சென்னையில் பிரபாகரனின் சில மணி நேரம்
ஜுலை 31-ம் தேதியன்று இந்திய அமைதிப் படையினரின் வாகனங்கள் யாழ்ப்பாணத்தில் நகர முடியாதபடி விடுதலைப் புலிகள் ஒரு ஆர்ப்பாட்டத்துக்கு ஏற்பாடு செய்தார்கள். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் வீதிகளில் அமர்ந்து கொண்டார்கள். விடுதலைப் புலிகளின் தலைவரையும் அவருடன் சென்றவர்களையும் திரும்பவும் யாழ்ப்பாணத்துக்கு அனுப்புங்கள் என்று கோஷமிடத் தொடங்கினார்கள்.
இந்திய அமைதிப் படையின் தலைமைப் பொறுப்பை ஏற்றிருந்த மேஜர் ஜெனரல் ஹகிரட் சிங் பயணம் செய்து கொண்டிருந்த காரும் வழிமறிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அன்று மாலையே விடுதலைப் புலிகள் இயக்கத்தின் யாழ் பிராந்தியத் தலைவர் குமரப்பா இந்திய அமைதிப்படையின் தளபதியைச் சந்தித்தார். விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவரை யாழ்ப்பாணத்துக்கு கொண்டுவந்து சேர்க்காதவரை எதுவுமே செய்யமுடியாது என்று தெரிவித்தார்.
premium-idஇந்திய அமைதிப்படையின் தளபதி பின்னாட்களில் கொடுத்த பேட்டியொன்றில், குமரப்பாவின் சந்திப்புப் பற்றி இப்படிக் குறிப்பிடுகிறார்.
“அவர் (குமரப்பா) நட்பு ரீதியாகப் பழகக் கூடியவர். மரியாதையாகப் பேசத்தெரிந்தவர். அன்றைய சந்திப்பின்போதும் மிகவும் மரியாதையுடனே பேசினார். ஆனால் மிக உறுதியாகப் பேசினார்.
‘நீங்கள் (இந்திய அமைதிப்படை) இங்கே வந்திருப்பது எங்களிடமிருந்து ஆயுதங்களை அகற்றுவதற்கு என்பது எங்களுக்கு நன்றாகவே தெரியும். ஆனால் ஜெனரல், எங்களிடமிருந்து ஆயுதங்களை பலவந்தமாக அகற்ற முயன்றீர்கள் என்றால் நாங்கள் உங்களைத் திரும்பித் தாக்குவோம்.
நாங்கள் ஆயுதம் தூக்கினால் இந்திய அமைதிப்படையின் ஆட்களைக் கொல்லமுடியும் என்பது உங்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கும். நாங்கள் எங்களைத் தமிழீழத்துக்காக அர்ப்பணித்துக் கொண்டவர்கள். தமிழீழத்துக்காக உயிரையும் விடத் தயாராக இருப்பவர்கள்.
எங்கள் தலைவர் இங்கே திரும்பி வந்து எங்களிடமுள்ள ஆயுதங்களை ஒப்படையுங்கள் என்று கூறும்வரை எங்களிடமிருந்து உங்களால் ஆயுதங்களை அகற்றவே முடியாது.
உங்களைப் போலவே விடுதலைப்புலிகளும் ஒரு ராணுவம்தான். தளபதியின் கட்டளைக்கு மாத்திரமே கீழ்ப்படிவோம். இந்தத் தகவலை டில்லிக்கு அனுப்பி, எங்கள் தலைவரை இங்கு அழைத்து வாருங்கள். அதுவரை எதுவுமே இங்கே நடக்காது என்றார் குமரப்பா.”
இந்தக் கூற்றிலிருந்த முக்கியத்துவம் இந்திய அமைதிப்படையின் தளபதிக்கு நன்றாகவே புரிந்திருக்க வேண்டும். அவர் புதுடில்லிக்குத் தகவல் அனுப்பினார்-
“பிரபாகரனை யாழ்ப்பாணம் அனுப்பாதவரை இங்கே எதுவும் செய்ய முடியாது”
இது நடைபெற்று இரு தினங்களில் இந்தியப் பிரதமர் ராஜிவ் காந்தியிடமிருந்து, இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தனேவுக்கு எழுதப்பட்ட கடிதம் ஒன்று இந்தியத் தூதுவர் டிக்சித் மூலமாக கொழும்புவந்து சேர்ந்தது.
இதோ, கடிதத்திலிருந்த வாசகங்கள்:
விடுதலைப்புலிகளின் தலைவர் இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டு விட்டார். ஆயுதங்களை ஒப்படைக்கவும் சம்மதித்து விட்டார். ஆயுத ஒப்படைப்பை அவர் நேரடியாக யாழ்ப்பாணத்தில் நின்றே செய்ய விரும்புகிறார்.
இந்த நடைமுறைகள் சுமுகமாக நடைபெறுவதற்காக இன்று மாலை, ஆகஸ்ட் 2-ம் தேதி விடுதலைப் புலிகளின் தலைவரை விமானம் மூலம் யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி வைக்கிறோம்.
பிரபாகரன் டில்லியில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு அனுப்பிவைக்கப்பட்ட தினத்தன்று என்ன நடந்தது?
அன்றைய தினம் பற்றி இந்திய அமைதிப்படையின் முழுமையான ஆபரேஷனுக்கு தலைவராக இருந்த லெப்டினென்ட் ஜெனரல் திபிந்தர் சிங், இந்திய அமைதிப்படை பற்றி பின்னாட்களில் எழுதிய புத்தகத்தில் இப்படி எழுதுகிறார் (47, 48-ம் பக்கங்கள்):
நான் சென்னையில் இருந்தேன். டெல்லியில் இருந்து யாழ்ப்பாணத்துக்குச் செல்லும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் சென்னை வழியாகச் செல்லப் போவதாகத் தகவல் கிடைத்தது. சென்னையில் அவரைச் சந்திக்க விரும்பினேன்.
அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அவர் இந்திய ராணுவத்தின் தெற்கு பிராந்திய தலைமையத்தில் உள்ள விருந்தினர் அறையில் என்னைச் சந்திப்பதாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
அவருடன் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவின் தலைவர் யோகியும், வேறு இரு உறுப்பினர்களும் வந்தார்கள். அறைக்குள் நுழையும் முன் வெளியே வராந்தாவில் தனது செருப்புக்களைக் கழட்டிவிட்டு (மரியாதை நிமித்தம்) உள்ளே வந்தார் பிரபாகரன்.
அவர் டெல்லியில் இருந்தபோது வீட்டுக் காவலில் இருந்தாரா இல்லையா என்பது பற்றிய சர்ச்சை இருந்தது. நாங்கள் இருவருமே அதுபற்றிப் பேசவில்லை.
ஆனால், “இனிமேல் எக்காரணம் கொண்டும் இந்திய வெளியுறவு அமைச்சையோ, இந்திய உளவுத்துறை ‘ரா’வையோ நான் நம்பமாட்டேன்” என்று அவர் வெளிப்படையாகவே என்னிடம் தெரிவித்தார்.
ஆயுதங்களை அகற்றுவது என்ற விஷயம் வந்தபோது, நான் மிகவும் கவனமாக ‘சரணடைவது’ என்ற சொல்லை உபயோகிக்காதபடி பார்த்துக் கொண்டேன்.
“நான் யாழ்ப்பாணம் சென்று எமது இயக்க தளபதிகளுடன் கலந்தாலோசித்த பின்னர் ஆயுத அகற்றல் நடைமுறையை வைத்துக் கொள்ளலாம்” என்று பிரபாகரன் தெரிவித்தார்.
“ஆயுதங்களை இந்திய ராணுவத்திடம் ஒப்படைக்கும் நிலை ஏற்பட்டால், விடுதலைப் புலிகள் இயக்கத்திடம் இருக்கும் ஆயுதங்களிலேயே மிகப் பெரிய ஆயுதத்தை, நானே எனது கையால் உங்களிடம் (ஜெனரல் திபிந்தர் சிங்) ஒப்படைப்பேன். போதுமா?” என்று அவர் கூறினார்.
இந்திய ராணுவ தெற்கு பிராந்திய தலைமையகம் வந்துள்ள அவருக்கும், இவருடன் வந்தவர்களுக்கும் ஏதாவது பானம் கொடுத்து உபசரிக்க விரும்பினேன்.
“நீங்களோ உங்களுடன் வந்தவர்களோ மதுபானம் அருந்த விரும்பினால் இங்கே ஏற்பாடு செய்யலாம். ஆனால், மன்னிக்கவும் சிகரட் ஏற்பாடு செய்ய முடியாது” என்று நான் கூறியபோது, அவர் சிரித்தபடி “மதுபானம் அருந்துவதும் புகைப்பதும் விடுதலைப் புலிகளின் விதிமுறைகளுக்கு முரணானது” என்றார்.
அதன்பின் சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் செல்வதற்காக அவரும் மற்றவர்களும் விமான தளத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
ஆகஸ்ட் 2ம் தேதி விடுதலைப் புலிகளின் தலைவரும் மற்றயவர்களும் சென்னையிலிருந்து பலாலிக்கு விமானம் மூலம் அனுப்பப்பட்டு, அங்கிருந்து இந்திய அமைதிப் படையின் கவச வாகனங்கள் மூலம் சுதுமலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். ஜுலை 24ம் தேதி சுதுமலையில் எந்த இடத்திலிருந்து அவர் அழைத்துச் செல்லப்பட்டாரோ, அதே இடத்தில் அவருக்காகக் காத்திருந்த விடுதலைப் புலிகளுடன் சேர்ந்து கொண்டார்.
வந்து இறங்கிய அதே இடத்தில், சுதுமலை அம்மன் கோவில் திடலில் அடுத்த இரு தினங்களில் விடுதலைப் புலிகளின் தலைவரின் பிரமாண்டமான பொதுக்கூட்டம் ஆகஸ்ட் 4-ம் தேதி நடைபெற்றது. அவர் கலந்து கொண்ட முதலாவது பொதுக்கூட்டம் அதுதான்.
“நாங்கள் இந்தியாவை நேசிக்கிறோம்” என்ற பிரபலமான உரை அங்குதான் பேசப்பட்டது.
அதில், இந்தியாவின் நிர்ப்பந்தம் காரணமாக இலங்கை-இந்திய ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ள வேண்டிய சூழ்நிலை இருந்தது என்பதைக் குறிப்பிட்டிருந்தார். இந்தியப் பிரதமர் ராஜிவ் காந்தி தமிழர்கள் மீது இலங்கை ராணுவம் அடக்குமுறையை பயன்படுத்தாதபடி இந்திய அமைதிப்படை பார்த்துக் கொள்ளும் என்று உறுதி கொடுத்திருப்பதாகத் தெரிவித்தார்.
“இந்தியாவும் இந்தியப்பிரதமரும் உறுதி கொடுத்திருக்கிறார்கள். அந்த உறுதி மொழியை நம்பி தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு எமது ஆயுதங்களை ஒப்படைக்கிறது. இந்திய அமைதிப்படை தமிழர்களைக் காக்கும் சக்தியாக இருக்கும் என நம்புகிறோம்” என்று அவர் கூறியபோது கூடியிருந்த மக்களிடையே பலத்த ஆரவாரம் எழுந்தது.
அப்படி ஆரவாரம் எழுந்த அந்தக் கணத்தில் – ஒரேயொரு கணத்தில் – அவரது முகத்தில் ஒரு மாற்றம் தோன்றி மறைந்ததை அந்தப் பேச்சை தொலைக்காட்சியில் பார்த்த சிலர் கவனித்திருக்கலாம்.
அந்த மாற்றத்துக்கு ஒரு அர்த்தம் இருந்தது என்பது மிக விரைவிலேயே தெரியவந்தது. (தொடரும்)