இஸ்லாமிய முறைப்படி முஸ்லிம் ஆண்குழந்தைக்கு சுன்னத் கத்னாவின்போது 3 மாத சிசுவொன்று உயிரிழந்த சம்பவம், வெல்லம்பிட்டி மீத்தொட்டுமுல்லை பகுதியில் செவ்வாய்க்கிழமை (03) இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தை அடுத்து, சிசுவின் மரணத்துக்கு காரணமானவர் என சந்தேகிக்கப்படும் மாளிகாவத்தையைச் சேர்ந்த 47 வயதுடைய வைத்தியரொருவர் கைது செய்யப்பட்டார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.
மொஹமட் ஹம்தான் என்ற ஆண் குழந்தையே சம்பவத்தில் உயிரிழந்துள்து. இச்சம்பவம் தொடர்பில் பொலிஸ் பேச்சாளர் மேலும் கூறியதாவது,
3 மாத ஆண் சிசுவுக்கு சுன்னத் கத்னா செய்வதற்காக குறித்த சிசுவின் பெற்றோர், மாளிகாவத்தையில் கத்னா நடத்திவரும் பதிவுசெய்யப்படாத வைத்தியரான மொஹமட் நியாஸ் என்பவரை அழைத்துச் சென்றுள்ளனர். இவர் அச்த சிசுவுக்கு கத்னா செய்வதற்கு முன் ஊசிமருந்து ஏற்றியுள்ளார். இதன்பின்னர், குறித்த சிசுவுக்கு சுன்னத் கத்னா செய்யும்போது, அச்சிசு உயிரிழந்துள்ளது.
இதனையடுத்து சந்தேகநபரான வைத்தியர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கத்னாவை செய்வதற்காக இவரிடம் எவ்வித வைத்தியப் பதிவுகளோ அல்லது இது சம்பந்தமான தகைமைகளோ இல்லை என பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
மரண விசாரணைகளை, கொழும்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஒகஸ்டா அத்தபத்து மேற்கொண்டார். பிரேத பரிசோதனைகளை சட்ட வைத்திய அதிகாரி ஸ்ரீயந்த அமரரத்ன மேற்கொண்டார். மாளிகாவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என பொலிஸ் பேச்சாளர் மேலும் கூறினார்.