Site icon ilakkiyainfo

அளுத்கம நகரில் நடந்த கலவரத்தில் 3 முஸ்லிம்கள் பலி: அதிர்ச்சி வீடியோ காட்சிகள்

களுத்துறை மாவட்டம் அளுத்கமவில் கடும்போக்கு பௌத்தர்களுடன் நடந்த மோதலில் 3 முஸ்லிம்கள் கொல்லப்பட்டதாக அந்தப் பகுதியைச் சேர்ந்த முஸ்லிம்கள் கூறியுள்ளனர்.

கடந்த இருவருடங்களாக கடும்போக்கு சிங்கள பௌத்தவாதிகள் முஸ்லிம் எதிர்ப்பு போராட்டங்களை நடத்திவருகின்றனர். வழமையாக பௌத்த பிக்குமார் இவற்றுக்கு தலைமை தாங்குவது வழக்கம்.

இவை அண்மைய வருடங்களில் மத வன்முறைகளாக உருவெடுத்துள்ளன.

30 தொடக்கம், 40 வயதுகளைச் சேர்ந்த 3 முஸ்லிம்கள் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களால் இறந்ததை அடுத்து முஸ்லிம்கள் மத்தியில் பெரும் அச்சநிலை உருவாகியுள்ளது.

ஒரு மசூதிக்கு அருகே முஸ்லிம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பியவாறு வந்த குழு ஒன்றுக்கும், முஸ்லிம்களுக்கும் நேற்று இரவு நடந்த மோதலின் போது இது நடந்துள்ளது.

குறைந்தபட்சம் மேலும் 7 பேராவது இதில் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் முதலில் தற்காலிகமாக வைக்கப்பட்டிருந்த பள்ளிவாசலில் இரத்தக்கறையை பிபிசி பார்த்துள்ளது.

அருகில் உள்ள தெருவில் பல இடங்களில் துப்பாக்கிக் குண்டு தாக்கிய அடையாளங்களும், இரத்தக்கறையும் காணப்பட்டன.

அதில் இருந்து சிறிது தூரத்தில் பல முஸ்லிம் வணிக நிலையங்கள் எரிக்கப்பட்டிருந்தன.

அரசாங்க ஆதரவுடன் பௌத்தர்கள் இனவாதத்தை பரப்புவதாக உள்ளூர்க்காரர் ஒருவர் தெரிவித்தார்.

ஆனால், இந்த சம்பவங்களுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பொறுமை காக்குமாறும் இலங்கை ஜனாதிபதி தனது டுவிட்டர் செய்தியில் கூறியுள்ளார்.

Exit mobile version