தலைநகர் கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் அண்மைக்காலமாக தொடரும் முகத்தை முழுமையாக மறைக்கும் தலைக்கவசம் அணிந்த கொள்ளையர்களின் தொடர் கொள்ளைகள் முழு நாட்டையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
கடந்த 4 மாதங்களுக்குள் முகத்தை முழுமையாக மறைத்து 16 வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் கொள்ளையர்களின் கைவரிசைக்கு இலக்காகி இருந்தன.
இதில் பாதுக்கை, நீர்கொழும்பு, மத்துகம ஆகிய இடங்களில் பதிவான கொள்ளைகள் தொடர்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு எதி ராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.
மேலும் நிலையில் ஏனைய சம்பவங்கள் குறித்து விசாரணைகள் தொடர்ந்தன. இந்நிலையிலேயே, மலபே, கொஹுவளை, மொறட்டுவை ஆகிய பகுதிகளில் உள்ள தனியார் வங்கிகளில் கொள்ளையிட்டமை….
மற்றும் கிருலப்பனை வங்கியில் கொள்ளையிட முற்பட்டமை ஆகிய பல குற்றச் சாட்டுக்களுடன் தொடர்புடைய பிரதான இரு சந்தேக நபர்களும் அவர்களுக்கு தங்குமிடம் மற்றும் பாதுகாப்பு அளித்த கண்டி சிவில் பாதுகாப்பு படையணியின் உத்தியோகத்தர் ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.
இந்த கைது நடவடிக்கையானது கொஹுவளை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் சமிந்த எதிரிசூரிய, குற்றவியல் பிரிவின் பொறுப்பதிகாரி சுமதிபால ஆகியோரின் கீழ் கடந்த திங்களன்று கண்டிக்கு சென்ற விசேட பொலிஸ் குழுவினரால் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
மேல் மாகாணத்துக்கும் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்க, மேல் மாகாணத்தின் தெற்குக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுமித் எதிரிசிங்க ஆகியோரின் மேற்பார்வையின் கீழ் கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரவீந்திர கரவிட்டவின் ஆலோசனையின் படி உதவிப் பொலிஸ் அத்தியட்கர் டப்ளியூ.வீ.கினிகேனவின் கட்டுப்பாட்டின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தன.
உண்மையில் கொஹுவளை பொலிஸாரினால் கடந்த பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி இடம்பெற்ற கொஹுவளை நேஷன் ட்ரஸ்ட் வங்கி தொடர்பிலான விசாரணைகளே முன்னெடுக்கப்பட்டிருந்தன.
இதன் போது கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவில் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய பிலியந்தல ஜகத் அல்லது மஞ்சு என்று பெயர்களில் அறியப்படும் ஜகத் ரசத் பெரேரா என்ற 38 வயது நபர் மீது பொலிஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
உதவிப் பொலிஸ் அத்தியட்சர் டப்ளியூ.வீ.கினிகேனவின் கீழ் கொஹுவளை வங்கிக் கொள்ளை தொடர்பான விசாரணைகள் தொடர்ந்த நிலையிலேயே இந்த சந்தேகம் பொலிஸாருக்கு ஏற்படுகின் றது.
ஏனெனில் அதற்கும் காரணம் இல்லாமலில்லை. பாடசாலை காலம் முதலே கொள்ளைகளில் ஈடுபட்டுள்ள ஜகத் சிறைவாசம் அனுபவித்தவனும் கூட.
அத்துடன் கல்கிஸ்ஸை பொலிஸ் பிராந்தியத்தில் பிரதான போதைப் பொருள் பாவனையாளர் என்பதையும் பொலிஸார் அறிந்திருந்தனர். இதனால் பொலிஸாரின் கவனம் அடிக்கடி ஜகத் மீது பாய்ந்தது.
எனினும் கொஹுவளை வங்கிக்கொள்ளையின் பின்னர் ஜகத்தை பொலிஸாரால் அவதானிக்க முடியவில்லை. அவனது தொலைபேசி இலக்கங்கள் செயலிழந்து இருந்ததுடன் அவன் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்று தலைமறைவாகியிருந்ததால் அவனை தொடர்பு கொள்வதும் சாத்திய மற்றதானது.
ஜகத் போதைப் பொருளுக்கு அடிமையானவன் என்பதால் அவன் போதைப் பொருள் கொள்வனவு செய்யும் இடங்களை தேடி பொலிஸாரின் நடவடிக்கை தொடர்ந்தது.
எனினும் அவன் பல இடங்களில் போதைப் பொருளை கொள்வனவு செய்திருந்ததால், அவனது தொடர்புகள் குறித்து அவர்கள் அறிந்திராததால் ஜகத்தை நெருங்குவது பொலிஸாரினால் சாத்தியமற்றுப் போனது.
எனினும் பொலிஸார் தளரவில்லை. தொடர்ந்த முயற்சிகளில் ஜகத்தை நெருங்கிய நபர் என்ற வகையில் நபர் ஒருவரின் தொலைபேசி இலக்கம் பொலிஸாருக்கு கிடைத்துள்ளது.
பொலிஸாருக்கு கிடைத்த அந்த தொலைபேசி இலக்கம் இரு இலக்கங்களுடன் அதிகமான அழைப்புக்களை ஏற்படுத்தியிருந்தமையை பொலிஸார் தொலை தொடர்பு நிறுவன தரவுகள் ஊடாக அவதானித்தனர்.
இதனை அடுத்தே பொலிஸார் தமது தந்திரோபாய நடவடிக்கைகளை ஆரம்பித்தனர். கொஹுவளை பொலிஸ் நிலையத்தின் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை தமது நடவடிக்கை குழுவில் இணைத்துக் கொண்டனர்.
அந்த பெண் பொலிஸ் உத்தியோகத்தர் அனாமதேய அழைப்பை போன்று குறித்த இலக்கத்துக்கு அழைப்பினை ஏற்படுத்தி சமிந்த பெரேரா என்ற நபருடன் காதல் வயப்பட்டார்.
எனினும் இது ஒரு நாடகம் என அறிந்திராத சமிந்த பெண் பொலிஸ் உத்தியோகத்தருடன் தினம் தினம் தொலைபேசியில் காதல் வார்த்தைகளைப் பரிமாறி காதல் உலகத்தில் மிதக்கலானார்.
இந் நிலையில் தான் காதலியை சந்திக்கும் யோசனை சமிந்தவினால் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த சந்தர்ப்பத்துக்காக காத்திருந்தபொலிஸார் தமது திட்டப்படி கண்டி பஸ் நிலையத்துக்கு வருமாறு சமிந்தவை அவர் காதலியாக நினைத்துக் கொன்டுள்ள பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஊடாக அழைத்தனர்.
தொடர்ந்து குறித்த பெண் பொலிஸ் உத்தியோகத்தரையும் அழைத்துக் கொண்டு கொஹுவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எதிரிசூரிய, குற்றவியல் பிரிவின் பொறுப்பதிகாரி சுமதிபால உள்ளிட்ட குழுவினர் கண்டிக்கு பயணமாகினர்.
எதிர்பார்த்தது போலவே நபர் ஒருவர் மேலதிக தலைக்கவசம் ஒன்றுடன் குறிப்பிட்ட நேரத்துக்குள் கண்டி நகரை வந்தடைய பெண் பொலிஸ் உத்தியோகத்தரை வைத்து அதுவரை அரங்கேற்றப்பட்ட நாடகம் முடிவுக்கு வந்தது. காதலியை காணும் ஆவலில் வந்த நபரை சிவிலில் இருந்த பொலிஸார் கைது செய்தனர்.
சமிந்த பெரேரா, கண்டி- மெனிக்கின்ன பகுதியை சேர்ந்தவர். கண்டி சிவில் பாதுகாப்பு பொலிஸ் உத்தியோகத்தராக கடமையாற்றுபவர் என்பதை அதன் போதே பொலிஸார் தெரிந்துகொண்டனர்.
இதனை அடுத்து அவரை விசாரணைக்கு உட்படுத்திய பொலிஸார் ஜகத் மெனிக்கின்னவில் உள்ள சமிந்தவின் வீட்டிலேயே உள்ளமை தெரியவந்தது.
உடனடியாக செயலில் இறங்கிய பொலிஸார் மெனின்கினவில் உள்ள சமிந்த பெரேராவின் வீட்டுக்கு சென்றதுடன் அங்கு மறைந்திருந்த ஜகத்தையும் மற்றொரு நபரையும் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட மற்றைய நபர் கல்கமுவை பகுதியை சேர்ந்த வசந்த பெரேரா எனும் 35 வயதுடைய நபராவார். ஜகத்துக்கும் வசந்தவுக்கும் வசந்தவின் சகோதரர் முறையாகும் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தரான சமிந்த பெரேரா பாதுகாப்பு அளித்துள்ளமையும் பொலிஸாரின் நடவடிக்கை மூலம் தெரியவந்தது.
இதனை அடுத்தே கொழும்புக்கு சந்தேக நபர்களை அழைத்து வந்த பொலிஸார் பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி கொஹுவளையில் நேஷன்ட்ரஸ்ட் வங்கியில் 15 இலட்சம் ரூபாவை கொள்ளையிட்டவர்கள் இவர்கள் எனபதை தெரிந்துகொண்டனர்.
அதனை தொடர்ந்து மேற்கொண்ட விசாரணைகளில் கடந்த டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி இடம்பெற்ற மாலபே நேஷன் ட்ரஸ்ட் வங்கியில் 14 இலட்சத்து 85 ஆயிரம் ரூபா வரையிலான கொள்ளை, கடந்த ஏப்ரல் மாதம் 24 ஆம் திகதி இடம்பெற்ற மொறட்டுவை ராவத்தாவத்தை சீ.டீ.பீ.தனியார் வங்கியில் 7 இலட்சத்து 77 ஆயிரம் ரூபா கொள்ளை ஆகியவற்றுடனும் அதே தினம் முயற்சிக்கப்பட்ட கிருலப்பனைசெலான் வங்கிக் கொள்ளையுடனும் ஜகத்தும் வஸந்தவும் நேரடி தொடர்புடையவர்கள் என்பதை கண்டறிந்தனர்.
எவ்வாறாயினும் கொஹுவளை வங்கிக்கொள்ளை தவிர்ந்த ஏனைய வங்கிக்கொள்ளைகளுடனேயே ஜகத்துடன் வசந்த இணைந்து செயற்பட்டுள்ளமை மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பிலியந்தலையில் உள்ள ஓய்வு விடுதியொன்றில் வைத்தே ஜகத்தும் வசந்தவும் அறிமுகமாகியுள்ளனர். அந்த ஓய்வு விடுதியில் அருகே கடை ஒன்றை நடத்தி வந்த வசந்த அதன் பின்னரேயே ஜகத்துடன் இணைந்து கொள்ளைகளில் ஈடுபட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
போதைப் பொருளுக்கு அடிமையான ஜகத் ஒரு நாளைக்கு போதைப் பொருள் பாவனைக்காக 20 ஆயிரம் ரூபாவை செலவிடுவதாக குறிப்பிடும் உதவிப் பொலிஸ் அத்தியட்சர் டப்ளியூ.வீ.கினிகேன கொள்ளையிடப்பட்டுள்ள பணத்தொகையின் பெரும் பாலான பகுதி அதற்காக பயன்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடுகின்றார்.
அத்துடன் குறித்த வங்கிக் கொள்ளைகளுக்கு மேலதிகமாக 18 கொள்ளைச் சம்பவங்களுடன் ஜகத் உள்ளிட்டவர்களுக்கு தொடர்பிருப்பதாக விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளன.
அத்துடன் இந்தக் கொள்ளைகளின் பிரதான சந்தேக நபர் ஜகத் ஆக இருப்பினும் கொள்ளைகள் பல வற்றுடன் பலர் இணைந்து செயற்பட்டுள்ளதால் அவர்கள் தலைமறைவாகியுள்ள நிலையில் அவர்களை தேடியும் பொலிஸார் வலை விரித்துள்ளனர்.
மூன்று வங்கிகளில் மட்டும் சுமார் 35 இலட்சம் ரூபா கொள்ளையிடப்பட்டுள்ள நிலையில் அவற்றைப் பயன்படுத்தி கொள்வனவு செய்யப்பட்டமோட்டார் சைக்கிள்கள் மூன்று, கார் ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
மாலபே கொள்ளையில் 3 இலட்சத்து 65 ஆயிரம் ரூபாவுக்கு மோட்டார் சைக்கிள்களை கொள்வனவு செய்துள்ளதாக குறிப்பிடும் பொலிஸார் இறுதியாக மொறட்டுவை கொள்ளையின் பின்னர் ஐந்து இலட்சம் ரூபாவுக்கு சந்தேக நபர்கள் கார் ஒன்றையும் கொள்வனவு செய்துள்ளனர்.
NW MF-7090,WP UX 9575,CP MT- 9535 ஆகிய இலக்கங்களை உடைய ஹொண்டா டிஸ்கவர் ரக மோட்டார் சைக்கிள்களையும் போர்ட் ரக காரான 14 – 2627 என்ற காரையுமே பொலிஸார் இவ்வாறு கைப்பற்றியுள்ளனர்.
இதனை விட கொள்ளைகளின் போது பயன்படுத்திய வெளி நாட்டு தயாரிப்பு கைத் துப்பாக்கி, உள் நாட்டு தயாரிப்பு துப்பாக்கி, முகத்தை முழுமையாக மறைக்கும் தலைக் கவசம், ஜாக்கட்டுக்கள் இரண்டு, எஸ்.ரீ.ரக தோட்டாக்கள், ஏனைய தோட்டாக்கள் 4 , விஷேட தயாரிப்பு கத்தி, பணத்தை கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்ட பை போன்றவற்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இதனிடையே காரின் உரிமையாளரிடமிருந்து காரு க்கு செலுத்தப்பட்ட 5 இலட்சம் தொகையில் நான்கு இலட் சம் ரூபாவினை பொலிஸார் மீளப் பெற்றுள்ளனர். அத்துடன் கொஹுவளை வங்கியில் கொள்ளையிடப்பட்ட பணத்தில் ஒரு இலட்சத்து 24 ஆயிரம் ரூபா பணத்தினை யும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
எதிர்வரும் 5 ஆம் திகதி திங்களன்று சந்தேக நபர்களையும் வழக்குப் பொருட்களையும் நீதிமன்றில் ஆஜர் படுத்த தயாராகும் பொலிஸார் 7 நாள் தடுப்புக் காவலில் பல தகவல்களை வெளிப்படுத்திக் கொண்டுள்ளனர்.
எவ்வித திட்டமிடலும் இன்றி பாதுகாப்பு குறைந்த , ஆள் நடமாட்டம் குறைந்த வங்கிகளிலேயே இவர்கள் முகத்தை முழுமையாக மறைத்து தமது கைவரிசையை காட்டி வந்துள் ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
‘பல நாள் கள்வன் ஒரு நாள் அகப்படுவான்’ என்ற பழ மொழிக்கு அமைய பல நாட்கள் தொடர்ந்த ஜகத் தலைமையினானோரின் கொள்ளைகொஹுவளை பொலிஸாரின் சாதுரியமான நடவடிக்கையால் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.