திரைப்படத்தின் பூஜை நடந்தது. கிட்டத்தட்ட மூன்றாண்டு இடைவெளிக்குப் பிறகு மேக்கப் போட்டு, வேட்டி சட்டையில், முறுக்கு மீசையுடன் கம்பீரமாகத் தோன்றினார் சூப்பர் ஸ்டார் ரஜினி.
கோச்சடையான் திரைப்படத்துக்குப் பிறகு ரஜினி நடிக்கும் படம் லிங்கா. கேஎஸ் ரவிக்குமார் இயக்க, ராக்லைன் வெங்கடேஷ் தயாரிக்கிறார். நடிகைகளான சோனாக்ஷி சின்ஹா மற்றும் அனுஷ்கா ஆகியோர் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கின்றனர்.
இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ், நடிகர் அம்பரீஷ், அவர் மனைவி நடிகை சுமலதா மற்றும் படக்குழுவினர் பலரும் பங்கேற்றனர்.
லிங்கா திரைப்படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்கிறார் தெலுங்கு நடிகர் ஜெகபதி பாபு. கோச்சடையான் திரைப்படத்துக்கு அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் இந்த திரைப்படத்துக்கு லிங்கா என்று தலைப்பு வைத்துள்ளனர்.
படப்பிடிப்பு மைசூரில் தொடங்கியது. இதற்காக, ரஜினிகாந்த் செவ்வாய்கிழமை மைசூர் புறப்பட்டுச் சென்றார். அங்கு அவர் 40 நாட்கள் தங்கியிருந்து, லிங்கா திரைப்படத்தில் நடிக்கிறார்.
ரஜினிகாந்த் லிங்காவின் வில்லன் யார் என்பது சஸ்பென்ஸாக இருந்தது. தெலுங்கில் பிரபல நடிகராக விளங்கும் ஜெகபதி பாபுதான் ரஜினிக்கு வில்லனாக நடிக்கிறார் என்பதை கே.எஸ்.ரவிக்குமார் உறுதிப்படுத்தியுள்ளார்.
முத்து, படையப்பா திரைப்படங்களுக்குப் பிறகு கே.எஸ்.ரவிகுமார் இயக்கும் திரைப்படம் இது. முழுக்க முழுக்க காமெடி, ஆக்ஷன், காதல், குடும்ப சென்டிமென்ட் ஒரு பக்கா பொழுதுபோக்கு திரைப்படமாக லிங்கா உருவாகிறது.
அதேநேரம் வழக்கமாக பார்முலா கதை மாதிரி இருக்கக்கூடாது என்பதிலும் ரஜினி மிகுந்த கவனமாக உள்ளாராம். இந்த திரைப்படத்தின் திரைக்கதை உருவாக்கத்தின் போது, கே.எஸ்.ரவிக்குமாருடன் ரஜினியும் இருந்துள்ளார். கிட்டத்தட்ட ஒரு வாரத்துக்கும் மேல் தினசரி கே.எஸ்.ரவிக்குமார் வீட்டுக்கே போய், திரைக்கதையை உருவாக்கியுள்ளார் ரஜினி.