நியூயார்க்: இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சேவுக்கு பொலிவியா நாட்டின் அமைதி மற்றும் ஜனநாயகத்துக்கான உயரிய விருது வழங்கப்பட உள்ளது.
தென் அமெரிக்காவில் உள்ள சாண்டாக்ரூஸ் நகரில் ‘ஜி77’ நாடுகளின் உச்சி மாநாடு வரும் 14 மற்றும் 15 தேதிகளில் நடைபெற உள்ளது.
பொலிவியா வழங்குகிறது ‘நலமாக வாழ உலகின் புதிய முறை’ என்ற மையக்கருவுடன் நடைபெறும் இந்த மாநாட்டில் ஜி77 அமைப்பின் தலைவரும், பொலிவியா நாட்டின் அதிபருமான இவோ மோரேல்ஸ், ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன், ஐ.நா. பொதுச் சபை தலைவர் ஜான் ஆஷ், சீன அரசின் பிரதிநிதிகள், இலங்கை அதிபர் ராஜபக்சே ஆகியோர் பங்கேற்கின்றனர்.
இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக ராஜபக்சே அமெரிக்காவுக்கு புறப்பட்டு சென்றுள்ளார். வரும் ஞாயிற்றுக்கிழமை இம்மாநாட்டில் உரையாற்றவுள்ள ராஜபக்சேவுக்கு பொலிவியா நாட்டின் அமைதி மற்றும் ஜனநாயகத்துக்கான உயரிய விருது வழங்கப்படவுள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த மாநாட்டில் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மற்றும் உயர் மட்ட பிரதிநிதிகள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.