அன்று 16 ஆம் திகதி புதன்கிழமை. எட்டியாந்தோட்டை நகரிலிருந்து சுமார் 13 கிலோ மீற்றர் தூரத்தில் இருக்கும் வீஓயா தோட்டம் மலல்பொல பிரிவிலிருந்து கிடைக்கப்பெற்ற அதிர்ச்சிதரும் செய்தி மனதை ஈரமாக்கியது.
கொஞ்சி விளையாடும் பிஞ்சுக் குழந்தைகள் இருவர் தந்தையால் கொல்லப்பட்ட அந்தத் துயரச் செய்தியறிந்து மலல்பொலவுக்கு விரைந்தோம்.
வீ ஓயா ஆறு சலசலக்கும் சத்தம் செவிகளை நிறைக்க இறப்பர் மரங்களுக்கிடையே நகர்ந்தது எமது பயணம்.
மலல்பொல தோட்டத்தில் ஆங்காங்கே மக்கள் குழுமியிருந்து பேசிக்கொண்டிருந்தார்கள். சிறு சிறு லயன்களுக்கிடையே நடந்து சென்று சம்பவ இடத்தை அடைந்தோம்.
ஏழ்மையை சுமந்து காட்சியளித்தது அந்த வீடு. பொலிஸாரின் அனுமதியுடன் உள்ளே சென்றோம்.
முகத்தில் களங்கம் எதுவுமில்லாமல் நிரந்தரமான உறக்கத்திலிருந்த குழந்தைகளைப் பார்க்கையில் இதயம் கனத்தது. மூர்ச்சையற்றிருந்த அக்காவினதும் தம்பியினதும் உடல்கள் அருகருகே கிடத்தப்பட்டிருந்தன. சிறுவனின் வலது கைக்கு அருகில் விளையாட்டுக் காரும் நிலத்தில் கிரிக்கெட் மட்டையும் காணப்பட்டன.
இந்தப் பாலகர்களை கொல்வதற்கு எப்படி தந்தைக்கு மனம் வந்தது? என்ன காரணம்? இவர்கள் என்ன பாவம் செய்தார்கள் என்ற கேள்விகள் இயல்பாகவே எம் மனதில் எழுந்தன.
ஆம்! பிரபு என்றழைக்கப்படும் ஜோசப் பிரான்ஸிஸ் ராஜா (35) என்வருக்கும் மல்லிகா என்றழைக்கப்படும் சிவராமன் விஜயலட்சுமிக்கும் நடந்தது காதல் திருமணம்.
எட்டியாந்தோட்டையில் சீடி விற்பனை நிலையம் ஒன்றை நடத்திவந்த பிரான்ஸிஸ் பின்னாளில் அவிசாவளையில் உள்ள ஆடைத் தொழிற்சாலையொன்றில் தொழில்புரிந்து வந்தார். விஜயலட்சுமி கொஞ்ச காலம் தோட்டத்தில் தொழில் புரிந்தார்.
இவர்களிடையே எந்தக் குடும்பப் பிரச்சினையும் இருக்கவில்லை. குடும்பச் சுமைகளுடன் ஏழ்மையாக வாழ்ந்தாலும் கூட கணவனும் மனைவியும் சந்தோஷமாக வாழ்ந்து வந்தனர்.
எனினும் சிறு லயன் அறையில் வாழ்வது அவர்களுக்குச் சிரமமாக இருந்தது. அத்தோடு விஜயலட்சுமியின் பெற்றோர் லயன் அறைக்குச் சற்றுத் தூரத்தில் மாட்டுக் கொட்டிலைப்போன்று அமைக்கப்பட்ட வேறொரு அறையில் வாழ்ந்து வந்தனர்.
சாதாரண வெயில், சாதாரண மழை என்றால் கூட அந்தக் குடிலில் இருக்க முடியாது. அவ்வளவுக்கு கஷ்டமான வாழ்க்கை வாழ்ந்து வந்த பெற்றோரின் நிலையும் விஜயலட்சுமிக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் குடும்ப வறுமையை சமாளிப்பதற்காக விஜயலட்சுமி பணிப்பெண்ணாக வெளிநாட்டுக்குச் சென்றார். பின்னர் மீண்டும் இலங்கைக்கு வந்து திரும்பவும் வெளிநாட்டுக்குச் சென்றார்.
கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் மத்திய கிழக்கு நாடான டுபாய்க்கு சென்ற விஜயலட்சுமி தனது கணவனுடன் தொலைபேசியில் உரையாடும் போது கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன.
இது தொடர்ச்சியாக இடம்பெற்றுவந்த நிலையில் பொறுத்துக்கொள்ள முடியாத பிரான்ஸிஸ் தனது மனைவியின் சகோதரன் சிவராமன் ராஜமூர்த்தியிடம் இது குறித்து கூறியுள்ளார்.
இவ்வாறானதொரு சூழ்நிலையில் மனைவியுடன் இன்னுமொரு நபர் இருக்கும் படமொன்று மனைவியின் தொலைபேசியிலிருந்து பிரான்ஸிஸுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இதனைப் பார்த்தவுடன் பெரும் அதிர்ச்சியடைந்த அவர் நடந்தது அனைத்தையும் மனைவியின் பெற்றோரிடம் கூறியுள்ளார்.
கடந்த 15 ஆம் திகதி இரவு வழமைபோல் தொழிலை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்த பிரான்ஸிஸ் மனைவியின் பெற்றோரிடம், “பிள்ளைகளை நினைத்தால் தான் கவலையாக இருக்கிறது. ஏதாவது முடிவு செய்ய வேண்டும்” என ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.
அவர்களுடன் பேசிக்கொண்டிருந்து நித்திரைக்குச் செல்லும்போது நேரம் நள்ளிரவு 12 மணியைத் தாண்டியிருந்தது. அநேகமாக பிரான்ஸிஸ் நித்திரைகொள்வதற்கு வாய்ப்பிருக்கவில்லை. மனைவிமீது கொண்ட கோபத்தினால் பிள்ளைகளைக் கொன்றுவிட வேண்டும் என்றே மனம் துடித்துக்கொண்டிருந்தது.
அன்று அதிகாலை 1.30 மணிக்கு மனைவியின் சகோதரனுடைய வீட்டுக்குச் சென்று அவரை எழுப்பியிருக்கிறார் பிரான்ஸிஸ். தலையை கீழே குனிந்தவாறு ” நான் பெரிய தவறு செய்துவிட்டேன். என்னைக் கொன்றுவிடுங்கள். என் பிள்ளைகளை நிம்மதியான ஓர் இடத்துக்கு அனுப்பிட்டேன்.இந்தப் பாவத்துக்கு பரிகாரமே கிடையாது. என்னைக் கொன்றுவிடுங்கள்” எனக் கூறியிருக்கிறார்.
ஏதோ அசம்பாவிதம் நடந்துவிட்டது என்பதை புரிந்துகொண்ட ராஜமூர்த்தி உடனடியாக பிரான்ஸிஸின் வீட்டுக்கு வந்து பிள்ளைகளைப் பார்த்திருக்கிறார். அவர்கள் இந்த உலகை விட்டுப் பிரிந்திருந்தனர்.
பிள்ளைகளைக் கொலை செய்த குற்றவுணர்வில் தன்னையே வெறுத்த பிரான்ஸிஸ் வீட்டிலிருந்த கத்தியினால் தனது கையை வெட்டிக்கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.
உடனே அங்கு ஊரார் கூடினர். இது குறித்து தோட்ட முகாமையாளருக்கு அறிவிக்கப்பட்டது. முகாமையாளர் ஊடாக பொலிஸ் அவசர தொலைபேசிக்கு தகவல் வழங்கப்பட்டது. அதிகாலை 2.40 மணியளவில் எட்டியாந்தோட்டை பொலிஸார் சம்பவ இடத்துக்கு வருகை தந்தனர்.
சந்தேக நபரான பிரான்ஸிஸ் கைது செய்யப்பட்டார்.
எட்டியாந்தோட்டை இராமகிருஷ்ணா தமிழ் வித்தியாலயத்தில் 2 ஆம் தரத்தில் கல்வி கற்கும் ரம்யா சத்துரங்கி (7 வயது), தோட்டத்துப் பாலர் பாடசாலையில் கற்கும் சலிந்து சுசங்க (3 1/2 வயது) ஆகிய இருவருமே தந்தையால் கொலை செய்யப்பட்டவர்களாவர்.
மனைவியுடனான பிரச்சினை காரணமாகவே பிள்ளைகளை கொலை செய்ததாக பிரான்ஸிஸ் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
வெளிநாட்டில் தொழில்புரியும் தனது மனைவியின் தொலைபேசிக்கு அழைப்பு மேற்கொள்ளும் அதிகமான சந்தர்ப்பங்களில் வேறு ஒரு நபரே பதிலளிப்பதாகவும் மனைவியிடமிருந்து கிடைத்த குறுந்தகவல் புகைப்பட ஆதாரங்கள் என்பன தன்னை விரக்தியின் உச்சத்துக்கு கொண்டு சென்றதாகவும் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிள்ளைகளை கொலை செய்ததாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ள சந்தேக நபரான பிரான்ஸிஸ் எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக எட்டியாந்தோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அசேல கே. ஹேரத் கேசரிக்குத் தெரிவித்தார்.
உண்மையில் மனைவியுடன் பிரச்சினை ஏற்படும் பட்சத்தில் அந்தக் கோபத்தினை பிள்ளைகள் மீது காட்டி கொலை செய்யுமளவுக்கு துணிவது மிகபபெரிய குற்றமாகும்.
அதேவேளை குடும்பச் சுமையை தீர்ப்பதற்காக வெளிநாட்டுக்குச் சென்று குடும்பம் குறித்த அக்கறையின்மையுடன் செயற்படுவது கவலைக்குரியதாகும்.
வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக குடும்பப் பெண்களை அனுப்பும்போது இவ்வாறான பிரச்சினைகள் ஏற்பட்டால் எவ்வாறு தீர்வினைப் பெற்றுக்கொள்ளலாம் என்பது குறித்து வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தில் விளக்கம் அளிக்கப்படுகிறது.
குழந்தைகள் கடவுளுக்குச் சமமானவர்கள் என்று கூறுவார்கள். கள்ளம் கபடமற்ற உள்ளத்துடன் துள்ளி விளையாடும் வயதில் தந்தையே இயமனாக வருவார் என அவர்கள் சற்றும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
கணவனுக்கும் மனைவிக்கும் இடையிலான பிரச்சினையில் அநியாயமாக இரு குழந்தைகள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
முன்கோபத்தினால் தன் செல்லக் குழந்தைகளை கொலை செய்துவிட்டு சிறைக் கூண்டுக்குள் இருந்து வேதனைப்பட்டு ஒவ்வொரு நிமிடமும் துடித்துக்கொண்டிருக்கிறார் பிரான்ஸிஸ்.
இந்தச் சம்பவம் நமக்குப் பல பாடங்களை கற்றுக்கொடுத்திருக்கிறது. இனிமேலும் இவ்வாறான சம்பவங்கள் நடக்காதிருக்க ஒவ்வொருவரும் விழிப்புணர்வுடனும் சமூக அக்கறையுடனும் செயற்பட வேண்டியது அவசியமாகும்.
மலல்பொல தோட்ட லயன் குடியிருப்பில் வசிக்கும் அனைவரும் பிரான்ஸிஸ் தன் பிள்ளைகள் மீது எந்தளவு அன்பு வைத்திருந்தார் என்பதை எமக்குக் கூறினார்கள்.
பிள்ளைகளுக்கு சிறு எறும்பு கடித்தாலும் தோளில் தூக்கிக்கொண்டு வைத்தியசாலைக்கு ஓடிச்செல்லும் தந்தையா இப்படிச் செய்தார் என்பதை நம்ப முடியவில்லை என அயலவர்கள் அழுகையுடன் தெரிவித்தனர்.
எது எவ்வாறாயினும் அன்பை மாத்திரமே நெஞ்சில் சுமந்து சிட்டுக்குருவிகளாய் பறந்து திரிந்த அந்தப் பிஞ்சுகள் இன்று எங்களிடையே இல்லை. அன்றைய நாளின் விடியல் அந்தக் குழந்தைகளுக்கு மட்டும் அஸ்தமனமாகிப் போனதை எண்ணி வேதனையுடன் அங்கிருந்து புறப்பட்டோம்.
நன்றி- வீரகேசரி