இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்கு ஐ.நா. மனித உரிமை பேரவை நியமித்துள்ள விசாரணை குழுவின் தலைவராக நியூஸிலாந்தைச் சேர்ந்த முன்னாள் பெண் நீதிபதியான டேம் சில்வியா கார்ட்ரைட் நியமிக்கப்பட்டுள்ளதாக நம்பகரமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு நாளை அல்லது அடுத்த வாரமளவில் வெளியாகலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் டேம் சில்வியா கார்ட்ரைட் தலைமையில் 13 பேர் கொண்ட குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் இவர்கள் விரைவில் இலங்கைக்கு வருவதற்காக விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
நியூஸிலாந்தின் முதல் பெண் மாவட்ட நீதிபதியாக டேம் சில்வியா கார்ட்ரைட் தெரிவு செய்யப்பட்டு, நீதிபதியாக இருந்த காலத்தில் மிகச் சிறப்பாகப் பணியாற்றியமைக்காக பல கௌரவ விருதுகளையும் பெற்றுள்ளார்.
அத்துடன், கம்போடியாவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்து விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட அனைத்துலக தீர்ப்பாயத்தின், இரண்டு நீதிபதிகளில் ஒருவராக டேம் சில்வியா கார்ட்ரைட் செயலாற்றியுள்ளார்.
2001ஆம் ஆண்டு தொடக்கம் 2006ஆம் ஆண்டு வரை இவர் நியூஸிலாந்தின் ஆளுநராகவும் பணியாற்றியுள்ளார். அத்துடன் பெண்களுக்கு எதிரான பாகுபாடுகளைக் களைவதற்கான குழுவிலும் முக்கிய பங்காற்றியுள்ளார்.
ஆரம்பத்தில் இலங்கை குறித்த விசாரணை குழுவின் தலைவராக ஐக்கிய நாடுகளின் முன்னாள் செயலாளர் நாயகம் கொபிஅனான் நியமிக்கப்படலாம் என்று கூறப்பட்டுவந்தது. எனினும் தற்போது நியுசிலாந்தின் முன்னாள் பெண் நீதிபதி நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவி்க்கப்படுகின்றது.
இது இவ்வாறு இருக்க ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளை ஜெனிவாவில் உள்ள மனித உரிமைப் பேரவைக்கான இலங்கையின் வதிவிட பிரதிநிதி ரவிநாத ஆரியசிங்கவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
கடந்த வாரம் இடம்பெற்றுள்ள இந்த சந்திப்பின்போது மனித உரிமைப் பேரவையின் விசாரணைக் கட்டமைப்பு மற்றும் அதன் செயற்பாடுகள் தொடர்பில் ரவிநாத ஆரியசிங்கவுக்கு நவிபிள்ளை விளக்கமளித்துள்ளார்.
விசாரணை குழுவில் சிரேஷ்ட நிபுணர்கள் இருவரும் மூன்று விசேட அறிக்கையாளர்களும் உள்ளடங்குவார்கள் என்றும் ரவிநாத ஆரியசிங்கவுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது இவ்வாறு இருக்க நாளை செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகவுள்ள ஐககிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையின் 26 ஆவது கூட்டத் தொடரில் ஆரம்ப அமர்வில் உரையாற்றவுள்ள நவி பிள்ளை விசாரணைக் குழு குறித்த முழு விபரங்களையும் வெளியிடவுள்ளார்.
இந்நிலையில் இலங்கையின் சார்பில் செவ்வாய்க்கிழமை உரையாற்றவுள்ள வதிவிட பிரதிநிதி ரவிநாத ஆரியசிங்க விசாரணைக் குழுவை இலங்கை நிராகரிப்பதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கவுள்ளார்.
அத்துடன் இலங்கை குறித்து விசாரிப்பதற்கு நியமிக்கப்பட்டு விசாரணைக்குழுவின் இணைப்பாளராக சண்ட்ரா பெய்டாஸ் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவரை ஜெனிவாவுக்கான வதிவிட பிரதிநிதி ரவிநாத ஆரியசிங்கவுக்கு விரைவில் அறிமுகப்படுத்தி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இலங்கை மனித உரிமை விவகாரம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளை விசாரணைக் குழுவை அமைத்து வெளிமட்ட விசாரணைகளை ஆரம்பித்தால் அதனை எதிர்ககொள்வதற்கு அரசாங்கத்திடம் திட்டம் உள்ளது என்று அரசாங்கத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
” அரசாங்கத்தின் உயர்மட்டம் மற்றும் வெளிவிவகார அமைச்சு என்பன இந்த விடயத்தில் வெறுமனே இருக்கவில்லை. அனைத்து விடயங்களையும் ஆராய்ந்துகொண்டே இருக்கின்றோம்.
அது தொடர்பில் எம்மிடம் ஒரு திட்டம் உள்ளது. அதனை உரிய நேரத்தில் நாங்கள் நடைமுறைப்படுத்துவோம் ” என்று அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல குறிப்பிட்டிருந்தார்.
நல்லிணக்க ஆணைக்குழு கவனம் செலுத்திய காலப் பகுதியில் இலங்கையில் இருதரப்பினராலும் இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றங்கள் மற்றும் மோசமான மனித உரிமை மீறல்கள், துஷ்பிரயோகங்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைப் பேரவையின் விரிவான சுதந்திரமான விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டே இலங்கைக்கு எதிரான பிரேரணை நிறைவேற்றப்பட்டது.
இலங்கையில் பொறுப்புக்கூறலையும் நல்லிணக்கத்தையும் ஊக்குவித்தல் என்ற தலைப்பிலான இந்தப் பிரேரணைக்கு ஆதரவாக 23 நாடுகளும் பிரேரணையை எதிர்த்து 12 நாடுகளும் வாக்களித்தன. அத்துடன் இந்தியா உள்ளிட்ட 12 நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொள்ளாமல் நடுநிலை வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இலங்கை தொடர்பான பிரேரணை அமுல்படுத்தப்படுவது தொடர்பான வாய்மூல அறிக்கை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள மனித உரிமைப் பேரவையின் 27 ஆவது கூட்டத் தொடரிலும் பரந்துபட்ட முழுமையான ஆவண அறிக்கை எதிர்வரும் 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் 28 ஆவது அமர்விலும் சமர்ப்பிக்கப்படவேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.