337 இடங்களில் பா.ஜ கூட்டணி அபாரம்
* தனித்தே 283 தொகுதிகளை பிடித்து சாதனை
* எதிர்க்கட்சி அந்தஸ்து கூட காங்கிரசுக்கு கிடைக்காது
* ஆளும் மாநிலங்களிலும் பெரும் பின்னடைவு
புதுடெல்லி : நாடாளுமன்ற தேர்தலில் 337 இடங்களில் வெற்றி பெற்று அறுதி பெரும்பான்மையுடன் பாரதிய ஜனதா அபாரமாக ஆட்சியை பிடித்தது. இக்கட்சி தனித்தே 283 இடங்களை பிடித்தது. இதையடுத்து, மோடி பிரதமராக பதவியேற்கிறார். எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட காங்கிரஸ் இழக்கிறது.
நாட்டின் 16வது மக்களவைக்கான தேர்தல் 9 கட்டமாக நடந்த நிலையில், 543 தொகுதிகளுக்குமான வாக்கு எண்ணிக்கை நேற்று காலை 8.00 மணிக்கு தொடங்கியது. உலகமே ஆவலுடன் எதிர்பார்த்த இந்த தேர்தலில், ஆரம்பத்தில் இருந்தே பாஜ முன்னிலை வகித்தது.
யாருமே எதிர்பாராத வகையில் கருத்துக் கணிப்புகளையும் தாண்டி பாஜ. வின் வெற்றி அலை நாடு முழுவதும் வீசியது. பாஜ தலைமையிலான கூட்டணி 337 தொகுதிகளை கைப்பற்றிய நிலையில், அந்த கட்சி மட்டுமே 283 தொகுதிகளில் வென்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்து அசத்தியது.
அதே சமயம், கடந்த பத்து ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி இதுவரை இல்லாத அளவுக்கு படுதோல்வியை சந்தித்தது. எதிர்கட்சி அந்தஸ்தை கூட அது இழந்தது.
வாரணாசி, வதோதரா தொகுதிகளில் போட்டியிட்ட நரேந்திர மோடி லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை வசப்படுத்தினார்.
மொத்தமுள்ள 543 தொகுதிகளில் அறுதி பெரும்பான்மைக்கு தேவையான 272 இடங்களைக் காட்டிலும் 11 தொகுதிகளை கூடுதலாகப் பெற்று பாஜ, தனிப்பெரும்பான்மையுடன் கம்பீரமாக ஆட்சி அமைக்கிறது.
பிரதமராக மோடி பதவியேற்க உள்ளார். கடந்த 1984ம் ஆண்டு தேர்தலில் வெறும் 2 இடங்களைப் பெற்ற அந்த கட்சி, தற்போது இதுவரை இல்லாத அளவுக்கு அதிக இடங்களைப் பிடித்து சாதனை படைத்துள்ளது. வாஜ்பாய் தலைமையில் 199899ல் தேர்தலை எதிர்கொண்டபோது கூட அந்த கட்சிக்கு 182 இடங்களே கிடைத்தது.
பல மாநிலங்களில் பாஜ முழுமையான வெற்றியை வசப்படுத்திய நிலையில், காங்கிரஸ் 7 மாநிலங்களில் ஒரு வெற்றி கூட பெற முடியாமல் ஏமாற்றம் அடைந் தது.இதில், பல மாநிலங்களில் அக்கட்சியே ஆட்சி செய்கிறது.
காங்கிரஸ் கூட்டணிக்கு 58 தொகுதிகளும், அந்த கட்சிக்கு தனிப்பட்ட முறையில் 44 தொகுதிகளும் மட்டுமே கிடைத்தன.
மாநில கட்சிகளான அதிமுக 37, திரிணாமுல் காங்கிரஸ் 34 தொகுதிகளில் வென்று அடுத்த இடங்களைப் பிடித்தன. பிரதமர் மன்மோகன் சிங் இன்று தனது பதவியை ராஜினாமா செய்கிறார்.
இதைத் தொடர்ந்து, பாஜ நாடாளுமன்ற கட்சி கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற உள்ளது.இதில் தலைவராக தேர்ந்தெடுக்கப்படும் மோடி, ஜனாதிபதியிடம் அதற்கான கடிதத்தை சமர்ப்பித்து ஆட்சி அமைக்க முறைப்படி உரிமை கோருவார்.
அமோக வெற்றியை பதிவு செய்துள்ள மோடிக்கு உலகம் முழுவதும் இருந்து தலைவர்களும், பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.