மஹராஷ்டிர மாநிலத்தின் பூனே நகரில், 24 வயது முஸ்லிம் இளைஞர் ஒருவர் இந்துத்துவ அமைப்பினை சேர்ந்தவர்களால் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் அம்மாநில அரசிடம் அறிக்கை ஒன்றை மத்திய உள்துறை அமைச்சகம் கோரியுள்ளது.
கடந்த திங்கட்கிழமையன்று மாலை பூனே நகரில், மசூதியில் பிரார்த்தனைகளை முடித்துக்கொண்டு திரும்பிய முஹ்சின் ஷெய்க் என்ற இளைஞரை ஒரு கும்பல் தாக்கியிருந்தது.
மருத்துவமனைக்கு எடுத்து செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.
முஸ்லிம் என்ற அடையாளம் காட்டும் வகையில் தாடி வைத்திருந்தமையால் தான் மொஹ்சின் ஷைக் தாக்கப்பட்டதாகவும், அவரை 15 பேர் அடங்கிய கும்பல் இரக்கமின்றி ஹாக்கி மட்டைகளாலும் மரக் கட்டைகளாலும் அடித்து கொன்றனர் என்றும் அந்த கொல்லப்பட்ட இளைஞரின் சகோதரர் முபீன் ஷெய்க் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் இந்துத்துவ அமைப்பான ‘இந்து ராஷ்ட்ர சேனா’வை சேர்ந்த 17 பேர் இதுவரை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
பேஸ்புக்கில் வெளியான அவதூறு புகைப்படங்கள்
சிவசேனா கட்சித் தலைவர் பால் தாக்கரே குறித்தும், மராட்டிய மாவீரர் சிவாஜி குறித்தும் தரக்குறைவான புகைப்படங்கள் பேஸ்புக் இணையதளத்தில் கடந்த வாரம் வெளியானதை அடுத்து பூனே நகரில் மதரீதியான பதற்றம் நிலவி வந்தது.
அந்த பேஸ்புக் இணையத்தள புகைப்படங்கள் காரணமாகத்தான் அந்த இளைஞரை இந்து அமைப்பினர் தாக்கியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த இளைஞதான் அந்த புகைப்படங்களை தனது பேஸ்புக் இணையதளத்தில் வெளியிட்டுருந்தார் என்று முன்னதாக செய்திகள் வெளியாகின.
எனினும் பேஸ்புக் இணையதளத்தில் பரவிய அந்த புகைப்படங்களுக்கும் இந்த இளைஞருக்கும் எந்த வித தொடர்பும் இல்லை என்றும், அப்பாவியான அவர் அந்த மோதல்களில் தவறாக சிக்கிவிட்டதாகவும் அம்மாநில உள்துறை அமைச்சர் ஆர்.ஆர்.படேல் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இது மதவெறி காரணமாக நிகழ்ந்த குற்றம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த பேஸ்புக் அவதூறு புகைப்படத்தை கண்டித்து கடந்த வார இறுதியில் பூனே மற்றும் மகாராஷ்டிரா மாநில மற்ற நகரங்களிலும் மோதல்கள் நடந்திருந்தன என்று காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
அந்த புகைப்படங்கள் பேஸ்புக்கிலிருந்து பின்னர் அகற்றப்பட்டிருந்தன.