விடுதலைப் புலிகளின் வான்புலிகள் பிரிவு நடத்திய முதலாவது விமான தாக்குதல், கொழும்பு, கட்டுநாயக விமானப்படை தளத்தின்மீது நடத்தப்பட்டது என கடந்த அத்தியாயத்தில் எழுதியிருந்தோம். இறுதி யுத்தம் தொடங்கி, புலிகள் வின்வாங்க தொடங்கிய நாட்களில் இருந்தே, கட்டுநாயக விமானப்படை தளத்தின்மீது ஒரு தாக்குதலை ராணுவம் எதிர்பார்த்தது.
காரணம், புலிகளின் பகுதிகளுக்குள் முன்னேறிக்கொண்டிருக்கும் ராணுவத்தை தடுத்து நிறுத்துவது என்றால், புலிகளால் அதை வன்னிக்குள் செய்ய முடியாது; ஆனால், யுத்த முனைக்கு வெளியே செய்யலாம் என்பதை ராணுவம் அனுபவரீதியாக உணர்ந்திருந்தது.
2001-ம் ஆண்டு ஜூலை 24-ம் தேதி, கட்டுநாயக விமானப்படை தளத்துடன் அமைந்த்துள்ள விமான நிலையத்தின்மீது புலிகள் தரைவழி தற்கொலை தாக்குதல் நடத்தியபோது, ஏற்பட்ட சேதம் காரணமாக யுத்தத்தை நிறுத்த வேண்டிய நிலை ராணுவத்துக்கு ஏற்பட்டது. அதன்பின்னரே, 2002-ம் ஆண்டு சமாதான பேச்சுவார்த்தைகளுக்கு இலங்கை அரசு போக வேண்டியதாயிற்று.
ஒரு தாக்குதலில், யுத்தத்தை நிறுத்த வேண்டிய அளவுக்கு அந்த தாக்குதலின்போது அப்படி ஏற்பட்ட சேதம் என்ன?
அனைத்தும், விமானங்கள், ஹெலிகாப்டர்கள் (மொத்தம் 25)!
இதோ பட்டியலை பாருங்கள்: 11 விமானங்கள், ஹெலிகாப்டர்கள் முழுமையாக அழிக்கப்பட்டன (1 Mi-17 attack helicopter, 1 Mi-24 attack helicopter, 3 K-8 jet trainers, 2 Kfir fighter jets, 1 MiG-27 fighter jet, 3 Sri Lankan Airlines Airbuses). 14 விமானங்கள் சேதமடைந்தன. (5 K-8 jet trainers, 5 Kfir fighter jets, 1 MiG-27 fighter jet, 2 Sri Lankan Airlines Airbuses, 1 other military aircraft)
இவ்வளவு சேதத்தின் பின் ராணுவம், யுத்தத்தை தொடர்ந்து நடத்த முடியாமல், நிறுத்திக்கொள்ள வேண்டியதாயிற்று.
இறுதி யுத்தம் தொடங்கியபோது, விடுதலைப் புலிகள் தொடர்ந்து பின்வாங்கிக் கொண்டிருந்த நிலையில், முன்னேறிக் கொண்டிருந்த ராணுவத்தை தடுத்து நிறுத்துவது என்றால், புலிகள் மீண்டும் கட்டுநாயக மீது அப்படி ஒரு தாக்குதலை செய்துதான் நிறுத்தலாம் என்பது ராணுவத்துக்கு நன்றாக தெரிந்திருந்தது.
இதனால், கட்டுநாயக விமானப்படை தளத்துக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இந்தியா வழங்கிய ரேடார்களில் ஒன்றும் அங்கே பொருத்தப்பட்டு இருந்தது. அந்த தளத்தின் மீது புலிகளின் தாக்குதல் ஒன்றை ராணுவம் எதிர்பார்த்து காத்திருந்தது.
ஆனால், அதுவரை விடுதலைப் புலிகள் விமானம் மூலம் தாக்குதல் நடத்தவில்லை என்பதால், தரை மார்க்கமாக தாக்குவார்கள் என்பதே ராணுவத்தின் நினைப்பாக இருந்தது.
கட்டுநாயக விமானப்படை தளத்தை சுற்றி, 5 கி.மீ. சுற்றளவு பகுதியை உயர் பாதுகாப்பு வலயமாக மாற்றியிருந்தது ராணுவம். இந்த ஏரியாவுக்குள் குடியிருந்த பொதுமக்களிடையே, சிவில் பாதுகாப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு இருந்தன. சந்தேகத்துக்கு உரிய விதத்தில் நடமாட்டங்கள் தென்பட்டால், உடனே தகவல் தெரிவிக்க போன் இலக்கங்கள் கொடுக்கப்பட்டு இருந்தன.
அத்துடன், இந்த உயர் பாதுகாப்பு வலயத்துக்குள் இருந்த மக்கள் குடியிருப்புகளில், ராணுவ உளவுத்துறையை சேர்ந்த உளவாளிகள், வீடுகளை வாடகைக்கு அமர்த்தி, பொதுமக்கள் போல தங்கியிருந்தனர்.
இவ்வளவு பலமான பாதுகாப்பு போடப்பட்ட நிலையில்தான், புலிகளின் முதலாவது விமான தாக்குதல் அங்கு நடந்தது.
2007-ம் ஆண்டு மார்ச் 25-ம் தேதி அதிகாலை.
கட்டுநாயக விமானப்படை தளத்தின் தளபதி விங் கமாண்டர் கொலித குணதிலகே பெரிய வெடிச் சத்தம் கேட்டு தூக்கத்தில் இருந்து திடுக்குற்று எழுந்தார்.
பலநாட்களாக எதிர்பார்க்கப்பட்ட விடுதலைப் புலிகளின் தாக்குதல் தொடங்கி விட்டது என புரிந்து கொண்டார்.
ஆனால், புலிகள் விமானத்தில் வருவார்கள் என்பதை அவர் அந்த கணத்தில் ஊகிக்கவில்லை.
தரை வழியாக புலிகள் ஊடுருவி விட்டார்கள் என நினைத்த அவர், விமான தளத்தை சுற்றியுள்ள காவல் அரண்களில், எந்த பகுதியை உடைத்துக்கொண்டு புலிகள் ஊடுருவினார்கள் என அறிய, உடனடியாக காவலரண்களை தொடர்பு கொண்டார்.
ஆனால், அவருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும் விதத்தில், எந்த காவலரணும் தாக்கப்படவில்லை. புலிகளும் உள்ளே நுழையவில்லை.
அப்போதுதான், கட்டுநாயக விமான தளத்துக்கு மேலாக இரு சிறிய விமானங்கள் பறந்து குண்டு போடுகின்றன என்ற தகவல் அவருக்கு வந்தது. விமானங்கள் வருகின்றன என்பதை, அங்கு அமைக்கப்பட்டிருந்த இந்திய ரேடார்கள் எச்சரிக்கவே இல்லை.
புலிகளின் விமானங்களை, தரையில் இருந்து அவசர அவசரமாக விமான எதிர்ப்பு துப்பாக்கிகளால் சுட்டார்கள். ஆனால், இரவு நேரத்தில் பறக்கும் விமானங்களை குறிவைத்து சுட முடியவில்லை.
தரையில் இருந்து தாக்குதல் நடத்திய ராணுவத்துக்கு இரவு நேர இருள் எவ்வளவு பாதகமாக இருந்ததோ, அதேயளவு பாதகமாக, வான் புலிகளின் விமானிகளுக்கும் இருந்தது. அவர்களாலும் தரையில் இருந்த இலக்குகளை துல்லியமாக அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை.
வான்புலி விமானிகள் குண்டு வீச வேண்டிய இலக்குகள், விமான தளத்துக்குள் போர் விமானங்கள் நிறுத்தப்பட்டிருந்த ஹேங்கர்கள். (மேலேயுள்ள போட்டோ பார்க்கவும். அதுதான், கட்டுநாயக விமானத்தளத்தில் போர் விமானங்களை நிறுத்தும் ஹேங்கர். இதில்தான் குண்டுவீச வந்தன வான்புலி விமானங்கள்)
ஆனால், வான்புலி விமானிகள் விமானத்தில் பறந்தபடி மேலேயிருந்து பார்த்தபோது, விமான தளத்தில் பல பில்டிங்குகள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகவே தெரிந்தன.
இதனால், “இவைதான் போர் விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஹேங்கர்கள்” என்ற ஊகத்தில், இரு பில்டிங்குகள் மீது குண்டுகளை போட்டனர் வான்புலி விமானிகள்.
அந்த இரு பில்டிங்குகளும், போர் விமானங்கள் நிறுத்தப்பட்ட ஹேங்கர்கள் அல்ல.
ஒரு பில்டிங், ஹெலிகாப்டர் நிறுத்தப்பட்டிருந்த ஹேங்கர், மற்றையது, விமானப்படையின் இஞ்சினியரிங் ஹேங்கர்.