விபரம் வருமாறு,
அச்சுவேலி கதிரிப்பாய் பகுதியில் கொலையாளி தனஞ்சயனின் மனைவியின் தாயார் வீடு உள்ளது. இங்குதான் கொலை இடம்பெற்றது.
கொலைச் சந்தேக நபரான தனஞ்சயனுக்கும் அவரது மனைவி தர்மிகாவுக்கு இடையில் ஏற்பட்ட தகராறுகளை அடுத்து இவர்கள் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
வாள்வெட்டில் காயமடைந்த தர்மிகாவும் தனது தாய் வீட்டிலேயே வசித்து வந்தார்.
அத்துடன், தனஞ்சயனுக்குத் தெரியாமல் கிளிநொச்சியில் மதுஷாவுக்கு கடந்த வாரம் திருமணம் செய்து வைத்துள்ளனர். இதனை ஒருவாறு தனஞ்சயன் அறிந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
அன்று இரவு வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது தனஞ்சயன் தனது நண்பர்கள் சிலருடன் ஓட்டோ ஒன்றில் வாளுடன் வந்துள்ளார்.
வீட்டில் வந்து இறங்கியவர் வெறிகொண்டு தூங்கிக் கொண்டிருந்த மனைவியின் குடும்பத்தவர்களை சராமாரியாக வெட்டியுள்ளார்.
சத்தம் கேட்டு எழுந்து வந்த மனைவி மற்றும் மைத்துனரையும் துரத்தித் துரத்தி வெட்டியுள்ளார்.
இதனையடுத்து அயலவர்கள் திரண்டு வருவதற்குள் வீட்டில் இருந்த அனைவரையும் வெட்டிக் கொன்றுவிட்டு தனஞ்சயன் தப்பிச் சென்றுள்ளார்.
வீட்டிலிருந்தோர் இறந்து விட்டதை உறுதிசெய்த அயலவர்கள், காயமடைந்த கொலையாளியின் மனைவி மற்றும் மைத்துனரை மீட்டு வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்தத் தகவல்களை காயமடைந்து வைத்தியசாலையில் உள்ள கொலைச் சந்தேகநபரின் மனைவி பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மூர்க்கத்தனமாக வெட்டியதில் அண்மையில் திருமணமான மனைவியின் சகோதரியின் கை மற்றும் கைவிரல்கள் துண்டாகி ஆங்காங்கே தனித்தனியாக விழுந்து கிடந்த நிலையில் மீட்கப்பட்டன. அவரது கழுத்தின் பின்புறமாக பாரிய வெட்டு விழுந்துள்ளது.
இதேபோன்றே மனைவியின் தாய், சகோதரன் ஆகியோரையும் மூர்க்கத்தனமாக கொலையாளி வெட்டிக் கொன்றுள்ளார்.
மல்லாகம் நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஜோய் மகிழ் மகாதேவா இன்று காலை சம்பவ இடத்தில் விசாரணைகளை மேற்கொண்டார்.
பின்னர் சடலங்கள் அங்கிருந்து மீட்கப்பட்டு அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டன. அங்கிருந்து மூவருடைய சடலமும் பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
இந்தநிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் நேற்று காலை கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு, அச்சுவேலிப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இந்தக் கொலைகள் தொடர்பில் மேற்கொண்ட ஆரம்ப விசாரணைகளின் அடிப்படையில் குறித்த நபரே கொலைகளுக்கு காரணம் என தெரியவந்ததனையடுத்து, ஊரெழுப் பகுதியில் மறைந்திருந்த குறித்த நபரை பொலிஸார் கைது செய்தனர்.
அதேவேளை, இச்சம்பவத்துடன் தொடர்புடைய மற்றொரு நபரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
யாழில் மூவர் படுகொலை: பிரதான சந்தேக நபருக்கு விளக்கமறியல்
05-05-2014
நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணியளவில் யாழ்.அச்சுவேலி வளலாய் கதிரிப்பாய் பகுதியில் இடம்பெற்ற இந்த முக்கொலைச் சம்பவத்தில் ஒரே குடும்பத்தினைச் சேர்ந்த தாய், மகன் மற்றும் மகள் மூவருமே இனந்தெரியாத நபர்களினால் வாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் அதே குடும்பந்தைச் சேர்ந்த இருவர் படுகாயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அச்சுவேலிப் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவத்தில்; நிற்குணானந்தன் அருள்நாயகி (வயது-50), இளம் குடும்ப பெண்ணான யசோதரன் மதுசா (வயது-27), நிற்குணானந்தன சுபாங்கன் (19) ஆகிய மூவரும் உயிரிழந்துள்ளதுடன், நிற்குணானந்தன் தர்மிகா (25), க. யசோதரன் (வயது-30) ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர்.
இதேவேளை இரத்த வெள்ளத்தில் கிடந்த சடலங்களுடன் கைக்குழந்தையும் மீட்கப்பட்டு யாழ்.போதான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது என்று அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில் கைது செய்யப்பட்டுள்ள இருவரும் இன்று நண்பகல் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.