பிரேசிலில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் இத்தாலி அணியிடம் இங்கிலாந்து அணி படுதோல்வி அடைந்ததால், இங்கிலாந்து ரசிகர்கள் ஏற்படுத்திய பயங்கர வன்முறையால் லண்டன் நகரமே பெரும் பதட்டத்தில் உள்ளது.
நேற்று நடந்த உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் இத்தாலி -இங்கிலாந்து அணிகள் மோதின. கடந்த 28 ஆண்டுகளில் இங்கிலாந்து அணி, உலகக்கோப்பையின் முதல் போட்டியில் தோல்வியடைந்தது இல்லை.
ஆனால் இந்த போட்டியில் இங்கிலாந்து அணி, இத்தாலியிடம் 1-2 என்ற கோல்கணக்கில் தோல்வி அடைந்ததால், இங்கிலாந்து ரசிகர்களால் அதை ஜீரணிக்க முடியவில்லை.
இத்தாலி அணி வீரர் கேண்டிரா, தலையால் முட்டி அடித்த ஒரு கோல், ஆட்டத்தை திசைதிருப்பிவிட்டது. இந்த போட்டியை தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருந்த இங்கிலாந்து கால்பந்து ரசிகர்கள் தோல்விக்கு பின்னர் பெரும் கலவரத்தில் ஈடுபட்டனர்.
இத்தாலி நாட்டு கொடிகளை தீயிட்டு கொளுத்தினர். சாலையில் சென்று கொண்டிருக்கும் பேருந்துகளுக்கு தீவைத்தல், போன்ற வன்முறைகளில் ஈடுபட்டதால் பெரும் பதட்டம் ஏற்பட்டது.
உடனடியாக காவல்துறையினர் விரைந்துவந்து வன்முறையாளர்களை விரட்டியடித்து பதட்டத்தை தணித்தனர். 100க்கும் மேற்பட்ட வன்முறையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தங்கள் நாட்டு கொடியை எரித்ததற்கு இத்தாலி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. விளையாட்டில் வெற்றி தோல்வி சகஜம் என்றும், ஒரே ஒரு தோல்வியை ஏற்றுக்கொள்ளாமல் வன்முறையில் ஈடுபடுவது சரியல்ல என்றும் இத்தாலி தெரிவித்துள்ளது.