விடுதலைப் புலிகள் பயன்படுத்தியது போன்ற சிறிய ரக இலகு விமானங்களை இலங்கை விமானப்படையும் பயன்படுத்தி, வான்புலி விமானங்களை வானில் எதிர்கொள்ளும் திட்டம் அப்ரூவலுக்காக விமானப்படை தலைமையகத்துக்கு போனது என்று கடந்த அத்தியாயத்தை முடித்திருந்தோம்.
அது தொடர்பாக நடந்த கூட்டத்தில், அந்த ஐடியாவுக்கு பலத்த எதிர்ப்பு விமானப்படை விமானிகளிடம் இருந்தே வந்தது.
விமானிகளின் பிரதான ஆக்ஜெக்ஷன் என்னவென்றால், இதை வேண்டுமானால் பகல் வெளிச்சத்தில் முயற்சிக்கலாம். ஆனால், இருளில் இது சாத்தியமில்லை.
முதலாம் உலக யுத்தத்தின்போது சிறிய விமானங்களை வைத்து வானில் நடந்த dogfightsகூட பகல் வெளிச்சங்களில் நடந்தவைதான். இரவு நேரங்களில் எந்த dogfights-ம் நடந்ததில்லை. காரணம், எதிரி விமானத்தை சுடுவதென்றால், இந்த விமானத்தில் உள்ள விமானியால் எதிரி விமானத்தை கண்ணால் பார்க்க கூடியதாக இருக்க வேண்டும்.
தற்போதுள்ள போர் விமானங்களின் காக்பிட்டுகளில், 3-டி ரேடார்கள் உள்ளன. எதிரி விமானத்தின் லொகேஷனை அவை தெளிவாக காட்டும். ஆனால், பழைய சிறிய விமானங்களில் உள்ளவை 2-டி ரேடார்கள். இந்த வகை ரேடார்களில் எதிரி விமானம் பறக்கும் அல்டிடியூட் (உயரம்) பற்றிய தரவுகள் கிடையாது.
அந்த ரேடார் லொகேஷனை வைத்து எதிரி விமானத்தை நெருங்க முயன்றால், அந்த விமானத்தைவிட பல அடி மேலேயே, கீழேயோ பொய்விடும் சாத்தியம் உள்ளது. இதனால்தான் எதிரி விமானம், விமானியின் கண்களுக்கு தெளிவாக தெரிவது அவசியம்.
இறுதியில் இந்த திட்டமும் கைவிடப்பட, வான்புலிகளின் விமானங்களை சிறிய விமானங்களில் பறந்து சென்று தாக்கி வீழ்த்தும் யோசனை கைவிடப்பட்டது. அத்துடன், வான்புலிகளை தாக்கும் ஆபரேஷனில் இருந்து இலங்கை விமானப்படை ஒதுக்கி வைக்கப்பட்டது.
முழு பொறுப்பும் தரைப் படையினருக்கே கொடுக்கப்பட்டது.
தரையில் இருந்து வான்புலி விமானங்களை சுட்டு வீழ்த்த ஏற்கனவே இந்தியா சில ஆக்-ஆக் துப்பாக்கிகளை (ack-ack gun) கொடுத்திருந்தது (மேலே போட்டோ பார்க்கவும்).
ராணுவ பாஷையில் ஆக்-ஆக் துப்பாக்கிகளை ‘ட்ரிபிள் ஏ’ (AAA – triple-A) துப்பாக்கிகள் என்பார்கள். Anti-Aircraft Artillery என்பதன் சுருக்கம் அது.
2-ம் உலக யுத்த காலத்தின் ராணுவ ரேடியோ ட்ரான்ஸ்மிஷன்களில், 3 A சொல்லுவதை சுருக்கி 2 A-யாக (AA) சொல்லுவார்கள்.
சர்வதேச ரேடியோ ஏவியேஷன் தொடர்பாடலில் ‘A’ என்பதை Alpha என்பார்கள். ஆனால் Alpha-Alpha என்று சொல்வதை பிரிட்டிஷ் விமானப்படையினர் ‘Ack’ என்று உச்சரிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார்கள்.
அதையடுத்து AA என்பதை ரேடியோ ட்ரான்ஸ்மிஷன்களில் சொல்லும்போது ack-ack என உச்சரிக்கப்பட தொடங்கியது. காலப்போக்கில் அந்த துப்பாக்கிகளுக்கே ack-ack gun என்ற பெயர் நிலைத்து விட்டது.
இந்தியாவால் கொடுக்கப்பட்ட இந்த ack-ack துப்பாக்கிகளை வைத்து, தரையில் இருந்து வான்புலிகளின் விமானங்களை வீழ்த்துவது என்ற திட்டமே இலங்கை ராணுவத்தால் இறுதி செய்யப்பட்டு, அதற்கான முன்னேற்பாடுகள் தொடங்கின.
வான்புலி விமானங்கள் வானில் பறக்க தொடங்கியபோது, இந்திய பாதுகாப்பு அமைச்சகம் அதை தமது நாட்டு தேசிய பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாகவே எடுத்துக் கொண்டது. எனவே, அந்த விமானங்கள் வீழ்த்தப்பட வேண்டும் என்பதையே இந்தியாவும் விரும்பியது.
சுருக்கமாக சொன்னால், 2007-ம் ஆண்டு மார்ச் 25-ம் தேதி, முதலாவது வான்புலி விமானம் பறந்து வானில் இருந்து குண்டு வீசிய கணத்தில், இந்தியா, விடுதலைப் புலிகளுக்கு உதவக்கூடிய அனைத்து சாத்தியங்களும் அற்றுப் போயின.
இந்த யுத்தத்தில் இந்தியாவுக்கு பல முகங்கள் இருந்தன. வெளியே தெரிந்த முகத்தைவிட, தெரியாத முகங்கள் அதிகம்
சில வருடங்களுக்கு முன் விடுதலைப் புலிகள் யாழ்ப்பாணத்தை நோக்கி படையெடுத்துச் சென்றபோது, ‘இதற்கு மேல் ஒரு அடி எடுத்து வைக்கக்கூடாது’ என வன்னியில் இருந்த விடுதலைப் புலிகள் அலுவலக பேக்ஸ் எந்திரத்தில், டில்லியில் இருந்து பேக்ஸ் வந்தது.டில்லியில் இருந்து கிளிநொச்சிக்கு ‘ரா’ அனுப்பிய பேக்ஸ் அது! உடனே யுத்தமே மாறியது!
யாழ்ப்பாணத்தை நோக்கி கருணா அம்மான் தலைமையில் சாவகச்சேரி வரை சென்றுவிட்ட விடுதலைப் புலிகள் படைப்பிரிவை உடனே திரும்பி வருமாறு கட்டளையிட்டார், பிரபாகரன்!
விடுதலைப் புலிகளின் அந்த ஆபரேஷனையே ‘ரா’ அனுப்பிய ஒரு ஒற்றை பேக்ஸ் தடுத்து நிறுத்தியது!
வெளியே தெரியாமல், இந்திய உளவுத்துறையும், விடுதலைப் புலிகளும், வான்புலி விமானம் பறக்க தொடங்கும்வரை ஒருவித ‘பூனை-எலி’ விளையாட்டு விளையாடினார்கள்.
சில வேளைகளில் நெருங்கி வருவார்கள், சில வேளைகளில் துரத்துவார்கள். நாளையே மீண்டும் நெருங்கி வர சான்ஸ் உள்ளது என இரு தரப்புக்கும் தெரியும். இதனால், ஆளையாள் முறித்துக் கொண்டதில்லை.
ஆனால், வான்புலி விமானம் முதலில் பறந்தபோது, இதெல்லாம் தலைகீழாக மாறியது.
விடுதலைப் புலிகளிடம் வான்படை பிரிவு (வான்புலிகள்) இருப்பது இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு இன்று இல்லாவிட்டாலும், ஏதோ ஒரு காலத்தில் அச்சுறுத்தலாக அமையும் என டில்லி முடிவு செய்தது.
வான்புலி விமானங்களை வீழ்த்துவதற்கு தரையில் இருந்து தாக்கி சுட்டு வீழ்த்துவதே ஒரே வழி என இலங்கை ராணுவம் எடுத்த முடிவு, கொழும்புவில் உள்ள இந்திய தூதரகம் மூலம், டில்லிக்கு தெரியவந்தது.
இலங்கைக்கு ஏற்கனவே கொடுக்கப்பட்டதை விட மேலதிக எண்ணிக்கையில் ack-ack துப்பாக்கிகளை கொடுக்க முன்வந்தது, டில்லி!
பின்னாட்களில், அந்த ack-ack துப்பாக்கிகள்தான், வான்புலி விமானங்களை சுட்டு வீழ்த்தின என்பதை அடுத்த அத்தியாயத்தில் படிக்கப் போகிறீர்கள்!
(தொடரும்)