ரியோடி ஜெனிரோ: ஜெர்மனியுடனான போட்டியின்போது போர்ச்சுக்கல் வீரர் பெப் மோசமாக நடந்துகொண்ட விதத்தால் அவருக்கு அடுத்த போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. உலக கோப்பை கால்பந்து போட்டிகள் கடந்த 12ம்தேதி தொடங்கி அடுத்த மாதம் 13ம்தேதிவரை பிரேசிலில் நடைபெற்று வருகின்றன. குரூப் ஜி பிரிவில் இடம்பெற்றுள்ள ஜெர்மனி மற்றும் போர்ச்சுக்கல் அணிகள் நேற்று மோதின.
ஜெர்மனி ஆதிக்கம்
ஆட்டம் தொடங்கியது முதலே ஜெர்மனி அணி முன்னிலையில் இருந்தது. 12வது நிமிடத்திலேயே பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி முதல் கோலை பதிவு செய்தது ஜெர்மனி. அந்த அணியின் முன்னணி வீரர் தாமஸ் முல்லர் இந்த கோலை அடித்தார். 32வது நிமிடத்தில் மற்றொரு கோலையும் போட்டது ஜெர்மனி. இம்முறை மேட்ஸ் ஹும்மல்ஸ் கோல் அடித்தார்.
ஆத்திரத்தில் போர்ச்சுக்கல்
அடுத்தடுத்த கோல்களால் நிலைகுலைந்த போர்ச்சுக்கல் வீரர்கள் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்றனர். அப்போதுதான் யாரும் எதிர்பாராத அந்த சம்பவம் நடைபெற்றது. பெனால்டி கோலை அடித்த தாமஸ் முல்லரை குறிவைத்து ஆத்திரத்தை காண்பித்தார் போர்ச்சுக்கல் வீரர் பெப்.
முகத்தில் குத்து
தாமஸ் முல்லரும், பெப்பும் பந்தை விரட்டிக் கொண்டு ஓடினர். அப்போது உயர எழும்பி வந்த பந்தை தட்டிப்பறிக்க இருவரும் முட்டி மோதினர். அந்த சூழ்நிலையில், பெப் தனது கையால் தாமஸ் முல்லர் முகத்தில் அடித்தார். அது எதேர்ச்சையாக பட்டதா அல்லது வேண்டுமென்று அடிக்கப்பட்டதா என்பது பெப்புக்குதான் வெளிச்சம்.
சீன்போட்டாரா தாமஸ் முல்லர்?
இந்த அடிக்கு தாமஸ் முல்லர் கொஞ்சம் ஓவராக ரியாக்சன் கொடுத்துவிட்டார். தரையில் விழுந்த முல்லர், ஆ.. அம்மா.. என்று வாயை பிடித்தபடி முனகினார். இதை பார்த்ததும் பெப் வெறிகொண்ட வேங்கையாக மாறினார். ‘இந்த பையன் என்னமா சீன் போடுகிறான்’ என்ற எண்ணம் பெப்புக்கு ஆத்திரத்தை அதிகப்படுத்தியது.
ஆட்டு கிடா சண்டை
விழுந்து கிடந்த தாமஸ் முல்லரின் அருகே குனிந்து சென்று, தனது தலையால், முல்லரின் தலையை முட்டினார் பெப். மேலும், ஏதோ கேலியாக பேசினார். அவ்வளவுதான், வலியில் துடித்த தாமஸ் முல்லர் விருட்டென எழுந்து நின்று நெஞ்சை நிமித்தியபடி பெப்பிடம் வாக்குவாதம் செய்தார். இந்த மோசமான செய்கையால் அதிர்ச்சியைடந்த நடுவர், போர்ச்சுக்கல் வீரர் பெப்புக்கு சிகப்பு அட்டையை காண்பித்து உடனடியாக மைதானத்தை விட்டு வெளியேற கூறினார்.
அடுத்த மேட்சும் அம்பேலா?
முன்னதாக 28வது நிமிடத்தில் போர்ச்சுக்கல் வீரர் அல்மைடா கால் காயம் காரணமாக மைதானத்தைவிட்டு வெளியேறினார். 65வது நிமிடத்தில், பேபியோ குவன்ட்ரோ சதைப்பிடிப்பால் ஸ்ரக்சரில் வைத்து தூக்கி செல்லப்பட்டார். ரெட் கார்டு காட்டப்பட்ட பெப்வையும் சேர்த்தால் ஆக மொத்தம் 3 போர்ச்சுக்கல் வீரர்கள் வரும் ஞாயிறன்று அமெரிக்காவுக்கு எதிராக நடைபெறும் போட்டியில் விளையாட முடியாது.