இந்திய இலங்கை ஒப்பந்தம் பற்றிய விபரங்கள் தெரியவந்தபோது, இந்தியாவில் ஒருவிதமான உணர்வு இருந்தது. இலங்கையிலுள்ள தமிழ் மக்களிடம் ஒருவித உணர்வு இருந்தது, சிங்கள மக்களிடம் வேறுவித உணர்வு இருந்தது.
இலங்கைத் தமிழர்களைப் பொறுத்தவரை அவர்கள் இந்தியா செய்த முயற்சிகளை வரவேற்கவே செய்தார்கள். இந்தியா மூலமாக இலங்கையின் இனப்பிரச்சனை தீரப்போகின்றது என்று நம்பினார்கள்.
இதற்கு முக்கிய காரணம், ஒப்பந்தம் ஏற்படுவதற்கு முன் இலங்கையின் தமிழ்ப் பகுதிகளில் இலங்கை ராணுவம் நடத்தியிருந்த மோசமான தாக்குதல்களும், கடுமையான பொருளாதாரத் தடையும் தமிழ் மக்களை பெரிதும் சோர்ந்து போக வைத்திருந்தது.
அப்படியான நேரத்தில் இந்தியா தலையிடுவதால், இனிமேல் இலங்கை ராணுவத்தினரின் தாக்குதல் இருக்காது என்றும், அத்தியாவசிய பொருட்களில் தடை ஏற்படாமல் இந்தியர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்றும் நம்பியதால் ஆதரவு உணர்வு அதிகமாக இருந்தது.
இலங்கையிலுள்ள சிங்கள மக்களில் பெரும்பான்மையானவர்களின் உணர்வு இதற்குத் தலைகீழாக இருந்தது.
இந்த ஒப்பந்தம் பற்றிய முழு விபரங்களும் சிங்கள பகுதிகளில் தெரிய வந்தபோது அதற்கு எதிர்ப்பு மிகவும் அதிகமாக இருந்தது. ஜே.ஆர். ஜெயவர்தனேவின் அமைச்சரவையில் இருந்த அமைச்சர்கள் பலரே தனிப்பட்ட முறையில் ஒப்பந்தத்தை எதிர்த்தார்கள்.
எதிர்த்தது மாத்திரமில்லாமல், அவர்களே சிங்கள மக்களைத் தூண்டிவிடவும் செய்தார்கள்.
கொழும்பு நகரில் வன்முறை வெடித்தது. 50க்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டார்கள். பொதுச் சொத்துக்கள் நாசமாக்கப்பட்டன. இலங்கை போக்குவரத்து கழகத்தின் சொத்துக்கள் (வாகனங்கள்) மாத்திரம் 140 மில்லியன் அமெரிக்க டாலர் பெறுமதியில் சேதப்படுத்தப்பட்டன.
கொழும்பு நகரில் இப்படி வன்முறை நடவடிக்கைகள் நடைபெற்று கொண்டிருந்த காரணத்தால், இலங்கை – இந்திய ஒப்பந்தத்தைச் செய்துவிட்டு, இந்தியா திரும்புவதற்கு கொழும்பு வீதிகளைப் பயன்படுத்த முடியவில்லை பிரதமர் ராஜிவ் காந்தியால்.
கொழும்பு நகரிலிருந்து கட்டுநாயக விமான நிலையத்துக்கு ராஜிவ் காந்தி ஹெலிகாப்டர் மூலம் செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது.
கட்டுநாயகவில், இந்தியப் பிரதமர் இந்தியாவுக்குச் செல்லுமுன் இலங்கைப் பாதுகாப்புப் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்ளும் வைபவம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அந்த வைபவத்தில் இந்தியப் பிரதமர் நடந்து சென்றபோது பாதுகாப்புப் படையைச் சேர்ந்த ஒருவர் தனது துப்பாக்கியின் பின்புறத்தால் ராஜிவ் காந்தியின் தலையில் தாக்க முயன்றார்.
இந்தியப் பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகள் கூட தடுக்க முடியாதபடி துரிதமாக நடந்து விட்ட இந்த தாக்குதல் முயற்சியில் இருந்து ராஜிவ் காந்தி தப்பித்துக் கொண்டதன் காரணம் அவர் ஒரு விமானியாக இருந்ததால் இயற்கையிலேயே இருக்கும் எச்சரிக்கை உணர்வும் ரிஃப்ளெக்ஷனுமாக இருக்கலாம்.
தாக்குதல் முயற்சியைக் கண்டவுடன் ராஜிவ் காந்தி துரிதமாக நகர்ந்துவிட துப்பாக்கியின் பின்புறம் அவரது தலையில் படாமல் தோளில் பட்டது.
தாக்கியவரின் பெயர் விஜித ரோஹன.
விஜித ரோஹன கைது செய்யப்பட்ட நிலையில் அவரைப் பேட்டிகண்ட கார்ல் முல்லர் அந்தப் பேட்டியை சன்டே டைம்ஸ் பத்திரிகையில் பிரசுரித்திருந்தார். ராஜிவ் காந்தியை ஏன் தாக்கினீர்கள் என்று விஜித ரோஹனவிடம் கேட்கப்பட்டபோது அவர் கொடுத்த பதிலைப் பாருங்கள்.
“திரிகோணமலை ராணுவ முகாமில் வைத்து எங்களுக்குக் கூறப்பட்டிருந்தது என்னவென்றால், ராஜிவ் காந்தி இலங்கையின் முகத்தில் அறைந்துவிட்டார் என்றும், இந்தியா எங்களது (இலங்கையின்) எதிரி. தீவிரவாதிகளுக்கு (விடுதலை இயக்கங்களுக்கு) ஆதரவு கொடுக்கும் நாடு என்றும் எங்களுக்கு கூறப்பட்டிருந்தது.
அப்படியிருக்கும்போது பின்பு கொழும்பில் வைத்து அதே எதிரிக்கு பளபளப்பான வரவேற்புக் கொடுப்பதை யாரால் சகித்துக்கொள்ள முடியும்? எதிரிக்கு அடையாள அணிவகுப்பு மரியாதை செய்ய வேண்டும் என்று எங்களுக்கு உத்தரவு வந்தபோது எங்களில் பலர் கொதித்துக் கொண்டிருந்தோம்.
எமது நாட்டின் எதிரிக்கு எனது கையால் தண்டனை கொடுக்க ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. சரியாகப் பயன்படுத்திக் கொண்டேன், தாக்கினேன்” என்றார் விஜித ரோஹன தனது பேட்டியில்.
கிட்டத்தட்ட இதே மனநிலைதான் பெரும்பாலான சிங்கள மக்களிடையேயும் இருந்தது.
இந்தியப் பிரதமர் ராஜிவ் காந்தி கொழும்பில் தாக்கப்பட்டார் என்ற செய்தி புதுடில்லியை அடைந்தவுடன் மிகப்பெரிய பூகம்பமே ஏற்பட்டது. இலங்கைக்கு ராணுவரீதியாக பாடம் கற்பிக்கவேண்டும் என்று அரசு உயர்மட்டத்தில் இருந்தவர்களே வெளிப்படையாகக் கூறினார்கள்.
இந்தியாவைப் பொறுத்தவரை நாட்டின் முதல் குடிமகன் இந்திய ஜனாதிபதி. அவர் பிரதமரை வரவேற்கப் போவது மரபு இல்லை. ஆனால் தாக்குதல் செய்தி தெரியவந்தபோது மரபு பற்றியெல்லாம் யோசிக்கத் தயாராக இல்லை இந்திய ஜனாதிபதி ஆர். வெங்கட்ராமன்.
தாக்குதலுக்கு உட்பட்டு வரும் இந்திய பிரதமரை வரவேற்க டெல்லி விமானநிலையம் சென்றார் அவர்.
ராஜிவ் காந்தியை ஏற்றிவந்த விமானம் டெல்லியில் தரையிறங்கியபோது கடும் கொந்தளிப்பான நிலை காணப்பட்டது.
இலங்கை – இந்திய ஒப்பந்தம் இனிமேல் அவ்வளவுதான் என்று கூறியவர்களும், இலங்கை மீது படையெடுப்பை இந்தியா உடனடியாக நடாத்தும் என்று ஊகித்தவர்களும் இருந்தார்கள்.
ஆனால் விமானம் தரையிறங்கிய பின்னர் தனது அரசியல் ஆலோசகர்களுடன் ஆலோசித்த இந்தியப் பிரதமர் ராஜிவ் காந்தி இந்த விஷயத்தைப் பெரிதுபடுத்தாமல் விட்டுவிட விரும்புகிறார் என்று கூறப்பட்டது.
இலங்கை – இந்திய ஒப்பந்தம் செய்துவிட்டு இந்தியா திரும்பிய பின்னரும் ராஜிவ் காந்தி, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை டெல்லியில் மீண்டும் ஒருமுறை சந்தித்தார்.
அந்தச் சந்திப்பின்போது, “எமது (விடுதலைப்புலிகள்) ஆயுதங்களை ஒப்படைப்பது இந்தச் சூழ்நிலையில் அவ்வளவு நல்ல யோசனையாக இருக்காது” என்பது புலிகளின் தரப்பால் தெரிவிக்கப்பட்டது.
“இந்தியப் பிரதமருக்கான அணிவகுப்பு மரியாதையின்போதே இலங்கை ராணுவத்தைச் சேர்ந்த ஒருவரால் தாக்கப்படுகிறார். அப்படியான ராணுவத்தை நம்பி எப்படி ஆயுதங்களை ஒப்படைப்பது?” என்று கேட்டார்கள் புலிகள் தரப்பினர்.
அதற்கு ராஜிவ் காந்தி, “என்மீது நடந்த தாக்குதல் பற்றி நான் கவலைப்படவில்லை. இந்த ஒப்பந்தம் இலங்கையில் தமிழ் மக்களுக்கு சில உரிமைகளைப் பெற்றுத்தரும். தமிழ் மக்களின் பாதுகாப்புக்கும், விடுதலை இயக்கங்களின் பாதுகாப்புக்கும் இந்தியா உத்தரவாதம் கொடுக்கும் என்று இன்னமும் நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.
இதற்கு பிரபாகரன், “போராட்டத்துக்காக தமது படிப்பு, எதிர்காலம் அனைத்தையும் விட்டுவிட்டு விடுதலைப் புலிகள் இயக்கத்தில் சேர்ந்து ஆயுதம் ஏந்திய ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு நான் (பிரபாகரன்) என்ன பதில் சொல்வது? அவர்களது எதிர்காலத்துக்கு என்ன உத்தரவாதம்?” என்று கேட்டார்.
“விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் ஆயுதங்களை ஒப்படைத்த பின்னர் அவர்களது நல்வாழ்வுக்காக இந்தியா விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு 500 மில்லியன் இந்திய ரூபா பணம் கொடுக்கத் தயாராக இருக்கிறது” என்றும் பிரபாகரனிடம் தெரிவித்தார் பிரதமர் ராஜிவ் காந்தி.
இந்த உறுதிமொழிகள் பிரபாகரனை முழுமையாக இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ள வைக்கவில்லை.
இதற்கிடையே இந்திய அமைதிப்படை இலங்கையில் போய் இறங்கிய நிலையில் பிரபாகரனையும், அவருடன் அழைத்து வரப்பட்டவர்களையும் தொடர்ந்தும் டெல்லியிலேயே வைத்திருந்தது மத்திய அரசு. அவர்களை எப்போது யாழ்ப்பாணத்துக்குத் திருப்பி அனுப்புவது என்பது இன்னமும் முடிவு செய்யப்படவில்லை என்று கூறத் தொடங்கினார்கள் டெல்லி அதிகாரிகள்.
இதற்கிடையே, “பிரபாகரனும் மற்றவர்களும் எதற்காக டில்லியிலுள்ள அசோகா ஹோட்டலில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருக்கிறார்கள்” என்ற கேள்வி யாழ்ப்பாணத்தில் எழுந்தது.
இந்திய இலங்கை ஒப்பந்தம் செய்து முடிந்து இலங்கை மண்ணில் வந்திறங்கிய இந்திய அமைதிப்படை, யாழ்ப்பாணத்தில் காலடி வைத்த தினத்திலிருந்து தமிழ் மக்களின் வரவேற்பைத்தான் பார்த்துக் கொண்டிருந்தார்கள் – சூழ்நிலை ஒரு கடுமையான யு-டர்ன் அடிக்கும்வரை!
சூழ்நிலை திரும்பியது ஜுலை மாதம் 31-ம் தேதி. (தொடரும்)