மாணவன் ஒருவர் வாளால் வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தையடுத்து யாழ்.கோண்டாவில் மற்றும் உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த சுமார் 20 பேருக்கு மேல் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை உரும்பிராய்ப் பகுதியில் ஒரே வீதியில் உள்ள 7 வீடுகள் இனந்தெரியாத நபர்களினால் நேற்று இரவு அடித்து உடைக்கப்பட்டதுடன், ஒவ்வொரு வீட்டிலும் தலா 5 இலட்சம் ரூபா பெறுமதியுடைய பொருட்கள் சேதமாக்கப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த வீடுகளில் இருந்தவர்கள் வெளியேறியிருந்தமையினால் உயிர்ச் சேதங்கள் ஏற்படவில்லையெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து, அங்கு பொலிஸாரும் இராணுவத்தினரும் குவிக்கப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதுடன், இராணுவத்தினரால் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருவதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
உரும்பிராயினைச் சேர்ந்த கும்பலொன்று கோண்டாவிலைச் சேர்ந்த பாடசாலை மாணவன் ஒருவரை வாளால் வெட்டி படுகொலை செய்ததன் எதிரொலியாகவே மேற்படி வீடுகள் உடைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை மேற்படிச் சம்பவத்தினையடுத்து இரு குழுக்களையும் சேர்ந்த சுமார் 20 பேரை இன்று இரவு வரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.அதுமட்டுமின்றி இந்த வன்முறைச்சம்பவத்தில் ஈடுபட்ட ஏனையவர்களை பொலிஸாரும் இராணுவத்தினரும் தேடிவருகின்றனர்.
அத்தோடு உரும்பிராய் மற்றும் கோண்டாவில் பகுதியில் நேற்று இரவு முழுவதும் இன்று இரவும் இராணுவத்தினரும் பொலிஸாரும் குவிக்கப்பட்டு பதற்றமான சூழல் நிலவிவருகின்றது.
யாழ்.கோண்டாவில் பகுதி நாராயணன் கோவிலடியில் உள்ள வீட்டிற்குள் புகுந்த இளைஞர் குழுவால் மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டுச் சம்பவத்தில் யாழ்.சென் ஜோன் கல்லூரியில் கலைப்பிரிவில் கல்வி கற்று வந்த மாணவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே நேற்று மாலை துடிதுடித்து உயிரிழந்தார்.
மேலும் உயிரிழந்தவரின் சகோதரியும், சகோதரனும் பலத்த காயங்களுக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேற்படி வாள்வெட்டுச் சம்பவம் தொடர்பாக உரும்பிராய் கிழக்கினைச் சேர்ந்த எம்.நிரோஜன் (வயது 23) என்பவரை கோப்பாய் பொலிஸார் நேற்று இரவு யாழ்.போதனாவைத்தியசாலையில் வைத்து கைது செய்து செய்திருந்தனர்.
கோண்டாவில் நாராயணன் கோவிலடியில் நேற்று திங்கட்கிழமை மாலை 5 மணியளவில் உரும்பிராய் கிழக்குப் பகுதியினைச் சேர்ந்த இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் சாகசம் செய்த காரணத்தினால் அப்பகுதி இளைஞர்களுக்கும், உரும்பிராய் பகுதி இளைஞர்களுக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
இச் சம்பவத்தில் உரும்பிராய் பகுதியினைச் சேர்ந்த டி.ரொபின் ராஜ் (வயது -20), எம்.நிரோஜன் (வயது- 23) என்ற இரு இளைஞர்கள் காயங்களுக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில் சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
பாதுகாப்புக்காக அழைக்கப்பட் இராணுவத்தினர்இதன் தொடர்ச்சியாக உரும்பிராயில் இருந்து வந்த இளைஞர்கள் குழு, கோண்டாவில் நாராயணன் கோவில் வீட்டிற்குள் புகுந்து சரமாரியாக வாள் வெட்டு நடத்தியது. இதில் மேற்படி மாணவர் உயிரிழந்தார்.
இச் சம்பவத்தில் ரவீந்திரன் சுகிர்தன் (வயது -19) என்ற சென்.ஜோன்ஸ் கல்லூரி உயர்தர கலைப்பிரிவு மாணவன் கழுத்தில் வாள்வெட்டிற்கு இலக்காகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும் அங்கு வந்த இளைஞர்கள் குழு நடத்திய வாள்வெட்டில் உயிரிழந்தவரின் சகோதரியான ரவீந்திரன் இலக்கியா (வயது 26), ரவீந்திரன்.செந்தூரன் (வயது 23) என்பவர்களும் பலத்த காயங்களுக்கு உள்ளாக்கப்பட்டிருந்தனர். இவர்கள் தற்போது யாழ்.போதனாவைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதன் பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.
இதன்படி மேற்படி வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புபட்டார் என்ற சந்தேகத்தில் யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த உரும்பிராய் கிழக்குப் பகுதியினைச் சேர்ந்த எம்.நிரோஜன் (வயது 23) என்பவர் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தார்.
மேலும், யாழ்.போதனாவைத்தியசாலையிலும் பொலிஸார் பாதுகாப்பு பணிக்கென குவிக்கப்பட்டிருந்ததோடு இராணுவப்புலனாய்வுப்பிரிவினரின் பிரசன்னமும் நேற்று இரவு தொடக்கம் இன்று வரை அதிகரித்து காணப்பட்டது.
கொலையான இளைஞன் வெட்டு வாங்கிய வீட்டு நுளைவாயில்
மேற்படி வாள் வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களின் நடமாட்டம் யாழ்.போதனாவைத்தியசாலையில் அதிகரித்து காணப்பட்டமையே பாதுகாப்பு தரப்பினரின் பிரசன்னத்திற்கு காரணம் என்று கூறப்படுகின்றது.
யாழ்.மாவட்டத்தில் வாள் வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் ஆவா, டில்லு போன்ற பல குழுக்கள் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் வாள்வெட்டுச்சம்பவங்கள் தொடர்ந்து இடம்பெற்றுவருகின்றமை மக்கள் மத்தியில் அச்சயுணர்வை ஏற்படுத்தியுள்ளது.
இதேவேளை உரும்பிராய் மற்றும் கோண்டாவில் பகுதியனைச்சேர்ந்த வர்கள் பல தமது குடும்பங்களுடன் வேறு இடங்களில் சென்று தங்கியுள்ளனர்.
உரும்பிராயில் 7 வீடுகள் அடித்து உடைக்கப்பட்டதையடுத்து அச்சம் காரணமாக அந்தக்குடும்பத்தினர் அங்கிருந்து வெளியேறி மறைந்து வாழ்ந்து வருகின்றனர்.
கோண்டாவில் இளைஞர்களால் நொருக்கப்பட்ட வீட்டு கேற்
கோண்டாவில் இளைஞர்களால் நொருக்கப்பட்ட வீட்டு கேற்
மாணவன் ஒருவன் வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பலரை பொலிஸார் கைது செய்துள்ளதாக கூறப்படுகின்றபோதும் மேற்படிச் சம்பவத்துடன் தொடர்புடைய குழுக்கள் இரண்டும் பொது இடம் ஒன்றில் குழு மோதலுக்கு தயாரான நிலையில் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
சினிமாப் பாணியில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுவரும் வாள்வெட்டுச் சம்பவங்களும் குழு மோதல்களும் மக்கள் மத்தியில் பரபரப்பையும் அச்சயுணர்வையும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை தமிழரின் இளைய தலைமுறை திட்டமிட்டு அழிக்கப்பட்டு வருவதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.