உயிரிழப்பதற்கு முன்னர் சுனந்தா புஷ்கர், நள்ளிரவில் தம்மை தொலைபேசியில் தொடர்புகொண்டு கதறியழுததாக டில்லியைச் சேர்ந்த மூத்த பெண் பத்திரிகையாளரான நளினி சிங் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
“கடந்த ஜனவரி 17-ஆம் திகதி நள்ளிரவு 12.10 மணிக்கு சுனந்தா என்னை கையடக்கத் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். அப்போது, அவர் கதறி அழுததுடன் மிகவும் பத ற்றமாகவும் இருந்தார்.
அவருக்கும், பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் மெஹர் தராருக்கும் இடையே டுவிட்டர் மூலம் நடந்த கருத்து மோதல்தான் இதற்கு காரணம் என்று முதலில் நினைத்தேன்.
ஆனால், சசிதரூர் தனது கையடக்கத் தொலைபேசியிலிருந்த குறுந்தகவல்களை அழித்து விட்டதாக சுனந்தா என்னிடம் வருத்தத்துடன் கூறினார். நான், ஒரு பத்திரிகையாளர் என்பதால் அழிக்கப்பட்ட தகவல்களை மீட்டு படிக்க உதவ வேண்டும் என்று என்னிடம் கேட்டுக்கொண்டார்.
கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு, ஒரு விருந்து நிகழ்ச்சியின்போது சுனந்தாவை நான் சந்தித்தேன். அப்போது, பாகிஸ்தான் பெண் பத்திரிகையாளர் மெஹர்தராருக்கும் சசி தரூருக்கும் இடையிலான விவகாரம் பற்றி என்னிடம் விவாதித்தார்.
தராருடன் சசிதரூர் டுபாயில் நடத்திய சந்திப்பு குறித்தும் சுனந்தா மிகவும் கவலை கொண்டிருந்தார்” என்றார்.
கருத்து கூற சசி தரூர் மறுப்பு
இதனிடையே, சுனந்தாவின் பிரேதப்பரிசோதனை அறிக்கையில் மாற்றம் செய்ய தன் னை சிலர் வற்புறுத்தியதாக வைத்தியர் சுதிர் குப்தா கூறிய புகார் தொடர்பாக கருத்து கூற முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர் மறுத்துவிட்டார்.
“சுதிர் குப்தாவின் குற்றச்சாட்டு தொடர்பாக கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்று தெரிவித்த சசிதரூர், இது தொடர்பாக பொலிஸாரே விசாரித்து தீர்வு காண வேண் டும்” என்றார்.