தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் துறை பொறுப்பாளராக இருந்த தமிழ்ச்செல்வன் குடும்பத்தின் பெயரை பயன்படுத்தி புலம்பெயர் தமிழர்களிடம் இருந்து நிதி சேகரிப்பில் ஈடுபட புலிச் செயற்பாட்டாளர்கள் நடவடிக்கை எடுத்து உள்ளனர்.
தமிழ்ச்செல்வனின் மனைவி சசிரேகா பிள்ளைகள் சகிதம் பிரான்ஸ் நாட்டுக்கு வந்து உள்ளார்.
பிள்ளைகளுக்கு சிறந்த கல்வியை ஊட்டுகின்றமைக்கு வசதியாகவே குடும்ப உறவுகளின் உதவியுடன் இவர் வெளிநாடு வந்து உள்ளார் என்றும் அமைதியான, நிம்மதியான வாழ்க்கையை தொடர விரும்புகின்ற இவர் அரசியலில் ஈடுபடவே மாட்டார் என்றும் இவருக்கு மிக நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
போருக்கு பின்னர் இராணுவத்தின் பனகொட சிறப்பு முகாமில் இரண்டரை ஆண்டுகள் இவர் குடும்பத்துடன் வசித்து உள்ளார். கொழும்பில் பிள்ளைகளை கற்பிப்பதில் சிரமங்கள் உள்ளது என்று இவர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தினார்.
இவரது கோரிக்கையின் நியாயத்தை அதிகாரிகள் சாதகமாக பரிசீலித்தனர். இவர் கிளிநொச்சிக்கு சென்று உரிய ஆவணங்களை பெற்றுக் கொண்டு குடும்ப உறவுகளின் உதவியுடன் சட்ட ரீதியாக கடந்த வருடம் இந்தியா சென்றார்.
இங்கு வைகோ, நெடுமாறன், கனிமொழி, தொல். திருமாவளவன் ஆகியோரின் கண்களில் படாமல் வாழ்ந்தார்.
ஆயினும் பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளுக்கு இந்தியா பொருத்தமான இடம் அல்ல என்று கண்டு கொண்டமையால் குடும்ப உறவுகளின் உதவியுடன் பிரான்ஸிற்கு வந்து சேர்ந்து உள்ளார்.
இவரது வரவு புலிச் செயற்பாட்டாளர்களுக்கு அதிர்ச்சி கலந்த மகிழ்ச்சியை கொடுத்து உள்ளது. ஏனென்றால் தமிழ்ச்செல்வனின் குடும்பத்தை முன்னிறுத்தி புலம்பெயர் தமிழர்களிடம் இருந்து நிதி சேகரிக்க முடியும்.
அத்துடன் தமிழ்ச்செல்வனின் மனைவியை முன்னிறுத்தி அரசியல் செய்ய முடிவதோடு இலங்கை அரசுக்கு எதிரான பரப்புரைகளை முடுக்கி விட முடியும் என்று விசுவாசிக்கின்றனர்.
இவர்கள் மே 19 ஆம் திகதிக்காக காத்திருக்கின்றனர். பிரான்ஸில் உள்ள நகரம் ஒன்றில் தமிழ்ச்செல்வனுக்கு சிலை வைக்கப்பட்டு உள்ளது. தமிழ்ச்செல்வனுக்கு அஞ்சலி செலுத்த பிள்ளைகளுடன் தமிழ்ச்செல்வனின் மனைவி இவ்விடத்துக்கு வரக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.