நெல்லை: பழரசத்தில் விஷம் கலந்து கொடுத்து சினிமா ‘பைனான்சியர்‘ கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் துணை நடிகையை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:
சினிமா நடிகர்
நெல்லை மாவட்டம் பரப்பாடி இளங்குளம் மெயின்ரோட்டை சேர்ந்தவர் சூசைமரியான். அவருடைய மகன் ரெனால்டு பீட்டர் பிரின்ஸ் (வயது 36). இவர் டிப்ளமோ மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து உள்ளார். மேலும் கம்ப்யூட்டர் தொடர்பான சான்றிதழ் படிப்புகள் படித்து இருக்கிறார். அவருடைய மனைவி சோனா. இவர்களுக்கு ஐபெல், ஆஸ்பெல் ஆகிய 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.
பிரின்ஸ் தென்காசி, பாவூர்சத்திரம், ஆலங்குளம் ஆகிய பகுதிகளில் கம்ப்யூட்டர் சென்டர் வைத்து நடத்தி வந்தார். அப்போது, அவர் அடிக்கடி சென்னை செல்வார். பின்னர் இந்த கடைகளை வேறு ஒருவரிடம் கொடுத்து விட்டு சென்னை மதுரவாயலில் தனியாக வீடு எடுத்து தங்கினார்.
அங்கு இருந்து ஆன்லைன் மூலம் வியாபாரம் செய்து வந்தார். மேலும் சினிமா படங்களுக்கு பைனாஸ் செய்து வந்தார். “காகிதபுரம்“ என்ற படத்தில் கதாநாயகனாகவும், “கொக்கிரகுளம்–நெல்லை மாவட்டம்“ என்ற படத்திலும் பிரின்ஸ் நடித்து இருக்கிறார். ஆனால் இந்த படங்கள் வெளிவரவில்லை.
துணை நடிகை
பிரின்ஸ் அடிக்கடி சொந்த ஊருக்கு வருவார். ஆனால் கடந்த சில மாதங்களாக அவர் ஊருக்கு வரவில்லை. இந்த நிலையில் சினிமா துணை நடிகை சுருதி சந்திரலேகா (25) என்பவர் கடந்த ஜனவரி மாதம் 18–ந் தேதி சென்னை மதுரவாயல் போலீல் நிலையத்தில் புகார் மனு கொடுத்தார்.
அதில் “எனது கணவர் பிரின்ஸ் என்பவரை கடந்த சில நாட்களாக காணவில்லை. அவரை கண்டுபிடித்து தரவேண்டும்“ என்று கூறப்பட்டு இருந்தது.
பிரின்ஸ் அண்ணன் ஜஸ்டீன் பிரின்சோ பாளையங்கோட்டையில் வசித்து வருகிறார். கடந்த மாதங்களாக பிரின்ஸ் சொந்த ஊருக்கு வரவில்லை. இதனால் கலக்கம் அடைந்த அவர் கடந்த மாதம் 13–ந் தேதி பாளையங்கோட்டை போலீசில் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார்.
அதில் “எனது தம்பி பிரின்ஸ் கடந்த சில மாதங்களாக ஊருக்கு வரவில்லை. அவரை கண்டுபிடித்து தர வேண்டும்“ என்று கூறப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர்.
பிணம் புதைப்பு
இந்த நிலையில் பிரின்ஸ் கொலை செய்யப்பட்டு பாளையங்கோட்டை ஆசீர்வாத நகரில் புதைக்கப்பட்டு இருப்பது போலீசுக்கு தெரியவந்தது. இதையடுத்து போலீசார் விசாரணையை முடுக்கி விட்டனர். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
பிரின்சும், நெல்லை டவுனை சேர்ந்த உமா சந்திரன் என்பவரும் நண்பர்கள். இவர்கள் 2 பேரும் சேர்ந்து ஆன்லைனில் வியாபாரம் செய்து வந்தனர். அப்போது, தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது. தனக்கு ஏற்பட்ட நஷ்டத்தை பிரின்ஸிடம், உமா சந்திரன் கேட்டார். ஆனால் அவர் தரமுடியாது என்று மறுத்து வந்தார். இதனால் அவர்களுக்கு இடையே முன்விரோதம் ஏற்பட்டது. பிரின்ஸ், உமா சந்திரனின் தொடர்பை துண்டித்தார். அவருடன் பேசுவதை தவிர்த்து வந்தார். அதன் பிறகு பிரின்ஸ் சினிமாவில் முழு கவனத்தை செலுத்தி வந்தார்.
சதித்திட்டம்
சென்னையில் “சம்பவி“ என்ற படத்தின் படப்பிடிப்பு நடந்தது. இந்த படத்தின் சூட்டிங்கை பார்க்க பிரின்ஸ் சென்றார். அங்கு துணை நடிகை சுருதி சந்திர லேகாவை சந்தித்தார். அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. அவர்கள் 2 பேரும் கணவன்–மனைவியாக வாழ்ந்து வந்தனர்.
அப்போது, பிரின்ஸ் வேறு பெண்களை அழைத்து வந்து உல்லாசமாக இருந்தார். சுருதி சந்திரலேகா முன்பே உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. சுருதி சந்திரலேகா, பிரின்சை வெறுக்க தொடங்கினார். வேறு வழியில்லாமல் அவருடன் வாழ்ந்து வந்தார்.
இதை அறிந்த உமா சந்திரன், சுருதியை தொடர்பு கொண்டார். அவர், பிரின்ஸ் என்னையும் ஏமாற்றி விட்டார். உன்னையும் ஏமாற்றி விட்டார். அவரை விட்டு வைக்கக்கூடாது. அவரை கொலை செய்ய வேண்டும் என்று சதித்திட்டம் திட்டினர்.
விஷம் கலந்து கொலை
அதன்படி கடந்த ஜனவரி மாதம் 18–ந் தேதி பிரின்ஸ் வீட்டிற்கு வந்தார். அப்போது, சுருதி பழரசத்தில் விஷம் கலந்து பிரின்ஸிடம் கொடுத்தார். பழரசம் குடித்த சிறிது நேரத்தில் பிரின்ஸ் மயங்கி கீழே விழுந்து இறந்து விட்டார்.
அங்கு மறைந்து இருந்த உமா சந்திரன் மற்றும் அவருடைய கூட்டாளிகள் வந்தனர். அவர்கள் பிரின்ஸ் வைத்து இருந்த ரொக்கப்பணம் ரூ.75 லட்சம், கழுத்தில் அணிந்து இருந்த 14 பவுன் தங்க சங்கிலி, கையில் அணிந்து இருந்த வைர மோதிரம் ஆகியவற்றை எடுத்து கொண்டனர்.
பின்னர், பிரின்ஸின் உடலை காரில் எடுத்துக் கொண்டு பாளையங்கோட்டைக்கு அனுப்பி வைத்தனர். காரில் உமா சந்திரன் கூட்டாளிகள் 2 பேர் வந்தனர். அவர்கள் ஏற்கனவே பாளையங்கோட்டையில் தன்னுடைய நண்பர்களுக்கு தகவல் கொடுத்து ஆசீர்வாத நகரில் குழி தோண்டி தயாராக வைத்து இருக்க சொன்னார்கள்.
அதன்படி அவர்கள் குழி தோண்டி தயாராக வைத்து இருந்தனர். அந்த குழியில் பிரின்ஸ் உடலை போட்டு புதைத்தனர். இந்த சதி வேலைக்கு பாளையங்கோட்டையைச் சேர்ந்த 3 பேர் உடந்தையாக இருந்தனர்.
இந்த கொலை வழக்கு தொடர்பாக பாளையங்கோட்டை செட்டிகுளம் மேலத் தெருவைச் சேர்ந்த ஆனஸ்ட்ராஜ் என்ற சதாம் (வயது 26), சாந்திநகரைச் சேர்ந்த காந்திமதி நாதன் என்ற விஜய் (32), அதே பகுதியைச் சேர்ந்த ரபீக் உஸ்மான் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். மேற்கண்ட தகவல் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
துப்பு கிடைத்தது எப்படி?
பிரின்ஸ் சகோதரர் ஜஸ்டீன் பிரின்சோ நெல்லையில் இருந்து சென்னைக்கு கார் மூலம் சென்று கொண்டு இருந்தார். மதுரையை அடுத்த திருமங்கலம் அருகே சென்ற போது அங்கே பிரின்சின் கார் நின்று கொண்டு இருந்தது. இதை பார்த்த அவர் தன்னுடைய தம்பி கார் என்று தெரிந்ததும், அங்கு சென்று பார்த்தார்.
அந்த காரில் நாகர்கோவிலைச் சேர்ந்த சுனில்குமார் என்பவர் இருந்தார். அவரிடம் இந்த கார் உங்களுக்கு எப்படி கிடைத்தது? என்று கேட்டார். அதற்கு அவர், உமா சந்திரன் என்பவரிடம் இருந்து ரூ.5 லட்சம் பேசி ரூ.1 லட்சம் முன் பணம் கொடுத்து வாங்கி இருக்கிறேன் என்று கூறினார்.
ஏற்கனவே பிரின்சுக்கும், உமா சந்திரனுக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்ததை அறிந்த பிரின்சோ சந்தேகம் அடைந்து பாளையங்கோட்டை போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். துப்பு கிடைத்ததும் போலீசார் விசாரணையை துரிதப்படுத்தினர். குற்றவாளிகள் சென்னையில் இருப்பது தெரியவந்தது. உடனடியாக அங்கு சென்று மேற்கண்ட குற்றவாளிகள் 3 பேரையும் கைது செய்தனர்.
பிணம் நாளை தோண்டி எடுப்பு
மேலும் இந்த கொலை வழக்கு தொடர்பாக உமா சந்திரன், சுருதி சந்திரலேகா, ஜான்பிரின்ஸ், நிர்மல், உள்பட பலரை போலீசார் தேடி வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று மாலை ஆசீர்வாத நகரில் புதைக்கப்பட்ட பிரின்ஸ் உடலை போலீசார் தோண்டி எடுப்பதாக அறிவித்து இருந்தனர். ஆனால் அவர்கள் பிணத்தை தோண்டி எடுக்கவில்லை. நாளை (திங்கட்கிழமை) டாக்டர்கள் முன்னிலை பிணத்தை தோண்டி எடுப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த கொலையில் 4 மாதங்களுக்கு பிறகு போலீசார் குற்றவாளிகளை கைது செய்துள்ளனர். சினிமா துணை நடிகை தொடர்புடைய இந்த கொலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.