நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் நாளை காலை புது டெல்லி வருகிறார்.
இந்திய – பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் வீரர்களால் ஈவிரக்கமின்றி தலையை துண்டித்து கொல்லப்பட்ட இந்திய இராணுவ வீரர் ஹேம்ராஜின் மனைவி தர்மாவதி, நவாஸ் ஷெரீப்பின் வருகைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் தர்மாவதி கூறியதாவது,
எனது கணவர் படுகொலை செய்யப்பட்ட போது இங்குள்ள மதுரா நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி, காங்கிரஸ் அரசின் கையாலாகாத தனத்தை வன்மையாக கண்டித்துப் பேசினார். அது மட்டுமின்றி, பாகிஸ்தானுக்கு பகிரங்கமாக சவாலும் விடுத்தார்.
அன்று முதல் நான் மோடியின் கட்சியை ஆதரித்தே வாக்களித்து வந்திருக்கிறேன். இந்த நிலையில், பிரதமராக பதவியேற்கும் விழாவுக்கு என் கணவரை கொன்ற நாட்டினுடைய பிரதமரை அவர் அழைத்திருப்பது, வீரமரணம் அடைந்த இராணுவ வீரரின் தியாகத்தை அவமதிக்கும் செயலாகும். நவாஸ் ஷெரீப்பை மோடி அழைத்திருக்க கூடாது.
இந்தியாவுக்கு வரும் நவாஸ் ஷெரீப், எனது கணவரின் தலையை கொண்டுவர வேண்டும். அல்லது, எனது கணவரின் தலையை துண்டித்த பாகிஸ்தானின் காட்டுமிராண்டித்தனமான செயலை பகிரங்கமாக கண்டிக்க வேண்டும். என் கணவர் கொல்லப்பட்டதற்கு வருத்தம் தெரிவிக்காவிட்டால், அவர் இன்னும் மாறவில்லை என்றுதான் அர்த்தம்.
நாளை (26) முதல் நவாஸ் ஷெரீப் இங்கிருக்கும் நாள் வரை உண்ணாவிரதம் இருந்து அவரது இந்திய வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்க நான் முடிவு செய்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.