மலேசியாவில் களாங் வலியில் இன்று பல்வேறு இடங்களிலும் நடத்தப்பட்ட சோதனைகளின் போது, விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்கள் என்று சந்தேகிக்கப்படும் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, மலேசிய காவல்துறை மாஅதிபர் தன் சிறி காலித் அபூபக்கர் தெரிவித்துள்ளார்.
பெட்டலிங் ஜாயா மற்றும் களாங் ஆகிய இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் இவர்கள் பிடிபட்டுள்ளனர்.
2004ம் ஆண்டு தொடக்கம் இவர்கள் மலேசியாவில் அகதிகள் என்ற போர்வையில் வசித்து வந்துள்ளனர்.
உலகெங்கும் திரட்டப்படும் நிதியைக் கொண்டு இவர்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு உயிர் கொடுக்க முனைந்ததாகவும் மலேசிய காவல்துறை கூறியுள்ளது.
இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தோற்கடிக்கப்பட்ட புலிகள் இயக்கத்தின் முக்கிய உறுப்பினர்கள் என்று தெரியவந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இவர்கள் மூவரும் குடிவரவுச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் ஒருவர் புலிகளின் வான்புலிகளின் பிரதி தலைவர் என்றும், மற்றொருவர் புலனாய்வு தலைவர் என்றும் மூன்றாமவர், ஊடக விவகார தலைவர் என்றும் மலேசிய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் மூவரும் 30 வயதுக்கும் 45 வயதுக்கும் இடைப்பட்டவர்களாவர்.
இவர்கள் சிறிலங்கா அரசாங்கத்தின் தடைப்பட்டியலில் இடம்பெற்றவர்களாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
3 விடுதலைப்புலிகளை மலேசியா நாடுகடத்தும்’
25-05-2016
விடுதலைப்புலிகள் அமைப்பை மீள உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் மூன்று விடுதலைப்புலிகள் அமைப்பின் சந்தேக நபர்களை மலேசியா இலங்கைக்கு நாடுகடத்தவுள்ளதாக அந்த நாட்டின் மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பாவிலும், ஏனைய நாடுகளிலும் உள்ள தமது தொடர்புகள் மூலம் இவர்கள் விடுதலைப்புலிகள் அமைப்பை மீள உருவாக்க முயற்சித்ததாக, தனது பெயரை வெளியிடாத அந்த அதிகாரி பிபிசி சிங்கள சேவையிடம் கூறினார்.
பல நாடுகளில் தடை செய்யப்பட்ட அந்த அமைப்புக்கு நிதி சேகரிப்பது மற்றும் அதற்கான பரப்புரைகளை செய்வது ஆகிய நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவர்கள் மலேசியாவில் உரிய விசா மற்றும் ஆவணங்கள் இல்லாமல் பல ஆண்டுகளாக தங்கியுள்ளதாக அவர் கூறுகிறார்.
அவர்கள் விரைவில் இலங்கைக்கு அனுப்ப்ப்படுவார்கள் என்றும், இது குறித்து இலங்கைக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.