பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட நபர்களை அடையாளம் காணும் போதும் அவர்கள் தலைமறைவாக இருப்பதால் கைது செய்வதில் பல்வேறுசவால்களை பொலிஸார் எதிர்கொள்கின்றனர்.
எனினும் பல சந்தர்ப்பங்களில் அவ்வாறான சவால்களை பொலிஸார் வெற்றிகரமாக முறியடித்துமுள்ளனர். இவ்வாறு தலைமறைவாக வாழும் குற்றவாளிகளை கைது செய்ய பல சந்தர்ப்பங்களில் அடையாளம் காணப்பட்ட குற்றவாளிகளின் பலவீனங்களை அறிந்து தந்திரமாக பொலிஸார் செயற்பட்டுள்ளனர்.
மதவாச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்ற பெண்ணொருவரின் கொலை தொடர்பிலும் பொலிஸார் தந்திரமாக செயற்பட்டு குற்றவாளியை கைது செய்த விடயம் கடந்த மாதம் தெரியவந்தது. அந்த கதையே இது.
இந்திக (பெயர் மாற்றப்பட்டுள்ளது) திருமணமான மூன்று பிள்ளைகளின் தந்தை. 18, 15 மற்றும் 12 வயதுகளை உடைய முறையே இரு பெண் பிள்ளைகளதும் இருவர் , ஒரு ஆண் பிள்ளையினதும் தந்தையான இந்திக மனைவியிடமிருந்து தூரமாகி வாழ்ந்து வந்தான்.
ஏனெனில் இடம்விட்டு இடம் சென்று தொழில் புரிந்து வந்த இந்திக செல்லும் இடமெல்லாம் தனக் கென ஒரு கள்ளத் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள தவறவில்லை. இதுவே அவனை மனைவியிடமிருந்து தூரப்படுத்தியது.
மதவாச்சி பொலிஸ் பிரிவில் கெந்தஹகெட்டுன குளம் பகுதியை வதிவிடமாக கொண்ட டிப்பர் வண்டிச் சாரதியான இந்திக, மனைவியிடமிருந்து தூரமாகிய போதும் தனது கள்ளத் தொடர்புகளை நிறுத்தியதாக தெரியவில்லை.
இந் நிலையில் தான் இந்திகவுக்கு கஹட்ட கஸ்திகிலிய பொலிஸ் பிரிவில் வசித்து வந்த சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரின் மனைவியான நிரோஷியுடன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தொடர்பு ஏற்பட்டது.
40 வயது நிரம்பிய இரு பிள்ளைகளின் தாயே நிரோஷி. இந்த கள்ளக் காதல் வளரவே இற்றைக்கு ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் நிரோஷி தனது கணவர், இரு பிள்ளைகளைக் கைவிட்டு இந்திகவுடன் சென்று குடித்தனம் நடத்தலானார்.
தன்னுடன் வாழ வந்த நிரோஷியை இந்திக கஹட்டகஸ்திகிலிய பொலிஸ் பிரிவின் கொலன்கஸ் குளம் பகுதியில் உள்ள மருந்து மாமா என அழைக்கப்படும் தனது உறவுக்காரர் ஒருவரின் வீட்டுக்கு அழைத்துச் சென்றான். அந்த வீட்டிலேயே இவ்விருவரும் கணவன் மனைவியாக வாழ்ந்து வந்தனர்.
எனினும் அந்த வாழ்க்கை நீடிக்கவில்லை. ஏனெனில் மருந்து மாமாவின் இளம் மகனுக்கும் நிரோஷிக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருப்பதாக இந்திக சந்தேகித்தான்.
இராணுவத்தில் சேவையாற்றிய மருந்து மாமாவின் மகனை நிரோஷிக்கு பழக்கப்படுத்தியது மருந்து மாமாவாகவே இருக்க வேண்டும் எனவும் இந்திக நினைத்தான். அதனால் மேலும் அந்த வீட்டில் தங்கியிருப்பதில்லை என முடிவெடுத்த இந்திக, அதனை நிரோஷிக்கும் தெரிவித்து அங்கிருந்து வேறு ஒரு பிரதேசத்துக்கு செல்ல அவளை அழைத்தான்.
எனினும் நிரோஷி அதனை நிராகரித்து விட்டாள். அதனை தொடர்ந்தே இந்திகவுக்கும் நிரோசிக்கும் இடையே சண்டை ஏற்படலானது. இந்த சண்டை விரிசலை ஏற்படுத்தியதுடன் இந்திகவை அந்த வீட்டிலிருந்து வெளியேறவும் செய்தது.
தினம் தினம் மூண்ட சண்டையின் எதிரொலியாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சண்டை ஒன்றின் பின்னர் இந்திக வீட்டை விட்டு வெளியேறி அயலூரில் வசித்த தனது உறவினர் வீடொன்றுக்கு சென்றுள்ளான்.
அங்கு சென்ற அவன் அந்த வீட்டிலிருந்த பெரிய கத்தியுடன் அன்றைய தினம் இரவே மருந்து மாமாவின் வீட்டுக்கு வருகை தந்துள்ளான்.
மருந்து மாமாவின் வீட்டு வளாகத்துக்குள் களவாக நுழைந்த இந்திக நிரோசி வெளியே வரும் வரை பதுங்கியிருந்துள்ளான். அதாவது மருந்து மாமாவின் வீட்டின் பின்பக்கம் மா மரம் ஒன்று இருந்ததுடன் அதன் அருகே மின் விளக்கொன்றும் ஒளிர்ந்துகொண்டிருந்தது.
அத்துடன் அவ்விடத்தில் தண்ணீர் குழாய் ஒன்றும் பொருத்தப்பட்டிருந்ததுடன் உணவு உட்கொண்டதும் அங்கு நிரோஷி வருவாள் என்பதை அறிந்தே அவன் அவ்வாறு பதுங்கியிருக்க வேண்டும்.
அவன் எதிர்பார்த்ததைப் போன்றே நிரோஷி கையில் வெற்று பீங்கானுடன் தண்ணீர் குழாயை நோக்கி வருகை தந்துள்ளார். இதன் போது பதுங்கியிருந்த இந்திக கத்தியுடன் பாய நிரோஷி வீட்டை நோக்கி திரும்பி ஓடியுள்ளார்.
எனினும் இந்திக விடவில்லை. விரட்டிச் சென்று அவளின் தலைப்பகுதியில் அந்த பெரிய கத்தியைக் கொண்டு தாக்கவே நிரோஷி வீட்டின் வாயிலிலேயே சாய்ந்தாள். இதனை அடுத்து இந்திக கத்தியுடன் தலைமறைவாக நிரோஷியோ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இரு மாதங்கள் வரை அங்கேயே சிகிச்சை பெற்று கோமா நிலையில் இருந்து மரணத்தை தழுவினாள்.
நிரோஷியின் உடல் இறுதியில் அவளது சட்டபூர்வமான கணவராலேயே பொறுப்பேற்கப்பட்டு இறுதிக்கிரியைகள் செய்யப்பட்டன.
நிரோஷி வைத்தியசாலையில் இருந்த இறுதி நாட்களில் மதவாச்சி பொலிஸ் நிலையத்தின் செயற்பாடுகள் அனுராதபுரத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் மகேஷ் சேனாரத்னவினால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தது.
அதன் போது இந்திக- நிரோஷியின் இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் நிலுவையில் உள்ளதை அவதானித்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் மகேஷ் சேனாரட்ன பொலிஸ் நிலையத்தின் மகளிர் மற்றும் சிறுவர் பிரிவுக்கு பொறுப்பாக இருந்த பெண் பொலிஸ் பரிசோதகரான சோமலத்தாவை அழைத்து இந்த கொலையின் சந்தேக நபரை உடன் கைது செய்யுமாறு ஆலோசனை வழங்கினார்.
எனினும் இந்த கொலையானது குற்றவியல் பிரிவூடாக கையாளப்படும் விடயம் என்பதால் அப்பெண் பொலிஸ் பரிசோதகர் சற்று தயங்கவே, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் மகேஷ் சேனாரட்ன சில ஆலோசனைகளை வழங்கி கொல்லப்பட்டவர் பெண் என்பதால் மகளிர் விவகார பிரிவும் இதற்கு ஒத்துழைப்பு வழங்கி சந்தேக நபரை கைது செய்யுமாறு உத்தரவிட்டு சென்றுள்ளார்.
இந் நிலையில் தான் பெண் பொலிஸ் பரிசோதகரான சோமலதாவுக்கு இந்திகவின் தொலைபேசி இலக்கம் என கூறப்படும் ஒரு தொலைபேசி இலக்கம் கிடைத்துள்ளது. அதனை தொடர்புகொண்ட சோமலத்தா அவ்வெண் செயலிழந்து உள்ளதை தெரிந்துகொண்டார்.
எனினும் தளரவில்லை. ஒருவாறு முயற்சித்து இந்திகவின் மற்றொரு தொலைபேசி இலக்கத்தையும் அவர் பெற்றுக்கொண்டுள்ளார். பெற்றுக்கொண்ட அந்த இலக்கம் செயலில் இருந்ததால் அந்த இலக்கத்துக்கு ஒரு மிஸ் கோல் ஒன்றை மட்டும் தந்திரத்துடன் வழங்கியுள்ளார் பெண் பொலிஸ் பரிசோதகர்.
சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் மகேஷ் சேனாரத்னவின் ஆலோசனைக்கமைய முன்னெடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையில் எதிர்பார்த்தவாறே பலன் கிட்டியது.
மன்மதனான இந்திகவை சிக்கவைக்க தொலைபேசி திருத்தும் நிலையம் ஒன்றில் பழைய திருத்தப்பட்ட சாதாரண தொலைபேசியொன்றை கொள்வனவு செய்த பெண் பொலிஸ் பரிசோதகர் புதிய சிம் அட்டை ஒன்றையும் அங்கு கொள்வனவு செய்து தனது தந்திரோபாய நடவடிக்கையை தொடர்ந்தார்.,
மிஸ் கோல் வழங்கும் போது ஒரே ரிங்க்குடன் தொலைபேசி அழைப்புக்கு இந்திக பதிலளிக்க ‘ தவறான அழைப்பு எனக் கூறி அதனை துண்டித்தான்.
கடந்த மே மாதம் 14 ஆம் திகதியது. அப்போது தான் பெண் பொலிஸ் பரிசோதகருக்கு இந்திகவின் தொலைபேசி இலக்கம் கிடைத்தது.
அப்போது அழைப்பினை ஏற்படுத்திய பெண் பொலிஸ் பரிசோதகர்
SSP மகேஷ் சேனாரத்ன
‘ ஹெல்லோ… நிஸாந்த அண்ணாவா?… ‘ எனக் கேட்க ‘ நான் நிஸாந்த இல்லை’ என பதில் வந்துள்ளது. அதனை தொடர்ந்து நான் நிஸாந்த அண்ணாவுக்கு எடுத்தேன்…தவறுதலாக உங்களுக்கு வந்துவிட்டது…என்னை மன்னித்துக்கொள்ளுங்கள் என தந்திரமாக பேசிய பெண் பொலிஸ் பரிசோதகர் அழைப்பை துண்டித்துள்ளார்.
மன்மதனான இந்திக தொலைபேசியில் தன்னுடன் கதைத்த பெண்ணை எப்படியேனும் மடக்கி போட வேண்டும் என நினைத்திருக்க வேண்டும். அல்லது அந்த பெண் குரலில் அவன் உணர்ந்த காதல், பரிவு, அன்பு இந்திகவை மீண்டும் அந்த இலக்கத்துக்கு அழைப்பை ஏற்படுத்த வைத்து அடுத்த சில வினாடிகளில் பெண் பொலிஸ் பரிசோதகரின் தந்திரத்தில் சிக்க வைத்தது.இந்திகவிடமிருந்து வந்த அழைப்புக்கு பெண் பொலிஸ் பரிசோதகர் பதிலளிக்கலானார்.
‘ நீர் நிஸாந்த அண்ணா இல்லைதானே….ஏன் திரும்ப எடுக்கின்றீர்…..’ என வினவியுள்ளார்.
இல்லை …இல்லை…எனக்கு உங்களுடன் பேச வேண்டும் போல இருந்தது….நீங்கள் யார்…எந்த இடத்தை சேர்ந்தவர்?’ என இந்திகவிடமிருந்து மன்மதவார்த்தைகள் காற்றலையில் கலந்தன.
இந்தவொரு நிலைமைக்காகவே காத்திருந்த பொலிஸாரும் இந்த நாடகத்தை தொடர்ந்தனர்.
‘ என்னைப் பற்றி சொல்வதற்கு முன்னர் அண்ணன், தங்களைப் பற்றி கூறலாமே…’ என சந்தேகம் ஏற்படாதவாறு உரையாடலை முன்னெடுக்கலானார் பெண் பொலிஸ் பரிசோதகர். அத்துடன் அவனது பதிலுக்கான அடித்தளத்தையும் இட்ட பெண் பொலிஸ் பரிசோதகர் ‘ அண்ணன் இராணுவத்தில் இருந்தா பேசுறீங்க…’ என சகஜமாக கேட்க இந்திகவின் பதில் தொடர்ந்தது.
‘ இல்லை..இல்லை… நான் சாரதி….குருணாகலில் இருக்கின்றேன்…’ என்ற பதில் பொலிஸாருக்கு கிடைத்ததுடன்… நீங்கள் எங்கு இருக்கின்றீர்கள் என்ற கேள்வியும் தொடுக்கப்பட்டது
உரையாடலை தொடர்ந்த பெண் பொலிஸ் பரிசோதகர் ‘ நான் அரலகங்வில….இந்த பிரதேசம் தெரியுமா?…என சகஜமாக கேட்க ‘ ஆம்… நான் பொலன்னறுவை ஊடாக மட்டக்களப்பு சந்தியை ஊடறுத்து கல்முனைக்கு மா கொண்டு செல்வேன்…எனக்கு அப்பிரதேசங்கள் தெரியும்…பொலன்னறுவையில் தான் நானும் தொழில் செய்கின்றேன்… நீங்கள் ஏதாவது தொழில் செய்கின்றீர்களா? என கேள்வியுடன் பதிலை முடித்தான் இந்திக.
‘அண்ணா நான் கல்யாணமானவள்…தொழில் செய்வதில்லை…கணவன் இராணுவ வீரர்…யுத்தத்தின் போது உயிரிழந்து விட்டார். அவரது சம்பள பணத்தில் தான் நான் வாழ்கின்றேன்…உறவினர் ஒருவருடன் தான் தற்போது வீட்டில் உள்ளேன்…’ என்ற பெண் பொலிஸ் பரிசோதகரின் பதில் இந்திகவை மேலும் உற்சாகப்படுத்தியது.
கணவனை இழந்து எத்தனை ஆண்டுகள் என கேட்ட இந்திக ஆறு வருடங்கள் என்ற அவளது பதிலால் அதிர்ச்சியும் தனது திட்டத்தை இலகுவில் நடை முறைப்படுத்தலாம் என்ற சந்தோசத்திலும் பேச்சை தொடர்ந்துள்ளான்.
‘ இவ்வளவு நாட்கள் கல்யாணம் செய்யாது தனியாக இருக்கின்றீர்களா?…இன்னொரு கல்யாணம் செய்யலாமே….’ என ஆலோசனை கூறிய இந்திகவுக்கு ‘ இல்லை…மாமியார் மிகவும் நல்லவர்…அவருடன் தான் இருக்கின்றேன்…கல்யாணம் வேண்டாம்’ என சந்தேகம் துளியளவும் ஏற்படாத வண்ணம் பெண் பொலிஸ் பரிசோதகரான சோமலதா தெரிவித்துள்ளார்.
தனது மன்மத திட்டத்துடன் கதையை தொடர்ந்த இந்திக, தனக்கு வயது 34 எனவும் தான் ஒரு பெண்ணை காதலித்ததாகவும் அவரை வீட்டாருக்கு பிடிக்காததால் கல்யாணம் செய்துகொள்ளவில்லை எனவும் தான் இன்னும் திருமணமாகாதவர் எனவும் அறிமுகம் செய்துகொண்டான்.
இவ்வாறு பேசப்பட்ட முதல் அழைப்பு துண்டிக்கப்பட்டதிலிருந்து அடுத்தடுத்து அழைப்புக்களை உருவாக்கியது.
இந்திக காதல் மொழி பேசி எப்படியேனும் எதிர் முனையில் பேசும் பெண்னை தனது ஆசை நாயகி ஆக்கிக்கொள்ள முனைந்தான். தொலை பேசியில் பணம் இல்லை என்றால் உடனே ரீ லோட் செய்தான்…தொடர்ச்சியாக தொலைபேசி அழைப்பினை பெண் பொலிஸ் பரிசோதகருக்கு ஏற்படுத்தி காதல் மொழி பேசினான்.
இந் நிலையில் தான் கதையோடு கதையாக பொலிஸ் பரிசோதகர் சோமலதா இந்திகவிடம் ‘ அண்ணா உங்களுக்கு கல்யாணம் பண்ணிக்கொள்ளும் யோசனை இல்லையா…’ எனக் கேட்டுள்ளார். தான் அழகான நல்ல பெண்ணொருவரை தேடிக்கொண்டிருப்பதாக இந்திக அதற்கு பதிலளிக்க தமது ஊரில் அழகான பிள்ளைகள் உள்ளதாகவும் ஒன்றை பேசுவோமா எனவும் பொலிஸ் பரிசோதகர் சோமலத்தா இந்திகவிடம் வினவியுள்ளார்.
அதற்கு இந்திக பார்ப்போம் என பதிலளித்து விட்டு… எனக்கு உங்களை பார்க்க வேண்டும் என தனது மனதில் உள்ள ஆசையை வெளிப்படுத்தியுள்ளான்.
அதனை தொடர்ந்து தான் தனது குடும்பத்தினருடன் 17 ஆம் திகதி பொலன்னறுவைக்கு யாத்திரை வருவதாக பெண் பொலிஸ் பரிசோதகர் சோமலத்தா குறிப்பிட அப்படியானால் தனக்கும் அங்கு வர முடியும் எனவும் முதலாளியிடம் அரை நாள் விடுமுறை வாங்கிக்கொன்டு வருவதாகவும் இந்திக தனது ஆலோசனையை முன்வைத்துள்ளார்.
இந் நிலையில் 17 ஆம் திகதி இருவரும் சந்தித்துக்கொள்வது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.
மே மாதம் 17 ஆம் திகதி உதயமானது. இந்திக விடியற்காலையிலேயே பொலிஸ் பரிசோதகர் சோமலதா உள்ளிட்டவர்களின் திட்டம் தெரியாது அழைப்பை ஏற்படுத்தி காதல் மொழி பேசி வருகின்றீரா…என விசாரித்துக்கொண்டான்.
அப்பொழுது முதல் அடிக்கடி அழைப்பை ஏற்படுத்தி எங்கு இருக்கின்றீர்கள் என பலவாறு விசாரித்துக்கொண்ட இந்திக, தொலைபேசிக்கு அழைப்பை ஏற்படுத்த முடியாது போகும் போது கவலையடைந்து பதற்றப்பட்டுள்ளான்.
ஒருவாறு மீண்டும் அழைப்பை தொடர்ந்துள்ள இந்திக …’ அன்பே…உன்னை காணும் வரை என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை… நீங்கள் வரும் வழியில் கல் விகாரைக்கு போய் அங்கு அனைவரையும் விட்டுவிட்டு நீர் மட்டும் பஸ் நிலையத்துக்கு வாரும்…அங்கு வைத்து நாம் சந்திக்கலாம்…நான் உன்னை கொண்டு செல்ல அங்கு காத்திருக்கின்றேன் ..; என இந்திக தனது திட்டத்தை வெளிப்படுத்தினான்.
‘சரி…சரி… என்னை உங்களுக்கு பிடித்துள்ளதா என முதலில் பார்ப்போமே…அப்புறம் ஏனையவற்றை வைத்துக்கொள்ளலாம்…’என பெண் பொலிஸ் பரிசோதகர் கூற நேரம் கடந்துகொண்டிருந்தது.
இப்போது மீண்டும் அழைப்பை ஏற்படுத்திய இந்திக’ தான் நெருங்கிவிட்டதாகவும்…அடையாளம் காண ஆடை தொடர்பில் கூறுமாறும் வேண்டியுள்ளான்.
இதனை அடுத்து தன்னை அடையாளப்படுத்திய இந்திக தான் வெள்ளை நிற அரைக்கை சேட்டும் கறுப்பு நிற நீளக் காட்சட்டையும் அணிந்து மண்நிற பை ஒன்றை சுமந்து உள்ளதாகவும் கூறியுள்ளார்.
தான் ரோஸ் நிற பிளவுசும் கறுப்பு நிற ஸ்கவுட் ஒன்றும் அணிந்திருப்பதாக தெரிவித்த பெண் பொலிஸ் பரிசோதகர்…’ எனக்கு பஸ் தரிப்பிடத்தில் தனியாக நிற்க பயமாக உள்ளது…நான் வேனுக்குள் இருகின்றேன்..நீங்கள் வந்து எனக்கு அழைப்பை தாருங்கள்… நான் தனியாக நிற்கும் போது வேறு யாரும் என்னை தள்ளிக்கொண்டு போய்விடுவார்கள் அல்லவா’ என குறும்பு கலந்து பேச இந்திகவும் சம்மதித்தான்.
சொன்னவாறே அடுத்த சில நிமிடங்களுக்குள் இந்திக பஸ் நிலையத்தில் வந்து இறங்கினான்.. தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்த முயன்ற போது அங்கு மறைந்திருந்த பொலிஸாரும் பஸ் தரிப்பிடம், முச்சக்கர வண்டி தரிப்பிடத்தில் சிவில் உடையில் நின்ற பொலிஸாரும் இந்திகவின் கைகளுக்கு விலங்கிட்டனர்.
இந்திகவின் கைகளுக்கு விலங்கை மாட்டிய பொலிஸார் ‘ உன் காதலி அங்கே உள்ளார்… எனக் கூறி பொலிஸ் ஜீப் வண்டிக்கு அழைத்துச் சென்றனர். அவனை பொலிஸ் ஜீப் வண்டிக்கு அழைத்துச் சென்ற போது பெண் பொலிஸ் பரிசோதகர் சோமலதா அவ்விடத்துக்கு வரவே..’ ஆ…இந்திக என விளித்துள்ளார். அப்போது அவரை நன்கு அறிந்திருந்த இந்திக ‘ சோமா மிஸ் தானே’ என்று கேட்டுள்ளார்.
அதன் போது ‘ என்ன இந்திக என்னுடன் கோபமா என பெண் பொலிஸ் பரிசோதகர் கேட்க ‘ இல்லை…மிஸ்.’..என்றவாறு வெட்கி தலை குனிந்து ஜீப் வண்டியில் ஏறினான்.
பல நாள் தலைமறைவு வாழ்வு வாழ்ந்து பல பெண்களுடன் தவறான தொடர்பினைக் கொண்டிருந்த இந்திக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் மகேஷ் சேனாரத்னவின் ஆலோசனையின் கீழ் மதவாச்சி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.ஏ. திஸாநாயக்க, குற்றவியல் பிரிவின் பொறுப்பதிகாரி செனவிரத்ன, சார்ஜன்ட்டுகளான தர்மரத்ன, குணபால கான்ஸ்டபிளான வெத்தசிங்க ஆகியோர் அடங்கிய குழு பொலன்னறுவைக்கு புறப்பட்டு அங்கு வைத்து சந்தேக நபரை கைது செய்தது.
சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் மகேஷ் சேனாரத்னவின் விஷேட திட்டப்படி பொலன்னறுவை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியும் இந்த நடவடிக்கைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எம்.எப்.எம்.பஸீர்